Sunday, December 31, 2006

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

- வேதாத்ரி மகரிஷி.

Monday, December 25, 2006

ஓற்றை முடி

என்னை என்னால்
நம்ப முடியவில்லை
என் முகத்தை பார்க்கவே
எனக்கு பிடிக்கவில்லை.
தினமும் உபயோகித்த
ஞாபகம் இருக்கிறது.

கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?
அப்படியே மறைத்து
விட்டால்...
இல்லை கல்யாணத்துக்கு
முன்னால் சொல்லி விட்டால்...

-என் தலையில்
ஒற்றை வெள்ளை முடி!

Sunday, December 24, 2006

போய் வா!!!

என் வெற்றி
என் அழுகை
என் கோபம்
என் இயலாமை
என் சோகங்கள்
என் காதல்கள்

உன்னுடன் ஒத்துப் போகாதபோது
உன் செல்லச் சிணுங்கல்கள்
உன்னுடனான சின்னச் சண்டைகள்
உன்னால் சுருங்கிய
உறவுகளும் நட்பு வட்டங்களும்
உன்னால் குறைந்துபோன
தொலைபேசி
உரையாடல்கள்...

முகம் பார்த்து சிரிக்க மறந்து
சாட்டிங்கில் சிரிப்பு முகம்
காட்ட வைத்த உன்
கஞ்சத்தனம்...

அத்தனையையும்
கூட இருந்த
அமைதியாய் பார்த்தாய்
நீ...

நான் இழுத்த இழுப்புக்கு வராமல்
உன் பின்னால் என்னை
அலைய வைத்தாய்
ஒவ்வொரு முறையும்
ஜெயித்தது நீதான்...

என்னோடு நீ இருந்த
ஒவ்வொரு நாட்களும்
மறக்க முடியாதடி...

போய் வா 2006.

Thursday, November 23, 2006

வருத்தப்படாத வாலிபர்கள்

சம்பவம் 1:

வாலிபன் 1: மாப்பிள, எனக்கு கல்யாணம்.
வாலிபன் 2: உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா???
வாலிபன் 1: லவ்டா, இது லவ்டா...
வாலிபன் 2: அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை?
வாலிபன் 1: இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...
வாலிபன் 2: அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???
வாலிபன் 1: உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...
வாலிபன் 2:சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்பார்க்காதே...
வாலிபன் 1: !#$%^&*()

சம்பவம் 2:

முருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.

வாலிபர்: ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பெண்: என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.
வாலிபர்: நான் கன்சல்டன்டா இருக்கேன்.
பெண்: ஓ, அப்படியா???
வாலிபர்: MBBS ன்னா??? நர்ஸா???
பெண்:)(*&^%#$%^&*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...

கடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.

Thursday, November 16, 2006

குடைக்குள் மழை

வாசல் வரை வந்து
வழியனுப்பு விழா,
காருக்குள் அமர்ந்ததும்
உன் பறக்கும் முத்தம்,
என்னுடன் கை கோர்த்து
ஏரிக்கரையில்
நடை பயணம்...
செல்லச் சண்டையில்
மண்டையில் கொட்டு....

ஏய் பிசாசே,
யார் கண்ணுக்கும் தெரியாமல்
எனக்கு மட்டும் தெரியும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்?

Tuesday, November 14, 2006

தூக்கம் தொலைக்கும் இரவுகள்

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்??

Thursday, October 19, 2006

பொங்கல்

எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.

ஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்துக்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

ஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.

எங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.

என்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.

மார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.

அடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் "நாங்கெல்லாம் அந்த காலத்துல" என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Monday, October 16, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006

1. காலையில் வேட்பாளரின்
ஆவேச முழக்கம்
"சாதிகள் இல்லையடா மடையா".
இரவில் பக்கத்து ஊருக்கு
கூடுதல் பணப் பட்டுவாடா
அது வேறு சாதிக்காரர்கள்
இருக்கும் ஊராம்...

2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்
"ஸ்காட்ச்" உடன் ஊறுகாய்,
பழசை மறக்க மாட்டாராம் தலைவர்.

3. அனைத்து வேட்பாளர்களிடமும்
பணம் வாங்கியாயிற்று
யாருக்கு போடப் போகிறாய் ஓட்டு?
கேட்ட மனைவியிடம் சொன்னான்,
எல்லோருக்குந்தான்...
இவனுக ஜெயிச்சா
நாடு உருப்படவா போகுது.

Wednesday, September 27, 2006

தென்றல் வந்து தீண்டும் போது

நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...

நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.

கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.

கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...

http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

Saturday, September 23, 2006

ஏன்? எதற்கு? எப்படி???-2

Part 1

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன். இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?

2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே, இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா?

3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே, அது ஏன்?

4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே, அது ஏன்?

5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?

6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே, உண்மையா அதை படிக்கறீங்களா, இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா?

7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???

8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே, தனியா கோர்ஸ் போவீங்களா???

9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே, நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா?

10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே, இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா?

பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப்!!!

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!

தினமும் இங்க எட்டிப் பார்த்துட்டு போற 53 நல்ல உள்ளங்களே,

இப்படி இருந்த நான்



இப்படி ஆயிட்டேன்:-(


திரும்ப பழையபடி திரும்ப எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை. அதுவரை நீங்கெல்லாம் சந்தோஷமா இருங்க...

Monday, September 18, 2006

ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...

மகன்: ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?

அம்மா: இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?

மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???

அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?

மகன்: வீட்லதான்மா இருக்கேன். அக்கா, சித்தி, மாமா எல்லோருக்கும் போன் பண்ணிட்டேன். இன்னைக்கு நீதான் கடைசி. அப்புறம் என்ன நடக்குது அங்க?

அம்மா:இங்க ஒன்னும் இல்ல, திருப்பூர் போய்ட்டு வந்தேன். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா. உன்னைய பார்க்கணும்னார், ஒரு தடவைதான் அங்க போன் பண்ணேன்டா???

மகன்: முந்தா நேத்து மாமா செல்லுக்கு பண்ணுனேன்மா, அப்போ அவர் வெளிய இருந்தார். சரி, இன்னைக்கு பண்ணறேன்.

அம்மா: ரேவதி வந்து 2000 பணம் வாங்கிட்டு போனா. அவ குழந்தைக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

மகன்: ஏம்மா, போன மாசம் கூட பணம் குடுத்ததா சொன்ன? இப்படியே வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் குடுத்துட்டே இருக்கே? உன்னைய எல்லோரும் நல்லா ஏமாத்துறாங்க...

அம்மா: போடா, உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான். நானும் ரெண்டு பேரை பெத்து வளர்த்திருக்கேன், எனக்கு தெரியும்டா... அந்த குழந்தை நல்லா பெருசாச்சுன்னா அந்த புண்ணியம் எல்லாம் யாருக்கு??? எல்லாம் உங்களுக்குத்தான்...

மகன்: இதையே நீயும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கே, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல.

அம்மா: சரி, நீ என்ன பண்ணுன இந்த வாரம்?

மகன்: ஆபிஸ்... வீடு... இப்படியே 5 தடவை சொல்லு. அப்புறம் நேத்து முழுசா தூங்கினேன். அவ்வளவுதான்.

அம்மா: அதுக்கு நீ பெங்களூரிலயே இருந்துருக்கலாம், வாரா வாரம் ஊருக்காவது வந்துட்டு போயிட்டு இருப்பே...

மகன்: சரிம்ம்ம்ம்ம்மா..... வேற ஏதாவது சொல்லு.

அம்மா: சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன?

மகன்: நானே சமைச்சுக்கறேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உன்னோட அல்சர் இப்போ எப்படி இருக்கு?

அம்மா: அதை விடு, அது அப்படியேதான் இருக்கு. அத்தை சந்தியாவுக்கு 10 பவுன்ல கல்லு வைச்ச ஆரம் எடுத்திருக்கா. நானும் கூடப் போயிருந்தேன். அக்காவுக்குத்தான் அது மாதிரி ஒன்னு வாங்கி குடேன்டா...

மகன்: ஏம்மா 6 மாசம் முன்னாடிதான் அவ கிட்ட அது ஒன்னுதான் இல்லைன்னு வாங்கி குடுத்த... உங்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்.

அம்மா: டேய், அது உங்க அக்கா மகளுக்குடா...

மகன்: என்னது, அந்த நண்டுக்கா? அதைப் போட்டுட்டு நடந்தா அவ கீழ விழுந்துடுவாம்மா... மொத்தத்துல உனக்கு ஏதாவது மகளுக்கு சீதனமா குடுத்துடே இருக்கணும்... நீ நடத்து...

அம்மா: பையனுக்கு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்ன்னு கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.

மகன்: நீதான் ரெடிமேடா வெச்சிருப்பியே, என் பையன் இன்னும் குழந்தை மாதிரின்னு... அதையே சொல்ல வேண்டியதுதானே?

அம்மா: குரு பலன் 29 வரைக்கும் இல்லை, அப்புறந்தான் பார்க்கணும்ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் நம்பற மாதிரி இல்லை. பையனே பார்த்துட்டு இருக்கான்னு சொல்லிட்டேன்.. இப்போ பேச்சே இல்லை. சுதந்திரமா வெளிய போயிட்டு வர முடியுது.

மகன்: நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.

அம்மா:(சிரிப்புடன்)எல்லாம் நல்லபடியா நடக்கும். எம் பையனைப் பத்தி எனக்கு தெரியாதா?

மகன்: சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...

அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?

மகன்: இல்லம்மா... எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசிக்கிறேன்.

அம்மா: எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தைதான் பேசேன். ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?

மகன்: வச்சுர்றேன்...

Sunday, September 10, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

இரவு மணி 8. பஸ்ஸிலிருந்து இறங்கி 10 நிமிடம் வீட்டுக்கு நடக்க வேண்டும். வழக்கம் போல் விளக்குக் கம்பம் விளக்கில்லாமல் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. போன வாரம் பெய்த மழையில் ரோடு எது குழி எது என தெரியாமால் எல்லா இடமும் குழியாக இருந்தது. என்னிடமிருப்பதோ நம்பரெல்லாம் அழிந்து போன ஒரு பழைய நோக்கியா 1108, அதிலிருக்கும் வெளிச்சத்தை வைத்து சமாளித்துக் கொண்டே போய் விடலாம். "ஏன்டா, அந்த போனைத்தான் தூக்கி போட்டுட்டு வேற வாங்குறது? இன்னும் அதை கட்டிட்டு அழுதுட்டு இருக்கே..." என யாராவது திட்டினால் "இதை வாங்கி அவ ஒரு தடவை பேசினா... நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன்" என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.

இருட்டாய் வேறு இருக்கிறது, துணைக்கு யாராவது வந்தால் பேசிட்டே போயிடலாம். இல்லை, யாராவது வந்தால் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? என கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். என்னைத் தவிர ரோட்டில் வேறு யாரும் இல்லை. யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான். நான் எப்போ மிஸ்ஸுடு கால் விட்டாலும் பொறுப்பாய் போன் பண்ணும் சீனிக்கு போன் பண்ணினேன். ஒன்னு, ரெண்டு என எண்ணி மூனாவது ரிங்கில் கட் பண்ணினேன். ஒரு வண்டி மெயின் ரோடில் இருந்து நான் இருந்த ரோட்டுக்கு திரும்பியதை பார்த்ததும் நான் இன்னும் 2 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என என் உள்ளுணர்வு சொல்லியது.

நான் கையை ஆட்டி அந்த வண்டியை நிறுத்துவதற்க்கும் சீனியின் கால் வருவதற்க்கும் சரியாய் இருந்தது. "சீனி, ஒரு முக்கியாமானவங்க வந்திருக்காங்க, நானே உனக்கு அப்புறம் போன் பண்ணரேன்" என போனை கட் செய்தேன். நிமிர்ந்து பார்த்தால் வண்டியில் 2 பேர் உக்கார்ந்திருந்தார்கள். அடடா, கால் பண்ணின சீனியையும் கட் பண்ணியாச்சு, இனி வேற யாரையாவதுதான் கூப்பிட வேண்டும் என நடக்க ஆரம்பித்ததும் "சார், மலர் ஹாஸ்பிடல் எப்படி போகணும்?" என வண்டியிலிருந்தவன் கேட்டான். "அதுக்கு மெயின் ரோட்டில் போகணும், 10 கிலோ மீட்டர் வரும்" என பேச்சை முடித்தேன்.

"இல்லைங்க, பிரெண்டுக்கு அடிபட்டிருக்குங்க. இதுல போனா சீக்கிரம் போகலாம்ன்னு சொன்னாங்க ,அதான் வந்தோம்..." என பரிதாபமாக சொன்னான். நான் இந்த ஏரியாவிலதான் ரொம்ப நாளா இருக்கேன், அப்படியெல்லாம் ஒரு வழியும் கிடையாது. பையன் தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்துட்டானா, இல்லை..." என நான் எனக்கே உண்டான ஆர்வக் கோளாறில் இழுத்த போது "அவன் கூட யாரும் இல்லைங்க, நாங்க போய் சேர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் பிடிக்கும். என் போன்ல பேலன்ஸ் இல்லை,பக்கத்துலையும் ஒரு பூத் இல்லை, உங்க போனை குடுத்தீங்கன்னா ஒரே ஒரு கால் பண்ணிட்டு குடுத்திடுவேன்" என பின்னால் இருந்தவன் கேட்டான்.

"ஆபத்துக்கு உதாவாதவன் எல்லாம் மனுஷனே இல்லை, இந்தாங்க போன்" என பின்னாலிருந்தவனிடம் குடுத்தேன். "டேய், வண்டியை ஓரமா நிறுத்து. பேசிட்டு அப்புறம் போலாம்" என பின்னாலிருந்தவன் சொன்னவுடன் ஒரு யு டர்ன் எடுத்து மெயின் ரோட்டைப் பார்த்து வண்டியை நிறுத்துவது மாதிரி நிறுத்தி வண்டியை விரட்டி சிட்டாய் பறந்தான். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் அவர்கள் மெயின் ரோட்டிற்க்கு அருகில் இருந்தார்கள். என் போன், பேலன்ஸ் 200 ரூபாய் என் கண் முன்னே காணாமல் போய் கொண்டிருந்தது. மெயின் ரோட்டின் விளக்கு வெளிச்சத்தை தொட்டவுடன் வண்டி திரும்பவும் என்னைப் பார்த்து திரும்பியது.

எனக்கு தெளிவாக தெரிந்தது மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகப் போவது நான்தான் என்று. 10 காசுக்கு தேறாத போனுக்கு எங்களை இவ்வளவு பொய் சொல்ல வெச்சுட்டியேன்னு பைக் பார்ட்டிகள் வந்து மிதிக்கப் போறாங்கன்னு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். என் உள்ளுணர்வு சொல்லியபடி 2வது நிமிடத்தில் வீட்டிலிருந்தேன்.

Saturday, September 09, 2006

ஒரு பயணக் குறிப்பு

3 நாள் கண்காணாத எடத்துக்குப் போய் தொலைஞ்சு போயிட வேணும்ங்கற எண்ணம் எல்லோருக்கும் இருந்துட்டே இருந்தது. ஒருத்தன்தான் வண்டி ஒட்டும் முடிவில் இருந்தோம். ஆனால கார் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் SUV (SUV க்கும் எங்களுக்குமான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை) மட்டுந்தான் என்று சொன்னதும் பாதுகாப்பு கருதி என்னையும் டிரைவராக சேர்த்து வண்டியை வாடைகைக்கு எடுத்தோம்.

நைட் ஒரு மணிக்கு புறப்பட்டு கிண்டல், கேலி, குத்துப் பாட்டு என கீரின் பே தாண்டியதும் வண்டி நான் ஓட்ட ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கப்புறம் வண்டி ஓட்டுவதால் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டினேன்.

020 Munising 009

காலங்கார்த்தால போட்டோ எடுக்குறோம்ன்னு வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுத்து வழியை தவற விட்டு அப்புறம் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தோம். 54 மைலுக்கு ஒரே நேர்கோடாய் ஒரு ரோடு (H13).

020 Munising 028

Munising போய் சேர்ந்ததும் முதலில் முகத்தில் அறைந்தது நீர்தான். அழுகின முட்டையை யாரோ தண்ணியில் கலந்து விட்டது மாதிரியான வாசம். அழுது கொண்டே குளித்து முடித்தேன். உலகிலேயே மிகப் பெரிய தூய நீர் ஏரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சுத்தமான நீர் இல்லை என்பது அமெரிக்காவிலும் இருக்கிறது. படம் போடும் பாறைகளைப்(Pictured Rocks) பார்த்து விட்டு திரும்பும்போது ஒரு உலக சாதனை சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருந்தது. 50 நிமிடங்களில் 150 போட்டோ (ஒரு நிமிஷத்துக்கு 3) என அடித்து தள்ளிவிட்டு அப்பாடா என உக்கார்ந்தோம்.

020 Munising 154

மதியம் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு போனது Au Sable Light Station. இதுக்கு ஒரு மைல் நடக்க வேண்டும். போகும் வழியில் தரகரிடம் குடுக்க ரெண்டு மூணு போட்டோ எடுத்துட்டு கலங்கரை விளக்குக்குப் போனால் மேலே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேர்ல பார்த்ததை விட இந்த போட்டோல இன்னும் நல்லா வந்திருக்கு.

020 Munising 207

அப்புறம் காட்டுப் பாதையில் போய் சேர்ந்த இடம் Log Slide. மக்கள் அந்த காலத்துல மரத்தை வெட்டி வெட்டி இந்த வழியாத்தான் அமெரிக்காவின் மத்த பாகங்களுக்கு கொண்டு போனாங்க. இயற்கையான ஒரு அமைப்பை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி காடுகளையெல்லாம் மொட்டையடிச்சாங்க. என்ன சந்தோஷம்னா காடுகள் இன்னமும் அப்படியேதான் இருக்கு.

020 Munising 227

Log Slide ல இருந்துட்டே Grand Sable Banks and Dunes பார்த்தோம். எங்க ஊரு ஏரியில இந்த பக்கமிருந்து கத்துன அந்த பக்கம் கேக்கும். ஆனால், அவ்வளவு பெரிய ஏரி, அதுக்கு பக்கத்தில் மணல் மேடு, அடர்ந்த காடு ன்னு விசித்திரமா இருந்தது லேக் சுப்பிரீயர்.

020 Munising 220

அடுத்த பார்த்தது Sable Falls. என்ன இருந்தாலும் குற்றாலம், அதிரப்பள்ளி அருவி மாதிரி வருமா? னெல்லாம் ஒப்பீடு செய்யாமல் அழகை அனுபவிக்க மட்டும் செய்தோம்.

Munising 153

எட்டு மணிக்கு சூரியன் உள்ளே போய் வானத்தில் கலர் கோலம் மட்டும் மீதி இருந்தது. அதையும் கேமராவில் அடைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

Munising 169

விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு.

020 Munising 251

காலையில் எழுந்து Mackinac Island போனோம். ஒரு சாதரண தீவை ரொம்ப ஏத்தி விட்டிருக்காங்க. ஒரு நாள் ஓடுனதே தெரியவில்லை.

020 Munising 401

மூனாவது நாள் திரும்ப Munising. Wagner falls, Munising Falls, Miners Falls பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பினோம்.

Munising 261

Munising 270

020 Munising 4532

எல்லோரும் எடுத்த 850 போட்டோல எதைப் போடுவது எதை போட வேண்டாம் என்பதில்தான் குழப்பம் வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு இதைப் போட...

செப்டெம்பர் 10, 2006 ஞாயிறு:

நெட்டில் இருந்து சுட்டதா என சூடாக சந்தேகம் வரும் என்பதால் என் படம் ஒன்னையும் வெட்டிப்பயலின் வார்த்தைக்காக இணைக்கிறேன்.

020 Munising 4451

Wednesday, September 06, 2006

ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!

"படம் போடும் பாறைகள் (Pictured Rocks, Munising, MI, USA) - ஒரு பாமரனின் பயணக் குறிப்பு"ன்னு எழுதிட்டு இருந்தேன்.தமிழோவியத்தில் இந்த வாரம் என்னா இருக்குன்ன்னு பார்த்தா என் கதை!!!

இந்த கதை எப்படி தமிழோவியத்துக்குப் போச்சு அப்படிங்கறதே ஒரு பெரிய கதை... நிலா உறவுன்னு தேன்கூடு போட்டிக்கு தலைப்பு குடுத்தாலும் குடுத்தாங்க நானும் ஒரு கதையை நாலு மணி நேரம் உக்கார்ந்து ரெடி பண்ணி பிளாக்ல போட்டு நண்பன் ஒருத்தன் கிட்ட எப்படிடா இருக்குன்னு கேட்டா "இதை அனுப்ப போறீயா?" ன்னு கேட்டான். ரைட்டோய், அவ்வளவுதான் நம்ம கதைக்கு ஆயுசுன்னு உடனே தூக்கி குப்பையில போட்டுட்டு வேலையப் பார்த்துட்டு இருந்தேன்.

என்ன இருந்தாலும் நானே எழுதுனது, பத்தோட பதினொன்னா இதுவும் என் பிளாக்கை அலங்கரிக்கட்டும்ன்னு ஒரு வாரம் கழித்து குப்பைத் தொட்டியில் இருந்து தூசி தட்டி எடுத்து போடலாம்னா அங்க பாபா எல்லோரையும் வரிசையா நிக்க வைச்சு லெப்ட், ரைட், மேல, கீழ ன்னு பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருந்தாரு... அவரு சொன்னதுக்கு அப்புறம்தான் என் கதையை படிச்சி பார்த்தேன் (நாங்கெல்லாம் எழுத மட்டுந்தான் செய்வோம், படிக்கறதுதான் உங்க தலையெழுத்து) அப்படியே கதிர் படம் மாதிரி இருந்தது. கதிர் படமாவது தியேட்டர் வரைக்கும் வரும், என் கதைக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. இதை மட்டும் போட்டோம் நம்ம கதைக்குத்தான் அவர் போடும் முதல் 0 ன்னு நினைச்சிட்டு (சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...) ன்னு திரும்ப வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

ஆடுன காலும் பாடுன வாயும் தான் சும்மா இருக்காதே... ஏதாவது இணைய இதழுக்கு அனுப்பி வைப்போம்ன்னு தமிழோவியத்துக்கு "வறுமையில் வாடும் புலவன் நான், ஏதாவது போட்டுக் குடுங்கன்னு" ரொம்ப டீசண்ட்டா பிச்சை எடுத்திருந்தேன். அவங்களும் பரிதாபப்பட்டு (இன்னமும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்னையும் எழுத்தாளராக்கிட்டாங்க... உங்க தலையெழுத்து, நான் என்னங்க பண்ண முடியும்???

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணி தள்ளிட்டாங்க. நான் வேற தனியா சொல்லணுமா என்ன??? இது நாங்க வேட்டையாடு விளையாடு படத்துக்கு போய் வந்த பயணக் கட்டுரை.

தமிழ் படம் எதுவும் எங்க ஊர்ல ரிலீஸ் பண்ண மாட்டாங்க (அருள் மட்டும் ஆச்சு, பாய்ஸ், விருமாண்டி ரெண்டும் பக்கத்து ஊர்ல ஆச்சு) நாங்க சிகாகோக்கு வண்டி கட்டிட்டு போய்த்தான் படம் பார்ப்போம். தமிழ் மக்கள் யாருக்கு நியூஸ் கிடைச்சாலும் உடனே கூட்டம் போட்டு யாரு கார்ல யாரு, எத்தனை மணி ஷோ ந்னு கிளம்பி போய்ட்டு நிதானமா ஊர் சுத்திட்டு வருவோம். இப்போ கூட்டம் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதானால தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு நாங்க நாலு பேரு கிளம்பறதா முடிவு பண்ணிட்டோம். ஒரு புது நண்பர் நான் வர்றப்ப மட்டும் உங்களோட வரட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டு நாங்க வண்டியை கிளப்பினோம்.

அந்த தியேட்டரில் அதுதான் நாங்க பார்க்கும் முதல் தமிழ் படம் அதனால வழி மாறிட கூடாதுன்னு உஷாரா ரோட்டையே பார்த்துட்டு இருந்ததுல பெருசா ஒன்னும் பேசிக்கவே இல்லை. தியேட்டரில நிறைய நம்மூர்காரங்களை பார்த்தவுடனே எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு கூட வந்த ஒரு பட்சி சிறகடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதை அமைதிப்படுத்தறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. தியேட்டரில் இருந்து சிவாவுக்கு ஃபோன் போட்டு படத்து வந்தால் சிகாகோவில் வலைப்பதிவர் மாநாடுன்னு ஒரு பதிவு போடலாம்னா அவர் வர முடியாத நிலைய சொன்னார்.

கூட்டத்துல அடிச்சு புடிச்சு உள்ள போயி உக்கார்ந்து படம் ஆரம்பிச்சது முதல் சின்ன சின்ன ஜோக்குகளை ரசிச்சுட்டும், கமெண்ட் அடிச்சிட்டும் விளையாட்ட போயிடுச்சு முதல் பாதி. பொண்ணு யாரு மாதிரி வேணும்ன்னு கேட்டா கமலினி மாதிரின்னு கமலினியைப் பார்த்த முதல் ஷாட்டிலேயே முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கதாநாயகியை பார்க்கும் போதும் நினைச்சுக்கறது, ம்ம்ம்ம்....... நீங்க இதை கண்டுக்காதீங்க. ஏன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்திருக்கும் என அமெரிக்கா தொடர்பான சில தேவையில்லாத காட்சிகளைப் பற்றி இடைவேளையில் ஒரு குட்டி விவாதம் பண்ணிட்டு ரெண்டாவது பாதி பார்க்க உக்கர்ந்த்தா அது கொஞ்சம் சோதனையாத்தான் இருந்தது.

பரவாயில்லை, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தால் அந்த புது நண்பர் வந்து சேர்ந்திருந்தார். எல்லோரடையும் அறிமுகப் படலம் முடிந்தவுடன் ரெண்டாவது பாதி உக்கார முடியலை என ஆரம்பித்து வைத்தார். காரில் அப்படியே ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொரு காட்சியாக எல்லோரும் அலசி காயப் போட்டோம். இந்த படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள், சப் டைட்டில் இருந்தாலும் மக்களை ரீச் ஆகாது. A சென்டர் மக்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும், கட்டாயம் அங்க ஒடும் என சொல்லி முடித்தார். பேசறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அவங்கவங்க மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருந்தப்போ என்னைய பார்த்து "உங்களுக்கு படம் புடிச்சிருக்கா?" ந்னு கேட்டார்.

நான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ என் மூளையில் ஒரு ஃபிளாஷ்... அப்போ நான் A சென்டரா??? என மனசுக்குள் நினைத்தது வாயிலும் வந்துருச்சு. பசங்க எல்லோரும் சிரிச்ச சிரிப்புக்கு புது நண்பருக்கு அர்த்தம் புரியலை. பாஸ், சந்துல அவன் ஊரை சிட்டின்னு சொல்லிக்கிறான். பாவம், அவந்தான் என்ன பண்ணுவான், இப்படியாவாது அவன் ஊரை சிட்டின்னு மாத்திக்கட்டும்ன்னாங்க... மனசுக்குள்ள மட்டும் சொல்லிருந்தா போன பதிவோட டைட்டிலை மனசுக்குள்ள சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாம நம்ம சொந்த ஊரு ரொம்ப மாறிடுச்சுன்னா நாம அன்னியப்பட்டு போயிடுவம்ல... எப்பவும் நாம் நினைக்கறதா நடக்குது????

மூணு நாளைக்கு லீவு... அடுத்ததும் பயணக் கட்டுரைதான்... லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன். மத்த நாலையும் ஏற்கனவே பார்த்தச்சு, இது ஒன்னுதான் பாக்கி...

Thursday, August 31, 2006

நானாத்தான் நாறீட்டனா???

என்னவெல்லாம் செய்யலாம்ன்னு 5 மாசத்துக்கு முன்னாடி ஒன்னு எழுதினேன். ரொம்பக் குறைவான பேருதான் படிச்சிருப்பாங்க. சரி மிச்ச நச்சமிருக்கிறதையும் போட்டுருவோம்ன்னு போட்டா இப்பவும் கொஞ்சம் பேருதான் படிச்சிருக்காங்க. என்னடா எழவு இதுன்னு என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தா ஒன்னு நான் நாறுன மாதிரி இருக்குற பதிவு இல்லைன்னா நாறுனது நாந்தான்னு நெனைச்சுட்டு கமெண்ட் வாங்கின பதிவுதான் ரொம்ப அதிகமாயிருந்தது. ஓ, அப்ப நானாத்தான் நாறிட்டு இருக்கேனா? காமெடியன் சொல்லறதையெல்லாம் மக்கள் காதுல வாங்கிக்க மாட்டோங்களோ? ந்னு வேலைய பார்த்துட்டு இருந்தேன். இப்படி நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இந்த 2005 சனிப் பெயர்ச்சிக்கு அப்புறம் வந்ததா இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். எங்க ஊரு கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். பக்கத்து ஊரு பசங்களுக்கும் எங்க ஊரு பசங்களுக்கும் மேட்ச். மத்தியானம் மொட்டை வெயிலில் கருப்பராயன் கோவில் குதிரைக்கு கீழே ஒண்டி உக்கார்ந்துட்டு இருந்தோம். வந்த பக்கத்து ஊரு பசங்க நேரா வந்து என்ன எங்களுக்கு பயந்துட்டு இப்படி உக்கார்ந்து இருக்கீங்களான்னு லந்து பண்ணவுடனே செந்திலுக்கு வந்ததே கோவம்,தைரியமான பசங்களா இருந்தா பேட்ல பேசுங்கடா, தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். பக்கத்து ஊரு பசங்க கொஞ்சம் கலவரமாயிட்டாங்க.

சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது. பேட்டிங் நாங்கன்னு சொல்லிட்டு வந்து செந்திலை பேட் புடிக்க சொன்னா எனக்கு கை ஈரமா இருக்கு, நீதான் சிக்ஸர் சிக்ஸரா அடிப்பியே நீயே முதல்ல ஆடுன்னு சொன்னான். எனக்கு தரைக்கு மேலெ ஓரடி பறக்கிற மாதிரி இருந்தது.

அதே வேகத்தில் பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு தொலைஞ்சிங்கடா என கர்ஜனை பண்ணீட்டு உள்ளே போனா ரொம்ப தூரத்தில் ஒருத்தன் பந்தோட நின்னுட்டு இருந்தான். எதுக்குடா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து பந்தை வீசி, ம்ம்ம்ம்??? அதெப்படியும் கலர் தோட்டத்துக்குள்ள நான் அடிச்சா போகப் போகுது. அலட்டிக்காம பக்கதிலிருந்து வீசுன்னு அவனை காமெடி பண்ணியதில் அவன் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லாம் பயம் என சிரிச்சிட்டே பந்தை அடிக்க தயாரானேன். முதல் பந்து நடு பிட்ச்சில் குத்தி லட்டு மாதிரி பேட்டுக்கு வந்தது. தூக்கி அடிச்சா பந்து நேர மேல மேல போயிட்டு நேர பந்து வீசினவன் கையிலயே விழுந்தது.

உணர்ச்சிவசப்பட்டு பேட்டை ரொம்ப ஓவரா தூக்கிட்டமே என தலையை தொங்க போட்டுட்டு வெளிய வரும் போது "முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.


மொத்தம் 27 ரன், அவ்வளவுதான். ஏன்டா போறவன் எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு அவுட் ஆகறீங்க, நின்னு விளையாடுங்கடான்னா பொடி சுடுதுடா, உள்ளையெல்லாம் ரொம்ப நேரம் நிக்க முடியலைன்னு நொள்ளை சொன்னாங்க. சரி வாங்கடா அவனுகளையும் அப்படியே உருட்டி எறிஞ்சிறலாம்ன்னு முதல் ஓவரை வீசப் போனேன். வேகமாக வந்து பந்தை எரிந்ததில் பேட்ஸ்மேன் தலைக்கு மேலெ பறந்த பந்து கீப்பரை ஒரு சாத்து சாத்திருந்தது. ரெண்டாவது பாலும் நேரா அவன் நெஞ்சு மேல விழுந்து இவன் பந்து வீசினா நான் பின்னாடி நிக்க மாட்டேன்னு ஓடிட்டான். இவன் இந்த பாலும் நேர வீச மாட்டானு பேட்ஸ்மேன் சும்மா நின்னுட்டிருந்தான். இந்த பந்து நேரே போய் ஸ்டம்பில் அடிச்சு அவன் அவுட். இப்படி ஓவருக்கு 14 பால் வீசி 3 பேரைக் காலி பண்ணியிருந்தேன். வைடு , நோ பாலுக்கு ரன் இல்லைன்னு அவுனக செட் பண்ணின ரூல் எங்களுக்கு நல்லா வேலை செஞ்சுது. இபபடியே போறவன் எல்லாம் 15, 16 பந்து வீசி 25 ரன்ல அவுனுக எல்லாத்தையும் சுருட்டியாச்சு.

தண்ணி காட்டீட்டம்லன்னு குதிச்சிட்டு இருந்தப்போ இந்த பொழப்புக்கு பேசமா எருமைக்கு தவிடு காட்டலாம் இவனுகளோட கிரிக்கெட்ன்னு எவனாவது வந்து கூப்பிட்டீங்க அங்கேயே கிடையா போட்டு மிதிப்பேனுட்டு போயிட்டான் ஒருத்தன். இதுலிருந்து என்ன தெரியுதுன்னா சனிப் பெயர்ச்சி எல்லாம் சாதாரணம்ன்னு தெரியுது. சேச்சே... இதை வைச்சுட்டெல்லாம் நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறதுன்னு முடிவு பண்ணக் கூடாதுன்னு திரும்ப கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

Wednesday, August 30, 2006

என்னவெல்லாம் செய்யலாம்-2

பெரியவனாகி என்னடா செய்யப் போற? என்ற கேள்விக்கு எரோப்ளேன் ஓட்டப் போறேன் என்றானாம் பள்ளிக்குப் போகாமல் டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வீரன் மகன். ஒழுகும் மூக்கை சரியாகத் துடைக்கத் தெரியாத சுபாவுக்கு தம்பி முருகனை பார்த்துக் கொள்ளும் ஆயா வேலை. தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் இன்னும் இந்த நிலைதான்.

திராவிட குஞ்சுகள், ஆரிய வந்தேறிகள், திமுக அடிவருடி, அதிமுக ரவுடி கும்பல்,பாமக மரம் வெட்டி கட்சி, சிதம்பரத்தில் தமிழ் மறுப்பு, பெரியார், ராஜாஜி ந்னு ஆளாளுக்கு அடி பின்னி எடுத்துட்டு இருந்தாலும் சத்தமில்லாமல் உதவி செய்யும் நிறைய நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் விளம்பரங்களை விரும்பாதவர்கள். ஆனால் இதை வெளியே சொன்னால் இவர்களால் உதவி பெற்று பள்ளிக்கு செல்லும் 10 வீரன் மகன், 10 சுபா 1000 மடங்காக பெருகக்கூடும். நான் இதைப் பற்றி ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன்.

இந்த பதிவு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கானது. பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு இந்திய ரூபாயை விட அதிகம் என்பதால் அவர்களின் குறைவான பங்களிப்பும் ஒரு நிறைவான செயலை செய்து முடிக்கும். இங்கு நிறைய பேரின் முன்னோர்கள் நிச்சயம் ஒரு கிராமத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அந்த கிராமத்திற்குண்டான அடிப்படை வசதிகளில் ஒரு பங்கை நிறைவேற்றி வைக்கலாம். இன்னமும் கிராமத்தில் காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கென ஒரு பொது கழிப்பறை இல்லாத கிராமங்கள் இன்னும் நிறைய. 10 கிராமத்துக்கு ஒரு ஆரம்ப சுகதார நிலையம் இருக்கும் ஆனால் வரும் நோயாளிகள் உட்கார ஒரு பலகை இருக்காது. ஆரம்பப் பள்ளி என ஒரு கட்டிடம் இருக்கும் ஆனால் 5 வகுப்புகளுக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடக்கும்.

இதைவிடக் கொடுமை பைபாஸ் சர்ஜரி, சிறுநீரகத்தில் கோளாறு போன்ற பணம் அதிகம் செலவு வைக்கும் வியாதிகள் வருவதென்னவோ தினக்கூலிக்கு செல்பவர்களின் குழந்தைகளுக்குதான். நல்லாத்தான் விளையாடிட்டு இருந்தான் திடீர்ன்னு சாமி கூப்பிட்டுக்கிச்சி என அவர்கள் ஆற்றாமையை அடக்க முடியாமல் கடவுள் மேல் பழியைப் போடுவார்கள்.

வருடத்துக்கு ஒரு முறை ஒரு சிறிய அளவு பணம் ஒதுக்கி உங்களால் இயன்ற அளவு உங்கள் கிராமத்துக்கு உதவலாம். உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Sunday, August 27, 2006

கேமரா கவிஞர்கள்

எங்காளு ஒருத்தன் வெளிய போயிட்டு வரலாம்னா கார் சாவி, வீட்டு சாவி எடுத்திருக்கானான்னு பார்க்க மாட்டான் கேமெராவைத்தான் முதலில் எடுப்பான். அவன் எடுத்த ஃபோட்டோ ஒன்னு ஏற்கனவே நான் இங்கே போட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மில்வாக்கீ வந்த முதல் வாரமே நாங்க ரெண்டு பேருமே சர்க்யூட் சிட்டியில $400 க்கு கேமரா + $80 க்கு மெமரி ஸ்டிக் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சதுல( அதுவே இன்டர்நெட்ல வாங்கிருந்தா இன்னும் சீப்பா இருந்திருக்கும், ஆனா எனக்கு இன்னைக்கே வேணும்ன்னு வாங்குனது) அவன் மட்டும் இன்னும் எடுத்துட்டே இருக்கான்.

சரி, சமாச்சாரம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஃபோட்டோ எல்லாம் எங்க புடிக்கிற நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதாலா ஃபோட்டோ ஏதாவது சுட்டுட்டு வரலாம்ன்னு flickR பக்கம் ஒதுங்கினேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி தேடிட்டு இருந்தா நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருந்த முகம் நான் ரொம்ப கூலா இருக்கானே ன்னு கேட்டுட்டு இருந்தது.

ரெகுலரான பட்டேல் ஸ்டைல் ஃபோட்டோகளோட கொஞ்சம் பார்க்கற மாதிரியும் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறான். அவன் எப்படியும் வாரம் ஒரு முறை ஃபோட்டோ சேர்ப்பது உறுதி. நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் எப்படியும் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கும்.


பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

Friday, August 25, 2006

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ

Long Islan

வரலாறு:

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீயானது முதன் முதலில் ஹேம்ப்டன் பேஸில் (Hampton Bays) உள்ள ஓக் பீச் இன் (Oak Beach Inn) பார் டெண்டர் ரோஸ்பட் (Rosebud) (அ) ராபெர்ட் பட் (Robert Butt) என்பவரால் 70களில் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது.

செய்முறை:

22.5 மில்லி டெக்கீலா, 22.5 மில்லி ஜின், 22.5 மில்லி வெள்ளை ரம், 22.5 மில்லி வோட்கா, கொஞ்சம் போல சர்க்கரை, எலுமிச்சை ரசம், கோலா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் கிளாஸில் ஊற்றி மேற்புறம் எலுமிச்சை துண்டை சொருகவும்.

*************கட்...கட்...கட்...****************

சர்வர் மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களையும் வைத்து விட்டு நகர்ந்தவுடன்,

நம்பர் 1: அந்த லெக் பீஸ் எடு மாப்பிள...

நம்பர் 2: டேய், நீ கைகாட்டி சொல்லிட்டு இருக்கிறது மீன் டா... மீன் ல லெக் பீஸ் கேட்ட முத ஆளு நீதான்டா...

கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: (தட்டில் இருந்ததை பார்த்துக் கொண்டே) என்ன கருமம்டா இது, வாயிலயே வைக்க முடியல...

நம்பர் 3: புடிக்கலைன்னா எனக்கு குடு நான் சாப்பிட்டு போறேன். சும்மா நை நைன்னு குதிச்சுட்டு இருக்க...

நம்பர் 4: தல, அவரு சொன்னது மீனை... இதுதான் சாக்குன்னு அப்படியே மொத்தமா உறுவரீங்க போல இருக்கு... உங்ககிட்ட உஷாரா இருக்கனும்...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: என்னடா வேணும் உனக்கு???

நம்பர் 4: நீங்க என்ன சொன்னீங்களோ அதையோ சொல்லுங்க...

நம்பர் 2: நான் குடிக்க தண்ணி கேட்டேன், அதையே சொல்லட்டுமா???

நம்பர் 4: என்னது தண்ணியா? அதை மனுஷன் குடிப்பானா? சாப்படறக்கு வேற ஏதவது சொல்லுங்க...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 1: மாப்பிள, நீ இந்த கோக் குடிக்கலைன்னா நான் எடுத்துக்கட்டுமா?

நம்பர் 2: சரி எடுத்துக்கோ. ஒரு நிமிஷம் இரு. ஸ்ட்ராவை திருப்பி போட்டுக்கிறேன். இப்போ குடி...

நம்பர் 1: அப்போத்தான் உன் எச்சை எல்லாம் நல்லா கோக்கில் கலக்குமா??? எல்லா என் நேரம்....

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 5: இனிமேல் நான் பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்....

நம்பர் 2: அப்புறம் அந்த சாந்தி ...

நம்பர் 5: சாந்திகூட எப்படியாவாது பேசிடலாம்னுதான் பார்க்கறேன்...

நம்பர் 2: பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை... எல்லாம் கலி முத்திப் போச்சு...


டிஸ்கி: லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீக்கும் மேற்கண்ட உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.

Wednesday, August 23, 2006

கொடுத்தேனா இதுவரை???

டீச்சர் அடித்தார் என
பள்ளியை மாற்றினார்
எனக்கு வந்த காமாலைக்கு
அவர் பத்தியம் இருந்தார்
நான் பரிட்சை எழுத
எனக்கு முன் முழித்தார்


எனக்கெது பிடிக்கும் என
பார்த்து பார்த்து
செய்வதில்
என் அம்மாவுக்கு நிகர்
என் அம்மாதான்
ஊரெல்லாம் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்



நீ இப்படிச் சொல்ல
இதுவரை கொடுத்தேனா
ஒரு வாய்ப்பு???

Tuesday, August 22, 2006

ஜன்னல் வழிக் கல்வி!!!

ஒரு மாற்றத்துக்கு ஆங்கிலப் பதிவு... ஹி ஹி ஹி... நிறைய வார்த்தைக்கு தமிழ் பதங்கள் தெரியலை (குறிப்பா அந்த சாய்ந்த எழுத்துக்களில்), அதனாலதான்... சொல்ப்ப அட்ஜஸ்ட் மாடி!!!

I am working mostly with the Windows operating system. The above windows key amuses me a lot even though there are lot other keys which are not present in the typewriter. I used almost all the shortcuts available using this key. Today I used the Windows+L to lock the computer and my collegue got surprised. Till now he was using the traditional ctrl+alt+delete to lock the computer. He was in learning mode (which tossed up my coffee plan) and I was explaining him all the possible shortcuts with the Windows key. How many shortcuts you know using the Windows key? Even if you doesn't know, it doesn't matter as you are already surviving without this!!! he he he .....

Windows key = Displays the Start Menu

Windows key + E = Opens the new Exporer Window

Windows key + R = Opens the new Run dialog box

Windows key + M = Minimizes all the open windows and shows the Desktop.

Windows key + Shift + M = Restores all opens windows and takes you right back to where you were.

Windows key + L = Locks the system.

Windows key + F = Opens the Find dialog box

Windows key + Pause/Break = Displays the Systems Properties dialog box.

Windows key + F1= Displays the Windows Help menu.

Windows key + D = Minimizes all the open windows and shows the Desktop. If you press it again opens all windows and takes you right back to where you were. This is a toggle key.

Monday, August 21, 2006

அருமை...


நிலவின் அருமை
அமாவாசையில்,
வெளிச்சத்தின் அருமை
இருட்டில்.











குடையின் அருமை
வெயிலில்,
மார்கழியின் அருமை
சித்திரையில்.











அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...

Saturday, August 19, 2006

டீ டைம்...


அலையாய் நான்,
கால் நனைக்க பயத்தில் குழந்தையாய் நீ!
உன்னை விழுங்கிவிடுவேன்
என்னும் பயம் எனக்கும் ...














உன் விழியில் மாட்டிய பூச்சி நான்,
சிலந்தியாய நீ!
ஏன என்னை விழுங்காமல்
அணு அணுவாய் சாகடிக்கிறாய்...













அம்மோவ்....படத்துக்கு ஏதாவது தலைப்பு வைக்கலாம்ன்னா மண்டை காய்ஞ்சிருச்சு. அப்புறம் கவிஞர் காத்துவாயன் தான் காப்பாத்தினார்... கவிதைன்னு 3 லைன் கிறுக்கி குடுத்துட்டு போயிட்டார்... ஆமா, போட்டோவுக்கு தலைப்பு????

Thursday, August 17, 2006

அண்ணனும் அண்ணியும்...



அண்ணனுக்கு கல்யாணம் என்றதும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா இருந்தது, அதுவும் என் அண்ணியுடன் என்றதும். அண்ணன் ரொம்ப நல்லவந்தான். எங்க பெரியப்பாவுக்கு தப்பாம பொறந்த நல்ல புள்ளை. தொழிலே அமையாமல் சும்மா சுத்திட்டு இருந்தான். அப்பவும் அவனை யாரும் வெட்டிப் பயலன்னு சொன்னதில்லை. பெரியப்பாவின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு உறுதியா நம்புனதோட மட்டும் இல்லாம அண்ணனை வைத்து தொழில் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. அண்ணன் அவனோட விடா முயற்சியால பொழைச்சுக்கிட்டான்.

அண்ணிக்கு என்னை விட 2 வயசுதான் அதிகம். அண்ணியோட கண்ணுல இருக்குற குறும்பை வைத்தே எல்லோரையும் தன் பக்கம் இழுத்து விடுவாள். அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்ங்கற மாதிரி அதிர்ஷ்டக்காரி! ஊரே அவள் பின்னால்தான் சுத்தி சுத்தி வந்தது, இன்னும் வந்துட்டுதான் இருக்கும். அவ எங்க போனாலும் ஜோ ன்னு இளவட்டப் பசங்க கூட்டம் கூடிருவாங்க...ஆனா எனக்கு என்னமோ அண்ணியோட குறும்பு பிடிச்சாலும் பின்னாடி எல்லாம் சுத்தினது கிடையாது.

ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிடிவாதம் அதிகம்ன்னு அவங்க கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு பெரியப்பா சொன்னதுக்கு அப்புறந்தான் நிறைய பேருக்கு தெரிஞ்சுது. அண்ணன் இப்போ இருக்குற நிலைமைக்கு அண்ணியை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா பெரியப்பா சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு உறுதியா இருந்தான். அண்ணியும் ரொம்ப பொறுமையா காத்துட்டு இருந்தாங்க.


அவங்க ரெண்டு பேருக்கும் கசமுசான்னு ஊருக்குள்ள பேச்சு வந்தப்போ, அவங்கப்பா ரொம்ப நல்லவரு, பையன் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான்னு ஒரு கும்பலும், அண்ணி இருக்கிற இருப்புக்கு இவனை எல்லாம் திரும்பி பார்ப்பாங்களான்னு ஒரு கும்பலும் மாறி மாறி பேசுச்சு. இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு.


கல்யாணத்துக்கு யாரையும் அழைக்கலை அதனால வருத்தப்படாதீங்கன்னு சிவகுமார் பெரியப்பா சொல்லிட்டாரு. எங்க தாத்தாதான் சொல்லுவாரு நான் அப்படியே சூர்யா அண்ணன் மாதிரி இருக்கேன்னு. பார்போம் எனக்கு அண்ணி ஜோதிகா மாதிரி பொண்ணு கிடைக்குதான்னு...

Wednesday, August 16, 2006

மசாலா மிக்ஸ்...

வேலை ரொம்ப அதிகம்ங்க, பிளாக் பக்கம் ஒதுங்கவே முடியலை. இருந்தாலும் நான் வயிறு வலிக்க சிரிச்ச சில மேட்டரை சொல்லாம இருக்க முடியலை.

Community

Orkutல friend, friend-oட friend, community, friend-oட community ன்னு போயிட்டே இருக்கலாம். அங்க பார்த்தா ஒரு community ஒரு சமூகத்தைச் சேர்ந்த்தது. அடடா, எல்லோரும் நல்ல இனப் பற்றோட இருக்காங்க (மத்த சமூகத்து மக்களுக்கும் இருக்கலாம், இது வரை என் கண்ணில் படவில்லை) சரி வந்ததுதான் வந்தோம் நமக்கு ஏதாவது புரியற மாதிரி, என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி இருந்தா எட்டிப் பார்த்துட்டு போலாம்ன்னா முதல் டாபிக்கே என்னை இழுத்து உள்ளே போட்டுவிட்டது. "காதல் கல்யாணத்தை நம் சமூகம் அங்கீகரிக்கிறாதா? எனக்கு காதல் மற்றும் வீட்டில் பார்த்து நடத்தும் arranage (ராகவன், உதவி பண்ணுங்களேன்) கல்யாணம் பண்ண ஆசை" ன்னு ஒருத்தர் ஆரம்பிச்சு வைச்சுட்டார். அதுக்கு பதில் "சரி, உன்னையெல்லாம் யாரு காதலிப்பா? (உன் ஃபோட்டோ பார்த்துட்டுத்தான் சொல்லறேன்)" ன்னு சரி நக்கலா இருந்தது. அடுத்தது அதுக்கு மேல: "நீ இந்த மாதிரி கேட்டு இங்கயே ஃபிகர் பிடிச்சு வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிக்குவ போல இருக்கு".

அப்புறம் கொஞ்சம் சீரியஸ்: "இந்த மாதிரி நம்ம சமூகத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிட்டா நாமளும் ஒரு நாள் டைனோசர் மாதிரி அழிஞ்சு போயுடுவோம், ஆதலால் காதல் செய்வீர்" ன்னு இருந்ததைப் பார்த்து அடப்பாவிகளா, வெறும் 300, 400 பேரு இருந்த ஊரை காதல் கல்யாணம் எல்லாம் இல்லாமலேயே இப்போ 100 கோடியைத் தாண்டி (மொத்த இந்தியாவையும் சொன்னேன்) இன்னும் கொஞ்ச நாள்ள நிக்க இடம் இல்லாம பண்ணீருவீங்க போலிருக்கு, டைனோசரோட ஒப்புமை இந்த இடத்தில் ரொம்ப தேவைதான்னு என் மனம் விட்டு சிரித்தேன்.

**********************************

chicken-copy

சைவம், அசைவம்ன்னு எங்க நண்பர்கள் கூட்டதுக்குள்ள அடிக்கடி அடிச்சுக்குவாங்க. ஐநா சபை ரேஞ்சுக்கு சமாதானம் எல்லாம் பண்ண வேண்டி வரும். இந்த மாதிரி சூடா விவாதம் (ஆமாங்க, ரெண்டு மூனு நாளுக்கு நடக்கும், இது வரைக்கும் வெட்டுக் குத்து இல்லை) நடந்து கொண்டிருந்த போன வாரத்தில் ரெண்டு வெவ்வேறு தொடர்பு இல்லாத இடங்களில் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கேட்டேன். ரெண்டுக்கும் சிரிக்காம இருக்க முடியலை.

"I Love Animals, only in the Lunch and Dinner"

"Why Make your stomach a graveyard"

நீ எந்த கட்சின்னு கேப்பீங்கன்னு தெரியும். அது என்னோட சந்தோசத்தைப் பொறுத்து. கட்சி மாறிட்டே இருப்பேன்.

**********************************

Sky-Diving-ani1

அப்புறம் நண்பன் ஒருத்தன் sky diving போன அனுபவத்தை அவனது சைட்ல போட்டிருந்தான். ரொம்ப நல்லா சொல்லிருந்தான். கடைசியா, காலை முதலில் கீழே நிலத்தில் வைக்காமல் நல்லா சௌகரியமா உக்காந்ததை சொல்லி முடித்தபோது என் கண்ணில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது. பின்னே, கடைசி லைன் இப்படி இருந்தா சிரிக்காம என்ன பண்ணுவது...

"Finally they gave me a nice little certificate, that certifies me, XXXXXX has actually jumped (!) from an airplane !!"

who landed on his ... ன்னு சேர்த்து படிச்சுப் பாருங்க, அப்பத் தெரியும் என் சிரிப்புக்கு காரணம்.

**********************************

இது ரொம்ப வித்தியாசமான விளம்பரம். முதுகு விளம்பரத்துக்குன்னு e-bay -ல பார்த்தேன்.

e-Bay


எங்கேயோ போயிட்டு இருக்கோம், நல்லதுக்குத்தானான்னு தெரியலை (நான் என் வேலையச் சொன்னேங்க, நீங்க வேற)..

Saturday, August 12, 2006

வாசுவும் வெடைக் கோழியும்-2

Part-1

நான்: சரி சரி... அழுகாதடா. உன் கதையை சொல்லு. நான் வேணா எம்பேர்ல போட்டுக்கறேன். ஆனா ஏதாவது பிரச்சினை ஆச்சு, அவ்வளவுதான். இதுக்கெல்லாம் நான் தார்மீக பொறுப்பேத்துக்கிட்டு ஊர்ல எல்லார் வாயிலும் விழுந்து எந்திரிக்க முடியாது, சொல்லிட்டேன்.

வாசு: நீதாண்டா நண்பன். ஒரு நாளு எங்க தோட்டத்து வழியா வளர் போயிட்டு இருந்தா. தோட்டத்துல யாருமே இல்லை. எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை, இன்னைக்கு இதை எப்படியாவது முடிச்சிறனும்ம்னு...

நான்: பாவம்டா வளர்மதி, ச்சீ, அவளைப் போயி???

வாசு: உன்னைய கதாசிரியன்னு சொன்னது தப்பா போச்சு. முழுசா கேளுடா வெண்ணை. அந்தன்னைக்கு வளர் கால்ல செருப்பும் போடலை. உடனே ஓடிப் போயி பொத்துன்னு அவ கால்ல உழுந்து வளர், ஏன் என் மேல இவ்வளவு கோவம் உனக்கு. செருப்பு கால்ல போடறதுக்கு மட்டுந்தான். அதை கையிலெடுத்துட்டு நீ இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணலாமான்னு அழுதுட்டேன்.

நான்: அதானே பார்த்தேன். எங்க வாசு தங்கம்டா. அதுக்கு அவ என்ன சொன்னா?

வாசு: அவ பெரிய வைராக்கியமுள்ள பொண்ணுடா. ஞாபகம் இருக்கா, 5வது படிக்கும் போது அம்மணியக்கா தோட்டத்துல இருந்து கொய்யாக்காய் யாருக்கும் தெரியாம பொறிச்சு நம்ம எல்லொருக்கும் தானம் பண்ணிட்டு இருந்தோமே, அப்ப வளரும் அங்க இருந்திருக்கா. அவ வரும்போது கொய்யாக்காய் தீர்ந்து போச்சு. அப்ப ஆரம்பிச்ச பிரச்சினையாம் இது. அப்புறம் ஒரு நாள் எங்க தோட்டத்துல ஒரு சிவப்பு தாவணி மட்டும் கிடந்தது. எருமை மேய்க்க போறப்ப தலைக்கு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டு போயிட்டேன். அது அவளோடதாம். துவைச்சுட்டு போகும்போது மறந்துட்டு போயிட்டா. நான் ரொம்ப ஸ்டைலா எருமை மேய்க்கற அழகை எவனோ ஒரு நாதாரி போய் வளர்கிட்ட போட்டுக் குடுத்துட்டான். அன்னையிலிருந்து இந்த புகை வளர்ந்துட்டு இருக்கு. அப்புறம் நான் அவளை ரெண்டு முணு தடவை பார்த்து ரொமாண்டிக்க்கா சிரிக்க அவள் பகைக்கு நெய் ஊத்துன மாதிரி ஆயிப் போச்சு. ஆனா இதையெல்ல்லாம் சொல்லிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு, அடடா... அதுக்காகவே சாகலாம்டா...

நான்: இவனைப் போய் ஒரு வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு இருந்தா பார்ட்டி பெரிய காமெடியனா இருக்குன்னு சிரிச்சிருப்பா...

வாசு: உனக்கு நான் எப்பவுமே காமெடியந்தான். நீ பண்ணின கூத்துக்கெல்லாம் டவுசர் கிழிய அடி வாங்குனது நாந்தான்டா. அதையெல்லாம் மறந்துடாதே...

நான்: அதான் இந்த கதையை போடறன்னு சொல்லிருக்கேன்ல.

வாசு: வளர் நாம் பேசி ஒரு சமாதனத்துக்கு வருவோமான்னு கேட்டேன். நீ ஊர்ல புறம்போக்கு, உருப்படாதவன்னு பேரு வாங்கிருக்க. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்க முதல்லன்னு சொல்லிட்டு மான் மாதிரி துள்ளிக் குதிச்சிட்டு திரும்பி திரும்பி பார்த்துட்டே போனா.

நான்: அடப்பாவி, நீ காமெடியாய் ஒன்னு பண்ணி இப்ப அந்த பொண்ணு அவளோட வாழ்க்கையவே பணயம் வெக்குது. பெண்புத்தி பின்புத்தி தான்டா.

வாசு: ஆம்பிள மாதிரி நடக்கனுமே என்ன பண்ணலாம்ன்னு பார்த்தா அவங்க அம்மா முட்டி வலி முட்டி வலின்னு முனகீட்டு வீட்டை விட்டு வெளிய வராமா எல்லா வேலையையும் வளரே பார்த்துட்டு இருந்தா. எங்க வீட்டுக்கு வரப் போற மகராணி வேலைக்காரி மாதிரி இருக்கறதான்னு, நீ எங்கப்பாவுக்கு முட்டி வலின்னா போட்டுக்கங்க மாமான்னு ஒரு கிரீம் குடுத்தைல்ல, அது ஒன்னை திருடிட்டு போயி குடுத்தேன். அமெரிக்காவிலிருந்து வந்தது. உடனே கேக்கும்ன்னு சொன்னேன். இப்போ அவங்க அம்மா வெளியவெல்லாம் நடமாடறாங்க.

நான்: அது நான் மாமாவுக்கு குடுத்ததுடா...

வாசு: அடுத்த தடவை வாங்கிட்டு வர்ரப்போ ஒன்னு சேர்த்து வாங்கிட்டு வா. எங்கப்பா கணக்கு கரெக்டா வைச்சிருப்பாரு. இப்போல்லாம் வளர் என்னை எங்க பார்த்தாலும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாரு...

நான்: நீ வழியறது இங்க கொஞ்ச நேரத்துல BBC நியூஸ் ல வரப் போகுது பாரு...

வாசு: மாப்பிள்ள, வளர் வந்துட்டு இருக்காடா. நான் ஆம்பிளைன்னு நிருப்பிக்க ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

நான்: ஏதாவது பண்ணி உடனே இழுத்துட்டு ஓடிறாதா. நான் 6 மாசம் கழிச்சு வரேன், அப்போ கல்யாணம் வெச்சிக்கலாம். இப்பொ என்ன பண்ணப் போற?

வாசு: கவுத்துக்காரர் வெடைக் கோழி வளர் வீட்டு கீரைப் பாத்தியை தினமும் கிளறி விட்டுருதாம். இங்க ஒரே சண்டை. இன்னைக்கு அந்த வெடைக் கோழியும் வருது. இந்தப் பக்கம் வளரும் வர்றா.. இப்போ மட்டும் கரெக்ட்டா கல்லெடுத்து அடிச்சு அந்த கோழியோட காலை முறிச்சுட்டேன்னு வைச்சுக்க அப்புறம் கெட்டி மேளம் கெட்டி மேளம்தான். அப்படியே லைன்லயே இரு. நல்ல கல்லா பார்த்து எடுத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான்டா , இந்த கோழி இன்னைக்கோட காலி.

அய்யோ என பெருங்குரலில் வளர்மதியின் அம்மா கத்துவது போனில் கேட்டது. நாசமாப் போன நாயே, சிவனேன்னு வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தவளை அமெரிக்கா களிம்புன்னு குடுத்து என்னை நடமாடவும் விட்டு இப்படி கல்லுல அடிச்சு ஜென்மத்துக்கும் நடக்கமுடியாமா பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியா? என்பதும் கேட்டது.

அர்ச்சுனனுக்கு மரத்திலிருந்த கிளி மட்டும் தெரிந்த மாதிரி நம்ம வாசுவுக்கு வளர்மதியின் வீடு கோழிக்குப் பின்னால் இருப்பது சுத்தமாக மறந்திருந்தது. எனக்கென்னமோ அந்த ஜோசியகாரன் சொன்னதுதான் வாசு விசயத்தில் நடக்கும் போலத் தெரியுது.

Thursday, August 10, 2006

வாசுவும் வெடைக் கோழியும்

வாசு என் அத்தை பையன். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள் நாங்கள். ஊரில் எந்த கோழியைக் காணவில்லையென்றாலும் எங்கள் இருவரையும்தான் ஊரார் தேடுவார்கள். ஊரில் பண்ணாத அட்டூழியங்களே கிடையாது. எங்க மாமா "டேய், நீ உருப்பட மாட்டே, உருப்பட்டா என் பேரை மாத்திக்கிறேன்" என சபதமே போட்டார் 10 வருடத்துக்கு முன்பு. "ஏன்டா, அவர்தான் அப்படி சொல்லிருக்காருல்ல, நாம அதை மாத்திக் காட்டுவோம்டா" என சொன்னதுக்கு "இல்லைடா மாப்பிள்ள, இதுல ஒண்ணாவது அவர் சொல்படி நடக்கலாம்ன்னு இருக்கேன். நான் உருப்பட்டு, 50 வயசுல பழனிசாமி அப்படிங்கற அவர் பேர எல்லோரும் பன்னிசாமின்னு கூப்பிட்டா நல்லா இருக்காது" என்று ஊரோடு தங்கி விட்டவன். நான் எங்க அம்மாவின் அழுகைக்கும், அப்பாவின் பெல்ட்டுக்கும் பயந்து எஞ்சினியரிங் படிக்க சேர்ந்தேன் (எல்லாம் எங்கப்பாவோட வட்டிப் பணம்தான், நான் வாங்கின மார்க்குக்கு டுட்டோரியல் காலேஜில்கூட சேர்க்க மாட்டார்கள் என காலேஜ் ப்ரின்சிபால் முன்பாகவே திட்டிக் கொண்டே பணத்தை டேபிள் மேல் கொட்டி சேர்த்தார்).

அப்படி இப்படி செமெஸ்டருக்கு ஒரு அரியர் என வாங்கி காலேஜ் முடிக்கும் போது ஆச்சாராமாய், சுத்த பத்தமாய் ஒரு கப்பும் இல்லாமல் வந்ததுக்கு எங்க பண்ணையத்தில் வேலையில் இருந்த எல்லொருக்கும் கறி சோறு சமைச்சு போட்டு எங்க ஆத்தா கொண்டாடினார்கள். அப்படியே கொஞ்ச நாள் நானும் வாசுவுமாய் சேர்ந்து வயக்காடு, வீடுன்னு திரும்ப பழையபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தோம். சனி எங்க அப்பாவின் பார்ட்னர் மகள் ரூபத்தில் வந்தது. "ஏன்டா, சாரதா எல்லாம் மெட்ராஸில பத்தாயிரம் சம்பளம் வாங்கறாளாம். நீ என்னடான்னன தினமும் நாட்டுக் கோழி ஒன்னை உறிச்சு முழுங்கிட்டு இருக்க" என திட்டியதில் உண்மையிலேயே கோபம் வந்து மெட்ராஸ் வந்து, இப்போ அமெரிக்கா வந்து 5 வருடம் ஆகிறது. சாரதா இப்போது 2 குழந்தைக்கு அம்மாவாம். எங்க அம்மா அவங்க வீட்டு பொங்கலுக்கு போனப்ப சாரதாவின் சித்தி என நினைச்சு சாரதாவிடம் பேசியதையும் பின் உண்மை தெரிந்து மானம் போனதையும் சொன்ன பொழுது உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

எது எப்படியோ வாரம் ஒரு முறை வாசுவிடம் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும். ஊரில் கடைசியாக அடை வைத்த கவுத்துக்காரர் கோழியிலிருந்து அம்மணி ஆயா கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டது வரை சகலமும் சொல்லுவான். ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் அவனுக்கு போன் செய்தால்

வாசு: மாப்பிள, ஒரு நிமிஷம் இரு வண்டியை எடுத்துட்டு வெளிய வந்தர்றேன்.

நான்: டேய், வண்டி ஓட்டிடே பேசப் போறியா, எங்காவாது போயி ஏத்திடப் போற..

வாசு: நீ வேற, இந்த மாதிரி ரோட்டுல வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருந்தாதானே கொஞ்சம் மரியாதையா இருக்கும். உன்னோட கதையெல்லாம் படிச்சேன்டா, ரொம்ப நல்லா எழுதறே, எங்கூட சுத்துனதுக்கு அப்புறமும் நீ எப்படிடா உருப்பட்ட???

நான்:(என் அப்பாவின் பெல்ட் கண் முன் வந்து விட்டுப் போனது) அதெல்லாம் தலையெழுத்து. ஆமா, நீ எங்க போயி அதைப் படிச்ச? உண்மையிலேயெ நல்லா இருந்துதாடா? இங்க அவனவன் என்னை கல்லால் அடிக்காத குறையா திட்டிட்டு இருக்கான்.

வாசு: உங்க வீட்டுல கம்ப்யூட்டர்ல ஒன்னும் தெரிய மாட்டேங்குதுன்னு மாமா வந்து பாக்க சொன்னாரா, அப்பத்தான் அத்தை உன் கதை புக்குல வந்ததை காட்டினங்க.

நான்: உனக்கு டிராக்டர், கிணத்து மோட்டார்தான்டா ரிப்பேர் பண்ணத் தெரியும். கம்ப்யூட்டர்ல என்னத்தடா நோண்டுன?

வாசு:இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. உங்க குடும்பத்துக்கே குசும்பு அதிகம்டா, பிளக்கை சொருகணும் வாடான்னு கூப்பிட்டா வரமட்டேன்னு சொல்லிட்டு உங்க அப்பாதான் கம்ப்யூட்டர் ரிப்பேர்னு வரச் சொல்லி கூப்பிட்டார். சரி சரி, உன்னையை எல்லொரும் கதை எழுதுனதுக்கு நோண்டி நொங்கெடுக்கறாங்கன்னு சொன்னையில்ல, நான் ஒரு கதை சொல்லறேன். அதைப் போடு உன்னை ஓஹோன்னு சொல்லுவாங்க.

நான்: நீ கதை வைச்சிருக்கியா? அது எப்பேர்பட்ட கதையா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். நீ ஊர்க்கதை மட்டும் சொல்லு அது போதும்.

வாசு: நீ போடாட்டி பரவாயில்லை. நான் சொல்லறேன் சும்மாவாச்சும் கேளு. ஒரு ஊர்ல வாசுன்னு ஒரு பையன்...

நான்: டேய், நிறுத்து. எதுக்கு உன் பேர்ல கதை சொல்லற?

வாசு: நீ மட்டும் உம்பேர்லயே கதை எழுதிக்கற. இந்த கதைக்கு நாந்தான் ஆசிரியர். நீ என் பேரைத்தான் கதாநாயகன் பேரா போடணும்.அந்த ஊர்ல வளர்மதின்னு ஒரு பொண்ணு.

நான்: உன்னை எங்கே பார்த்தாலும் காலிலிருக்கும் செருப்பை கையில் எடுத்து ஆட்டிக் காண்பிப்பாளே, அவ பேர் மாதிரி இருக்கு!!!

வாசு: ஆமாண்டா, இது எங்க கதைதான். எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அன்டர்ஸ்டேண்டிங்ல போயிட்டு இருக்கு. எப்படியாவது இதை மட்டும் நீ புத்தகத்துல போட்டுட்டன்னு வைச்சுக்க, இதைக் காட்டி அப்படி இப்படின்னு பேசி கூட்டிட்டி ஓடிருவேன்.

நான்: பெரியவங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்டா. கூட்டிட்டு ஓடரங்கற, உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா???

வாசு: உன் காதை நான் காலா நெனச்சுக்கறேன். தயவு செஞ்சு இந்த கதையை மட்டும் போட்டுடு. எனக்கு 35 வயசுலதான் கல்யாணம் ஆகும்ம்னு ஒரு நாசமா போன ஜோசியகாரன் வேற சொல்லிட்டு போயிட்டான்.

நான்: மங்களம் உண்டாகட்டும்.

வாசு: பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்ற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.

~தொடரும்.

Tuesday, August 08, 2006

நட்பு எனப்படுவதியாதெனில்.....

போன வாரம் நட்பு வாரம், நட்பு நாள்ன்னு ஆளாளுக்கு சென்டிமெண்ட் போட்டு தாளிச்சிட்டு இருந்தாங்க. நானும் நாலு பேருகிட்ட போயி நட்புன்னா என்னங்க, சூர்யான்னா என்னங்கன்னு கேட்டுட்டு வர்றதுக்குள்ள நட்பு வாரம் முடிஞ்சு போச்சாம்... அதுக்காக கேட்டுட்டு வந்ததை போடாம விட்டா எங்களுக்குள்ள இருந்த நட்பு என்னதுக்கு ஆகிறது.

வாசு, 5-ம் வகுப்பு: கலர் தோட்டத்துல கடலைக்காய் திருடி திங்க நானும் சீனுவும் போன போது எங்களை பார்த்துட்டு நாய் தொறத்துச்சு. அவன் மட்டும் ஓடிப் போகமா என்கூட நின்னு நாய் மேல கல்லை எடுத்து இட்டாம் பாருங்க, அதுதான் நட்பு.

மீனா, 8-ம் வகுப்பு: மாரியம்மன் பொங்கலப்போ சீதா அவளோட குஞ்சத்தை சடையில வைச்சுக்கிறக்கு குடுத்தா, அதுதான் நட்பு.

சசி 9- வகுப்பு: ராகவனோட டிவிஸ் 50 ஐ எப்போ ஓட்டிட்டு தரேன்னு சொன்னாலும் உடனே குடுப்பான், அதுதான் நட்பு.

சுதா 10-ம் வகுப்பு: புதுசு புதுசா ஏதாவது சமையல் பண்ணி எடுத்துட்டு வந்து எங்களுக்கு மத்தியானம் சாப்பிடக் குடுப்பா ராணி, அதுதான் நட்பு.

ராம் 12-ம் வகுப்பு: நான் யாருகிட்ட வேணா போய் லவ் லெட்டர் குடுத்துட்டு வாடான் சொன்னா வாரான் பாருங்க தனபால், அது நட்பு.

சுகன்யா, இளங்கலை முதலாம் ஆண்டு: எப்போ சனிக் கிழமை சினிமாவுக்கு போனாலும் , அம்மா, இன்னைக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு கொஞ்சம்கூட பயப்படாமல் சொல்லும் ஊர்வசியின் நட்புதான் நட்பு

இளங்கோ, இளங்கலை இறுதி ஆண்டு: எப்போ தண்ணி அடிச்சிட்டு பொங்கல் வைத்தாலும், வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு, ஆண்டி, இவனுக்கு தலை சுத்துதுன்னு சொன்னான். கொஞ்சம் இஞ்சி கசாயம் வைச்சுக் குடுங்கன்னு சொல்லும் ராஜாதான் நட்பின் இலக்கணம்.

பெரியசாமி, 2 குழந்தைகளுக்கு தகப்பன்: எப்போ போய் ஆஸ்பத்திரி செலவு, ஸ்கூல் செலவுன்னு கடன் கேட்டு நின்னா கருப்பன் யோசிக்காம காசை எடுத்து வீசுவான். அது நட்பு

இந்திரா, திருமணமானவர்: செல்வியும், கண்மணிக்கும் இருக்கறதுதான் நட்பு. அதாங்க, வளையல்கள் சீரியல்ல வருவாங்கல்ல? 7 மணிக்கு, சன் டிவில? நீங்க பார்க்கறதில்லை??

ஒரு தமிழ் வலைப் பதிவர்: குமுகாயத்தில் அனைவரும் தீவுகளாகி நிற்கிறோம். எதையும் பின்நவீனத்துவ கோணத்தில் சீர் தூக்கிப் பார்க்காமல், ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்து முகம் மறந்து, காலச் சக்கரத்தில் சில நுண்ணியல் கோட்பாடுகளை நிறுவி அதன் மேல் அரியணை அமர்த்தி தூங்கிக் கிடக்கும் மாக்களாகிப் போனோமே? நட்பு எனப்படுவதியாதெனில்.....

Sunday, August 06, 2006

நிஜமல்ல, கதை-3!

Part 1 Part 2

நிஷா இப்போதெல்லாம் உதயின் வழியலுக்கெல்லாம் பயப்படுவதில்லை போல உதய்க்கு தோன்றியது. அவளே இப்போதெல்லாம் காஃபி குடிக்கப் போலாமா? எனக் கேட்டு உதய்க்கு இன்ப அதிர்ச்சி குடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல படியா போயிட்டு இருக்கு, இப்படியே ஒரு ஆறு மாதம் என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் மெதுவா கேட்டுப் பார்க்கலாம். சரின்னு சொன்னா பிக்கப் இல்லைன்னா டிராப். வாழ்க்கையில இவ்வளவு சிம்பிளா எல்லாம் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தயார் பண்ணிக் கொண்டிருந்தான்.

உதய் என்ற நிஷாவின் தேன் குரலுக்கு எஸ் மேடம், சொல்லுங்க என்ன விஷயம்? என உதய் வேகமாக திரும்பினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். இல்லை, உங்கிட்ட நான் பேசணும் என நிஷா உதயின் முகத்தைப் பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டு பேசினாள். மச்சான் உதய், எங்கேயோ ஒரு மச்சம் இருக்கக்கூடாத இடத்துல இருக்கு போல இருக்கு. இப்போத்தான் ஆறு மாசம் வெயிட் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தாய். பாரு, அவள் உன் கண்ணைப் பார்த்து, உன்னைப் பார்த்து பேச கூட வெட்கப்படறா எனற் உதயின் மனசாட்சி DTS எபெக்டில் திரும்பத் திரும்ப உதயின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருந்தது. இப்போத்தான் ரொம்ப கவனமாக இருக்கணும், இல்லைன்னா சொதப்பி சின்னாபின்னமாயி சொந்தத்துல சூனியம் வெச்ச மாதிரி ஆயிடும், ரிலாக்ஸ் என மனசாட்சி அவனை உஷார் படுத்தியது. சரி, வா காஃபி சாபிட்டே பேசலாம் என்றான். இல்லை, இல்லை இதெல்லாம் ஆபீஸ்ல பேசற விஷயம் இல்லை, நாம வேணா இன்னைக்கு ஒன்னா வீட்டுக்கு போலாமா? என நிஷா கேட்க உதயால் சீட்டில் உட்கார முடியவில்லை. அதேதான் இது அதேதான் என உள்ளுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான்.

"சரி, அப்போ இப்போவே கிளம்பலாமா?" என கேட்ட உதய் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட், அது இது என எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தான். 5 நிமிஷம் வெயிட் பண்ணு, நானும் வர்றேன் என நிஷா சொல்லிவிட்டு சீட்டுக்கு ஓடினாள். "நான் உதய், மாசம் 50000 சம்பளம். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சா மட்டும் வேலைக்கு வந்தா போதும். அவுட்டர் ரிங் ரோடுல ஒரு வீடு வாங்கிரலாம். பெண் குழந்தைன்னா உங்க பாட்டி பேரு, ஆண் குழந்தைன்னா எங்க தாத்தா பேரு. அப்புறம்..." என உதய் யோசித்துக் கொண்டிருந்த போது "என்ன உதய், பயங்கர யோசனை" என்று கேட்டபடி நிஷா வந்தாள். "இல்லை, வாழ்க்கையில எல்லாம் திடீர் திடீர்ன்னு நடக்குதா? அதான் அதையெல்லாம் எப்படி சமாளிக்ககிறது"ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் என்று கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு பேசினான். ஆமாம், எனக்கும் அதே பிரச்சினைதான் என நிஷா சொன்ன பொழுது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என உதய் காற்றில் பறந்து கொண்டு இருந்தான்.

உதய் என நிஷா கூப்பிட்ட பொழுது, வானத்தில் பறந்து கொண்டு இருந்த உதய், "ம், சொல்லு நிஷா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கேன்" என உளறினான். "இதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை உதய். உங்கிட்ட இதை எப்படி சொல்லறது"ன்னு பயமா இருக்கு என வார்த்தைகளை மென்று முழுங்கி பேசினாள். நம் வாழ்க்கைத் துணைவி இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த உதய், "நிஷா, நான் உன்னோட... உன்னோட ஃபிரெண்டுன்னு நினைச்சிக்கோ. அன்னைக்கு உன் புரோகிராமில் ஒரு பெரிய டிசைன் பிரச்சினை வந்தப்போ, இதெல்லாம் நாம ரிவ்யூ பண்ணும் போது கண்டுபிடிச்சிருக்கணும்னு பிரச்சினையை நான் திசை திருப்பலை... அப்புறம் நீ பண்ண வேண்டிய அந்த டாக்குமெண்ட் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விடலை" என அவளுக்காக தான் பண்ணிய அளும்புகளைப் பட்டியல் இட்டான்.

இந்த பதிலகளால் சாமதானமாகியது போல தோன்றிய நிஷா, நான் இதை முதன் முதலில் உங்கிட்டதான் சொல்லேறென் என்றாள் நிஷா. "நிஷா, சில விஷயத்துக்கெல்லாம் வக்கீல் வைக்கக் கூடாது. நீ மனசில நினைச்சிருக்கிறதை அப்படியே சொல்லு. நீ என்ன சொல்லப் போறெங்கறதும் எனக்குத் தெரியும், கமான்" என ஆர்வத்தை அடக்க முடியாமல் சீட்டின் நுனிக்கு நகர்ந்திருந்தான் உதய். "எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க" என நிஷா வெட்கத்துடன் சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். இங்க பார்ரா... இப்போலாம், பொண்ணூங்க ரொம்ப தேறிட்டாங்க...லவ்வைச் சொல்லறதுக்கு உக்காந்து யோசிக்கிறாங்க என மனதுக்குள் நினைத்த உதய் ரோலர் கோஸ்ட்டரில் உச்சியைப் பார்த்து போவதைப் போல உணர்ந்தான். கையில் ஒரு ரோஜா இருப்பதை போலவும், அதை MGR ஸ்டைலில் முகர்ந்து பார்ப்பது போலவும் மூக்கில் கையைத் தேய்த்து விட்டு "சஸ்பென்ஸ் போதும், முழுசா சொல்லிடு... நான் சொர்க்கத்தை சீக்கிரமே பார்க்கணும்" என்றான் உதய்.

"அவர் அமெரிக்காவில இருக்கார். போன வாரம்தான், பொண்ணு பார்த்துட்டு போனார்" என நிஷா சொன்னபோது ஒரு டின் நிறைய ஐஸ்கட்டியை தலை மேல் கொட்டிய ஃபீலிங் இருந்தது உதய்க்கு. அந்த அதிர்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல், "ஓ, சும்மாதான் பார்த்துட்டு போயிருப்பாங்க, இந்த அமெரிக்கா பசங்களே இப்படித்தான். ஊருக்கு வந்தமோ எல்லொரையும் பார்த்தமா, போனாமன்னு இல்லாம, லைசென்ஸ் வாங்கிட்டு வீடு வீடா போய் சைட் அடிக்காறாங்க. பாரு, நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க" என இப்பொழுது டிபென்ஸ் ஆட்டத்துக்கு மாறி இருந்தான் உதய். "இல்லை... இல்லை அவர் ரொம்ப நல்லவர்... நானும் அவரும் 2 நாள் காஃபி சாப்பிடப் போனோமே" என்றாள் முகத்திலிருக்கும் வெட்கம் கொஞ்சம் கூட கலையாமல்."அட, எங்கூடவும்தான் நீ தினமும் காபி சாப்பிடுற. இதெல்லாம் சும்மா. நீ வேணா பாரேன், அவன் அடுத்த வாரம் அமெரிக்கா போறானா இல்லையான்னு" என இப்பொழுது தாக்குதல் ஆட்டத்துக்கு தயாரானான். " ஆமாம், அடுத்த வாரம் அவர் அமெரிக்கா போறார். அதுக்கு முந்தின நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம்" என்றாள் நிஷா. "பாரேன், அவன் நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் திரும்பி வரவே மாட்டான்" என இப்பொழுது கொஞ்சம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

"உதய், ரொம்ப கிண்டல் பண்ணாத, அவர் ரொம்ப நல்லவர். உண்மையா, அது எங்க ரிஜெஸ்டர் மேரேஜ். H4 விசாவுக்கு கல்யாண போட்டோவும், திருமண சான்றிதழும் வேணும் இல்லையா, அதுக்காக... இந்த ஐடியா எல்லாம் அவர்தான் குடுத்தார். இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் 6 மாதம் விசாவுக்காக வெய்ட் பண்ண வேண்டி வரும். இப்பொவே அப்ளை பண்ணிட்டா கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா கூட்டிப் போயிடலாம்ன்னு இந்த ஏற்பாடு." என நிஷா முகமெங்கும் பூரிப்பாக சொன்னாள். "அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் மல்லிகைப்பூ கண்ணுக்குத் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ரோஜாப் பூ தெரியுது" என மனதுக்குள் வெந்து புழுங்கிக் கொண்டிருந்தான். "உதய், இன்னும் ஒரு வாரத்தில அவரு அமெரிக்கா திரும்பி போயிடுவார். நீ எனக்கு உண்மையிலேயே நல்ல பிரெண்டுன்னு எனக்குத் தெரியும். நீ, என் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விட்டுட்டின்னா நான் நிம்மதியா அவர் கூட ஊர் சுத்துவேன்,பிளீஸ் உதய்" என செல்லம் கொஞ்சினாள். உதய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்திருந்தான். அதற்க்கப்புறம் நிஷா மட்டும் வழவழவென எதேதோ பேசிக் கொண்டிருந்தாள். "இதெல்லாம் நாளைக்கு ஆபிஸில் பார்த்துக் கொள்ளலாம், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என உதய் பஸ்ஸிலிருந்து இறங்கினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள்.

கில்லி விஜய் மாதிரி வலம் வந்து கொண்டிருந்த உதய், எங்கே செல்லும் இந்த பாதையில் வரும் சேது சீயானாய் மாறி கொஞ்ச நாள் சுற்றியதாகக் கேள்வி. விஜய லக்ஷ்மி என்னும் புதுப்பெண்ணின் வரவு மறுபடியும் அவனை கில்லி ஆக்கிவிட்டதாகவும் கேள்வி.

~முற்றும்.

கதையில் என் பெயரை வைத்தால் கூட விளங்க மாட்டேங்குது. ரொமாண்டிக் ஹீரோ கூட தண்ணியடித்து விட்டு இருமிக் கொண்டே பாடும் நிலைமைக்கு போயிடறாங்க. யாராவது பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன். தேன்கூடு போட்டிக்கு "உறவுகள்" தலைப்பில் கதை எழுத சொன்னார்கள். அதுக்கும் இந்த கதைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

Friday, August 04, 2006

நிஜமல்ல, கதை-2!

Part 1 Part 3

நிஷா, நேத்து நைட் உன்னை ஈஸ்ட் என்ட் சர்க்கிள்ல பார்த்தேனே, அங்கேயா தங்கிருக்க? என்று மெதுவாக நூல் விட ஆரம்பித்தான் உதய். ஈரோடையே திருவனந்தபுரத்துக்கு பக்கம்ன்னு சொன்னவன் இதுக்கு என்ன சொல்வானோ என நினைத்து இல்லை இல்லை நான் 9த் பிளாக், ராகி குட்டா பக்கம் என்றாள். நிஷா, நம்ம ரெண்டு பேருக்குள்ள என்னமோ இருக்கு, நானும் அங்கதான் என டன் டன்னாய் வழிந்துவிட்டு சாப்பாடெல்லாம் எங்க? என்றான். வீட்டில்தான் என்றவள் எதற்கு சொன்னேன் என்று நாக்கை கடிப்பதற்க்குள் அப்போ எப்போ சாப்பிடக்கூப்பிடப் போற? என அடுத்த ஜொள்ளாஸ்திரத்தை ஏவினான்.

எங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லறேன், அவன் தினமும் லேட்டா வீட்டுக்கு வரான் என அழுவது போல் சொன்னாள். சொல்லவே இல்லை, உங்க அண்ணன் கூடத்தான் இருக்கியா? நிதானமா கேட்டு சொல்லு ஒன்னும் அவசரம் இல்லை, நான் இங்கேதான் இருப்பேனெ என இடத்தைக் காலி செய்தான். இவளை கரெக்ட் பண்ணறதுன்னா இங்க கம்பெனியிலேயேதான் பண்ணனும் போல இருக்கு, ரொம்ப கஷ்டமாச்சேய்யா! சரி முன் வைச்ச காலை பின் வைக்கிறதில்லைன்னு அடுத்த திட்டத்துக்கு தயாரானான். அய்யோ என நிஷா தலையில் கைவைத்துக் கொண்டு சேரில் தொபுக் என சரிந்தாள்.

நிஷாவை அடிக்கடி சீட்டுக்கு கூப்பிட்டால் வந்து கையை கட்டிட்டு நிக்கறா, கொஞ்ச நஞ்சம் யோசிச்சு வைச்சு இருக்கற ஐடியாவும் மறந்து போகுது. நாமதான் இனிமேல் சிச்சுவேஷன் கிரியேட் பண்ணிக்கணும், இனிமேல் அவ சீட்டுக்கு போயிட வேண்டியதுதான் என திட்டம் போட்டுப் போனால் அங்க சரவணன் சைடுல பெஞ்ச் மேல உக்கார்ந்து வறுத்துக் கொண்டிருந்தான், இவளும் கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன நடக்குது இங்க, நிஷா நான் ஒரு டிசைன் டாக்குமெண்ட் பிரிண்ட் பண்ணிருக்கேன் போய் எடுத்துட்டுவா என்றான் உதய். சரி நான் கிளம்பறேன் என சரவணன் கிளம்பினான்.

டேய், நீ நில்லு. எங்க வந்த, எதுக்கு வந்த, நான் வந்தவுடனே கிளம்பறே? நல்லாயில்லை இதெல்லாம்... நானெல்லாம் ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்கடி, உன்னோட ரேட்டிங் எங்கையில இருக்குன்னு தெரிஞ்சும் இந்த ஆட்டம் ஆடுற? மகனே, அடுத்த தடவை ஆட்டறதுக்கு குடுமி இருக்காது, சொல்லிட்டேன் என்று உதய் சொல்லும் போது நிஷா வேகமா வந்து பிரிண்டர்ல ஒரு டாக்குமெண்ட்டும் இல்லையே என டென்ஷனாக சொன்னாள். ஓ, நான் பிரிண்ட் குடுக்கலை போல. சரி, இப்போ குடுக்கறேன், போய் எடுத்துட்டுவா என சாதாரணமாக என்றான்.

தலை, தெரியாம பண்ணிட்டேன். என்னோட கன்பெர்மேஷன்ல கை வைச்சிராதீங்க. நான் என் சீட் விட்டு இனிமேல் எந்திரிக்க மாட்டேன் என்று சொல்லி முடிப்பதற்க்கும் நிஷா வந்து சேருவதற்க்கும் சரியாக இருந்தது. நிஷா, கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில ஷாருக்கான் மாதிரி இருக்கே என சரவனன் சத்தமாக சொல்லி முடித்தவுடன் எல்லோரும் நிஷாவை திரும்பி பார்த்தார்கள். அவள் கண்கள், கரை புரண்டோடும் கபிணி டேம் மாதிரி இருந்தவுடன் உதய்க்கு பொத்துக் கொண்டு வந்ததே கோபம். மூதேவி, நீயும்தான் ப்ளொரசண்ட் பச்சை சட்டை, புளூ பேண்ட் போட்டுட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்க. பொம்பளை புள்ளைகளை இப்படியெல்லாம் அவமானப் படுத்தறியே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா என சொல்லி விட்டு நிஷாவின் கையிலிருந்த டாக்குமெண்டை வாங்கி அவன் கையில் திணித்து இதை படிச்சிட்டு என்ன இருக்குன்னு சொல்லு, வா இப்போ இடத்தைக் காலி பண்ணு என்று நகர்ந்தான்.

தலை, என்னைய பத்தி அவ தப்பா நினைக்கனும்ன்னுதான் அப்படி சொன்னேன். ரேட்டிங்ல குத்தீறாதீங்க, நீங்க நல்லா இருப்பீங்க என்றான் சரவணன். என்னையப் பத்தி நல்ல விதமா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை என்றான் உதய். தலை, அப்போ நாளைக்கு நடக்குற கலாச்சர தின சிறந்த ஆடை அணிபவருக்கான ஓட்டை அவளுக்கும், உங்களுக்கும் போட்டுறேன், சரியா? , நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், இனிமேலாவது தெரிஞ்சுக்க. அவளுக்கு ஓட்டு போட்டு அவ ஜெயிச்சா எல்லோரும் நம்புவாங்க, நான் ஜெயிச்சா காறித் துப்ப மாட்டாங்க, ஒழுங்கா அவளுக்கு மட்டும் ஓட்டுப் போடு என சொல்லிவிட்டு நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம் என யோசனை செய்யத் தொடங்கினான்.

அடுத்த நாள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சைட் அடிக்க லைசென்ஸ் குடுத்தது மாதிரி இருந்தது உதய்க்கு. தளமெங்கும் இருந்த வண்ணக்கோலங்களை பார்த்துவிட்டு சார், நீங்க யாருக்கு சார் ஓட்டுப் போடுவீங்க என பயல்கள் வழிய வந்து கேட்க, அதெல்லாம் நாங்க ஜெயிக்கறவங்களுக்குத்தான் போடுவோம், நீங்க, உங்க ஓட்ட ஒழுங்கா போடுங்கடா வென்ட்ரு பசங்களா என சிங்கம் மாதிரி கர்ஜித்தான்.

சாயங்காலமாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் நிஷா ஜெயித்திருக்கவில்லை. டென்ஷனாக போட்டி நடத்திய வனிதாவிடம் போய் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும் என சத்தமாக சொன்னான் உதய். உன் ஆளுக்கு எவ்வளவு ஓட்டுன்னு தெரியணுமா, யார்கிட்டையும் சொல்லாதே இல்லைன்னா எல்லோரும் வந்து கேப்பாங்க. சரி அந்த துரதிர்ஷ்டக்காரி பேரை சொல்லு என்றாள். பேரைக் காதில் சொன்னதும் அடப்பாவி, அவ இன்னைக்கு சாதாரண சுடிதாரில் வந்திருந்தாள், அவளுக்கும் என 5 பேரு ஓட்டுப் போட்டிருக்கீங்க, ரொம்ப பரிதாபமாய் 5 ஓட்டுதான் விழுந்திருக்கு. பரவாயில்லை, உனக்கு இப்போ போட்டி ரொம்ப கம்மியில்லை என சிரித்தாள். எங்க அந்த சரவணன் என உதய் வெடித்துக் கிளம்பினான். வனிதா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சரவணன் சாகவாசமாக புதிதாக சேர்ந்த ஃபிகருடன் சாகுபடி செய்து கொண்டிருந்தான். உதயைப் பார்த்ததும், தலை என தெறித்துக் கொண்டு ஓடி வந்தான். தலை, இப்படி ஆயிப்போச்சே தலை என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். இப்போ நீதான் ஆயி போகப் போற என்று சரவணனை மேலிருந்து கீழாய் முறைத்தபடி பார்த்தான். நான்கூட நிஷாவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் தலை என்றான். 1986 தமிழக உள்ளாட்சி தேர்தல்ல எங்க பங்காளி கவுன்சிலருக்கு நின்னாரு. அப்போ எனக்கு 6 வயசு. அப்போவே நான் 10 ஓட்டு போட்டிருக்கேன் மிஸ்டர் சரவணன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தலை என சரவணன் புரியாமல் கேட்டான். நிஷாவுக்கு விழுந்தது 5 ஓட்டு, இப்போத்தான் வனிதாகிட்ட கேட்டுட்டு வரேன். அப்போ இன்னும் 3 பேரு யாருங்க என அப்பாவியாய் கேட்டான் சரவணன். அவசரப்படறீயே கண்ணா, அஞ்சையும் போட்டது நானு, எனக்கே காது குத்தறியா என சரவணன் கழுத்தை உதய் பிடிக்கப் போக சரவணன் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். இன்னும் சரவணன் கம்பெனிக்கு திரும்பி வரவில்லையென்று கேள்வி...

~தொடரும்.

Thursday, August 03, 2006

நிஜமல்ல, கதை!

Part 2 Part 3

உதய் (விடுங்களேன், கதையிலயாவது ஹீரோவா இருக்க விடுங்களேன்...) அலுவலகத்தில் என்ட்ரி குடுத்ததும் பார்த்தது நீளமான கூந்தல். ஆஹா, முடியே இவ்வளவு சீரா அழகா இருக்கே, முகம் எப்படி இருக்கும் என கூந்தலின் பின்னாலே போனால், உதய், ட்ரிப் எப்படி இருந்தது, உன் சீட் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம். 3 வாரமா ஆபீஸ் பக்கம் வராம நிறைய மெயில் வந்திருக்கும், அதை பார்த்து முடி, பிராஜெக்ட் ஸ்டேட்டஸ் நான் உனக்கு அதுக்கப்புறம் தரேன் என என் பிராஜெக்ட் மானேஜர் சாலினி உதயைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு சீட்டில் உட்கார வைத்தார். திரும்பி பார்த்தால் கூந்தல் அழகி எஸ்கேப். இந்த ஃப்ளோரில்தான் இருக்கப் போவது, பார்த்துட்டா போச்சு என மெயில் பார்க்க திரும்பி விட்டான்.

உதய், ரொம்ப பிஸியா? அவன் ஷேர் மார்க்கெட்டில் விட்ட சொத்தெல்லாம் எப்ப திரும்பி வரும் என கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போது சாலினி கேட்ட கேள்வி இது. கூடவே என் கூந்தல் அழகி! கொஞ்சம் பிஸி, ஆனா நீங்க கேட்டா வேலை இல்லைன்னுதான் சொல்லுவேன் சாலினி என்றான் உதய். ஆஹா, பொங்கு சனி ஆரம்பமாயிடுச்சு. குவாலிட்டி, C, C++, ஜாவா எது கேட்டாலும் ஓஓஓ... தெரியுமேன்னு சொல்லணும்ன்னு முடிவு பண்ணி சாலினி பார்க்காத போது ஹாய் என்றான் உதய். இது நிஷா, உன் பிராஜெக்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு கேட்டாயில்லையா? இவளுக்கு ஜாவா தெரியாது, நீ சொல்லிக் குடுத்து ரெடி பண்ணிக்க, சரியா? என சாலினி கிளம்பிவிட்டார்.

நிஷா, ஜாவா ரொம்ப ஈசி. நான் இருக்கேன், கவலைப்படாதே. அப்புறம், நீ எந்த ஊரு நிஷா? கலக்கிட்டடா உதய், நல்ல ஆரம்பம் பாதி வழி போய் சேர்ந்த மாதிரி என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். நான் திருவனந்தபுரம், ஆனா அப்பா, அம்மா தமிழ் என்றாள் நிஷா.. அப்படியா நிஷா, நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம், நான் கூட உங்க ஊருக்கு போற வழிதான். அப்படியா, நீங்களும் கேரளாவா, கொல்லமா? என ஆச்சர்யத்துடன் கேட்டாள். இல்லை, போற வழியில... ஈரோடு. ஈரோடு திருவனந்தபுரம் போற வழியிலதான் இருக்கு என சிரித்துக் கொண்டே ஸ்டைலாக பார்த்தான். சரி, இப்பவே பாடத்தை ஆரம்பிக்கலாம். ஜாவா முதல்ல கத்துக்கறக்கு முன்னாடி நாம ஏன் இந்த வேலையை பண்றோம்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு ஆரம்பித்து வெட்டியாய் ஒரு ஒன்னே கால் மணி நேரம் பேசினான். 3 நிமிஷம் பேசறக்கு 3 நாள் தயார் பண்ணனும், ஆனா 3 மணி நேரம் பேசறதுக்கு ஒன்னுமே பண்ணத் தேவை இல்லை என்பதை மிகச் சரியாக நிருபித்து விட்டு நிஷா, வாயேன் போய் காஃபி சாப்பிட்டு வந்து பேசலாம் என்றான்.

உதய் விட்ட ஜொள்ளில் ஆடிப் போன நிஷா, என் ஃபிரெண்டு சுருதி வரேன்னு சொன்னாள், அவளையும் கூப்பிட்டுக்கட்டுமா என ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் போனாள். ஒரே கல்லுல... ஏனோ காதலா காதலா டயலாக் மனதில் வந்து போனது உதய்க்கு. ஓ, கண்டிப்பா போலாமே? எங்க அந்த பொண்ணு? என அந்த இடத்தில் ஒரு குட்டி ஆறு ஓடத் தொடங்கி இருந்தது. சுருதியையும் சேர்த்துக் கொண்டு ஜொள்ளாற்றுப் படையை படைக்க ஆரம்பித்தான் காஃபி ஷாப்பில். வந்த வேகத்தில் கூகிளில் தடவி, ஒரு நாலைந்து நல்ல டுட்டோரியலிருந்து உருவி ஒரு டிரெயினிங் மெட்டீரியல் ரெடி பண்ணினான். நிஷா, இது உனக்காகவே நான் பண்ணது, படிச்சிட்டு நாளைக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு. நீ எப்போ வீட்டுக்கு போற? இன்னொரு முறை காஃபி என இழுத்துக் கொண்டு போய்விடுவான் என மனதுக்குள் நினைத்தாளோ எண்ணவோ, இதை பிரிண்ட் எடுத்துட்டு உடனே கிளம்பிருவேன், வெளிய கொஞ்சம் வேலை இருக்கு என்றாள். சொக்கா, நீ எப்பவும் என்கூடத்தான் இருக்கிறாய் என மனதுக்குள் துள்ளிக் குதித்து விட்டு ஓ, அப்படியா? வா எங்கூட பைக்கில போயிடலாமே? என்றான். இல்லை, இல்லை... சுருதி வரேன்னா, நான் அவள் கூட போய்க்கிறேன் என மான் மாதிரி துள்ளி ஓடினாள். சுருதி, உன்னை முதலில் ஊறுகாய்ன்னு நினைச்சேன், நீ மொத்த சாப்பாட்டுக்கும் உலை வைக்கிறயே, இரு உன் லீடரை கொஞ்சம் ஸ்குரூ ஏத்தி விடறேன் என மனதுக்குள் கருவிக் கொண்டான் உதய்.

~தொடரும்.

Tuesday, August 01, 2006

பிருந்தாவனமும் நொந்த குமாரனும்...

oops

Oops! That was reverse eh?

மோசம் போய்ட்டேனேய்யா என்று உங்களை அலர வைக்கும் விஷயம் இது....

ஒரு ஃபிகரும் உங்களை பார்க்காத காரணத்தால் அல்லது நீங்கள் பார்க்கும் பாவைகளுகெல்லாம் ஆள் அமைதல், நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஆவதால், நான் கட்டை பிரம்மச்சாரி, அனுமார் தான் என் கடவுள்ன்னு 27 வருஷமா ஏமாந்துட்டு இருந்தவங்க லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா? உங்களை (என்னையும், ஹிஹிஹி...) அனுமார் கைவிட்டுட்டார்... அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சாம்.

மேலதிக விவரங்களுக்கு...

http://members.tripod.com/panch_kasi/id21.html

இந்த உலகத்தில் நம் தோல்விகளை மறைக்க எந்த கடவுளுமே இல்லையா? இது என்ன இளைஞர்களுக்கு வந்த சோதனை... இனிமேல் நாங்கள் எதை சொல்லி தப்பிப்பது?

Monday, July 31, 2006

மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...

nose

ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டுக் கொண்டிருந்த நேரம். எங்கிட்ட இருந்த PDA (Palm Tungsten E) வில் mp3 பாட்டு கேக்கலாம். 100 பாட்டு எப்பவும் இருக்கும் அதில். புதுசு, குத்து, சோகம், ரிலாக்ஸ்ன்னு வகை வகையா பிரிச்சு வைச்சுக்கிட்டு பஸ்ஸில் பாட்டு கேட்பேன். 1 மணி நேர பயணம் மினிமம் கியாரண்டி என்பதால் குறைந்தது 10 பாட்டு கேட்கலாம்.

அன்னைக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா யார் கூடவோ ரொம்ப நேரம் பேசினதில் சந்தோஷமா இருந்தேன். ஸ்கூல், காலேஜ், கோயில் என எல்லா இடத்திலுமே கடைசியில் நின்னு நின்னு அதே பழக்கத்தில் பஸ்ஸில் கடைசி சீட்டுக்கு போனால் ஏற்கனவே 3 பெண்கள் உக்கார்ந்து கொண்டு தமிழில் சும்மா சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சரி, வந்தது வந்தாச்சுன்னு அதற்க்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் உக்கார்ந்து கொண்டேன். ஐடி கார்டை பெல்ட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன்.

சீட்டில் உக்கார்ந்த பிறகு வழக்கம் போல ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உக்கார்ந்திருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களது டிரெயினிங், யுனிக்ஸ் என பேசியதால் அதுவும் போர் அடித்தது. ரொம்ப சந்தோஷமா இருந்ததாலோ என்னவோ உலகத்தில் மற்றவர்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக இயங்குவதாக தோன்றியது. என் PDA வை எடுத்து (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) நோண்ட ஆரம்பித்தேன்.

இதை கவனித்த ஒரு பெண், "பாருடி பீட்டரை... கால்குலேட்டரை கையில் வைச்சுக்கிட்டு பால்ம்டாப் கையில இருக்கிற நினைப்புல மிதக்கிறதை"...

"ஆமாண்டி, வந்தவுடன் ஐடி கார்டை அவசர அவசரமா எடுத்து ஒளித்து வைத்ததை பார்த்தியா? இப்போதான் ட்ரையினிங் பேட்ச்சில் சேர்ந்திருப்பான் போல"

"புதன் கிழமை பக்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வந்திருக்கான். அவன் பேக் பாரேன், 3 புக் உள்ள இருக்கு, நிச்சயம் டிரெயினிங் பேட்ச்தான்"

அதுவரை பேசாமல் இருந்த ஒரு பெண், "ஏண்டி, அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுட்டு இந்த ஓட்டு ஓட்டறீங்க... அவனை பார்க்காமல் கிண்டல் பண்ணுங்க. அவனை பத்தி பேசுறம்ன்னு தெரிஞ்சு எவன் கிட்டையாவது அர்த்தம் கேட்டு தொலைக்கப் போறான்"

சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க. சரி நமக்கு விதிச்சது அவ்வளவுதான்... தமிழ் பொண்ணுகளா இருக்கு, அப்படியே பிக்கப்,ட்ராப், எஸ்கேப்ன்னு பிளான் பண்ணினா நம்மை பஞ்சர் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல வழிஞ்சா நல்லா இருக்காதுன்னு பாட்டு கேக்க என் சோனி இயர் ஃபோனை எடுத்தேன்...

"அது கால்குலேட்டர் இல்லடி, 50 ரூபாய்க்கு விக்கிற FM ரேடியோ, செம ஹாட் மச்சி" ன்னு சுசித்ரா மாதிரி ஹஸ்கி வாய்சில் சொல்லி வயித்தை புடிச்சி சிரிச்சாங்க. நான் இந்த இழவையெல்லாம் கேக்கணும்னு இருக்கே,"கடவுளே, உனக்கு கண்ணே கிடையாதா??? இப்படியெல்லாம் அழும்பு பண்ணாறாங்க, நான் ஆடம் டீஸ்ன்னு கேஸ் கூட போட முடியாதே" என புலம்பினேன். இருந்த பதட்டத்தில் இயர் ஃபோனை PDA வில் சொருகினேனா என பார்க்காமல் காதில் மட்டும் மாட்டிக் கொண்டு குத்து பிளே லிஸ்ட் செலெக்ட் பண்ணினேன்.

கோடம்பாக்கம் ஏரியா, கூத்து பார்க்க வாரியா ந்னு எங்கேயோ தூரத்தில் கேக்குது. என்னடா ஆச்சு நம்ம இயர் ஃபோனுக்கு, சும்மா ஹோம் தியேட்டர் எபெக்ட் குடுக்குமே, இன்னைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்தா இயர் ஃபோனை சொருகவே இல்லை. அவ்வளவுதானான்னு இயர் ஃபோனை சொருகிட்டு தலையை தூக்கிப் பார்த்தா 3 பொண்ணுகளும் பேயறஞ்ச மாதிரி என்னையவே பார்த்தாங்க...

அட இதுக்கே பயந்துட்டீங்க, நீங்கெல்லாம் கண்ணகி பரம்பரைன்னு நினைச்சா இப்படி பம்முறிங்க, அய்யோ அய்யோ... ன்னு நான் பாட்டில் மூழ்கி விட்டேன். அப்புறம் அந்த 3 பெண்களும் உக்கார்ந்து இருந்த இடத்தில் இன்னொரு ஆள் உட்காரும் அளவுக்கு இடம் உருவானது. அவர்கள் நான் இறங்கும் வரை வாயை திறக்கவே இல்லை என்பது கூடுதல் செய்தி.

Friday, July 28, 2006

பார்வைகள்

2006, ஜுன் இரண்டாம் வாரம் அது. ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டில் அட்டென்டண்ஸ் குடுத்து வந்ததால் நேரம் தவறாமல் சகாக்களுடன் வீட்டின் முன் உள்ள புளிய மரத்தினடியில் நின்று பேசி கொண்டிருந்தேன்.என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. திடீரென பாட்டிக்கு காய்ச்சல் அதிகமாகி விட்டதால் டாக்டரை வீட்டுக்கு வரச் சொல்லாம் என கட்டியிருந்த லுங்கியுடன் கிளம்பி விட்டேன்.

அப்போது இரவு 8 மணி. டாக்டர் கிளீனிக்குக்கு 1 கிலோமீட்டர் போக வேண்டும். டாக்டரை பற்றி ஒரு சின்ன முன்னுரை. எங்கள் ஊருக்கு 15 வருடமாக சிகிச்சை அளிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் (எனக்கு உடம்பு சரியில்லைன்னா பாட்டிதான், டாக்டர் எல்லாம் கிடையாது). ஆனால் அவர் முழு நேர அலுவல் பெருந்துறை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியும்.

கிளீனிக்குக்கு போன பொழுது டாக்டர் உள்ளே ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டரின் மகள் நிறைய சாக்லெட் வைத்துக் கொண்டு உக்கார்ந்திருந்ததால் என்ன பிறந்த நாளா என கேட்டேன். இல்லை 10 ம் வகுப்பில் 1010 மார்க் எடுத்திருக்கேன் அதுக்கு என்றாள். ரொம்ப சந்தோசம் எந்த ஸ்கூல், எந்த குரூப் என கேட்பதற்க்குள் டாக்டர் என்ன வீட்டுக்கு போலாமா என கேட்டுக் கொண்டே வெளியே வந்தார். என்ன டாக்டர் உங்களை மாதிரியே டாக்டருக்கு படிக்க வைக்க போகிறீர்களா என சொல்லிவிட்டு நான் என் நிலைமையை சொன்னேன்.

என்னப்பா, வீட்டுக்கு போகும் நேரத்துல இந்த மாதிரின்னு என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். டாக்டர், இது உங்களுக்கு புதுசில்லை ஆனால் எஙக பாட்டிக்கு புதுசு... வீட்டுக்கு போற வழிதானே பார்த்துட்டு போலாமே என்றேன். 15 வருடமாக எங்கள் ஏரியாவில் மருத்துவம் செய்து கொண்டு இருந்தாலும் எங்கள் வீட்டுக்கு வழி தெரியாது என்றதால் வழி சொல்லிவிட்டு வீட்டுக்கு முன்னே போனேன்.

எங்கள் பழைய வீட்டை இடித்துக்கட்டி 2 வருடம் ஆகிறது. வீடு கட்டும் பொழுது நான் அருகில் இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதை எல்லாம் வைத்து வீட்டை என் மனதில் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஒரு வருடத்துக்கு முன் வீட்டிற்க்கு சென்ற பொழுது என் கற்பனைக்கும் வீட்டுக்கும் நிறைய இடைவெளி இருந்ததால் அது சரியில்லை இது சரியில்லை என ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன்.

எங்க வீட்டுக்கு பெரிய கேட் இருக்கும். என்ன பெயின்ட் அடிப்பதுன்னு பெரிய பட்டிமன்றமே நடத்தி கருப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்திருந்தோம். அதுவரைக்கும் வீட்டில் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது என்ன இது கேட்டுக்கு கருப்பு பெய்ண்ட் என்று கேட்டதில் எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் (அவர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை இப்பொழுது யாரும் குறை சொல்வதில்லையாதலால்). டாக்டர் காரை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு சொன்ன முதல் வார்த்தை கேட் ரொம்ப நல்லா இருக்கு, அதுவும் இந்த கருப்பு மஞ்சள் காம்பினேஷன் ரொம்ப இருக்குன்னு சொல்லிட்டே வீட்டுக்குள் வந்தார்.

பாட்டிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே வீட்டை நன்கு பார்த்துக் கொண்டிருந்தார். அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்குன்னு சொன்னவர் கடைசியாக வரிசையாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்தார். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதை தொகுப்பு, Da Vinci Code, A monk who sold his Ferrari, Angels and Demons, The Alchemist என கலந்து இருந்ததை பார்த்து இதெல்லாம் யாரு இந்த கிராமத்தில படிக்கிறதுன்னு கேட்டார்.

எல்லாம் எஙக பையன்தான்னு பாட்டி சொன்னாங்க. அதுவரை என்னிடம் சரியாக பேசாத டாக்டர் திரும்பி, நீ என்னப்பா படித்திருக்கிறாய் என கேட்டார். என்ஜினியரிங் என்று சொல்லியதும், அதை படிச்சிட்டு இந்த கிராமத்துல என்ன பண்ணிட்டு இருக்கிறாய் என ஆச்சர்யமாக கேட்டார். இல்லைங்க, பெங்களூரில் இருக்கிறேன், வார இறுதியில் ஊருக்கு வந்துவிடுவேன் என்று சொன்னதும், வார வாரம் வர்றியே, சாப்ட்வேரா கம்பெனியிலயா இருக்க? என கேட்க ஆம் என் சொன்னேன். திரும்பவும் ஆச்சர்யபட்டார். டாக்டர் ரொம்ப ஆச்சர்ய படாதீங்க, உங்க உடம்புக்கு ஒத்துக்காது என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

உன் உடையை பார்த்து உன்னை நான் தவறாக நினைத்துவிட்டேன். என் பார்வையை நான் சரி செய்து கொள்ளவேண்டும் என்றார். நீங்களும் இந்த வீட்டை பற்றிய என் பார்வையை சரி செய்துவீட்டீர்கள். இங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பார்த்து கட்டிய வீட்டை அது சரியில்லை இது சரியில்லை என எதாவது நொல்லை சொல்லிக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவருடைய பார்வையும் அது வைக்கும் அளவுகோலும் வித்தியாசம். என்னுடையதுதான் பெருசு என்பதில்தான் பிரச்சினை. இப்போ இதை புரிஞ்சிக்கிட்டதால இனி மேல் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். எங்கள் வீட்டில் அனைவரது முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.

புரபொஷனல் டாக்ஸ்: நிதி அமைச்சரும் சிவாஜியும்

முந்தின பதிவு எழுதும் போது கொஞ்சம் சூடா இருந்தேன். என்னை சாந்தி (!) அடைய வைக்கும் மாதிரியான மெயில் வந்தது. ஓவர் டூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி, சாப்ட்வேர் என்ஜினியர், பாஞ்சாலங்குறிச்சி (வேளாங்கண்ணி இருக்கும் பொழுது, ம்ம்ம்... இருக்கலாம் தப்பில்லை) கன்சல்டிங் இன்கார்ப்பொரேஷன் மற்றும் நிதி அமைச்சர் பி.சிதம்பரம்...

பி.சிதம்பரம்: நீர் தான் சாலரீடு எம்ப்ளாயீ'ஓஓ....

சிவாஜி: நீர் தான் பி.சிதம்பரமோ...

பி.சிதம்பரம்: இதுவரை வருடம் ரூபாய் 2500 செலுத்தி வந்த புரபொஷனல் டாக்ஸ் இனிமேல் வருடம் ரூபாய் 7500, அதாவது மாதம் ரூபாய் 625 வரி அரசுக்கு செலுத்த வேண்டும்.....

சிவாஜி: வரி, வட்டி, கிஸ்தி... யாரை கேட்கிறாய் வரி... எதற்க்கு கேட்கிறாய் வரி.. பக் பொழிகிறது.. ரெவின்யூ விளைகிறது.. உனக்கேன் கட்ட வேண்டும் வரி. பிராஜெக்ட் குவிகிறது வருமனம் வருகிறது உனக்கேன் கட்ட வேண்டும் வட்டி...

எங்களோடு சப்போர்ட்டுக்கு வந்தாயா?
பக் ஃபிக்ஸ் பண்ணினாயா?
டாக்குமென்டேஷன் செய்தாயா? அல்லது,
கொஞ்சி விளையாடும் பெஞ்சில் உள்ளவர்களுக்கு ட்ரெயினிங் தான் கொடுத்தயா? கிளயெண்ட்டா? பிராஜெக்ட் மானேஜரா? மானங்கெட்டவனே...

ஆர்வக் கோளாறும் அரை வேக்காட்டுத்தனமும்...

இந்த அறிவுப்பசி அண்ணாசாமிகளை திருத்தவே முடியாது!!! எனக்கு வந்த ஃபார்வார்ட் மெயிலில் கீழ்க்கண்ட சங்கதி இருந்தது.

mail starts...

IT strike

Employees of IT Companies in Hyderabad, Bangalore, Chennai, have decided to stage a walk out on Monday, the 31st of July owing to the raise of Professional Tax. Kindly forward this to all IT employees, colleagues, friends to turn on this awareness. The best means is Forwarding messages and It Employees are no less a centurion in sending forwards. For once, for their own sake let them forward this mail around and circulate all over to create this awareness.

For those who are still not aware,

Every month Rs 200 is deducted from our salary as Professional Tax and 300 in March Totaling the Yearly Amount to Rs 2500. Now Instead of Rs 2500/Year we will be charged Rs.7500/Year i.e. - Rs. 625/Month will be deducted from now ..........

mail ends...

என்னடா இது, IT மக்கள் கூட்டமா சேருவாங்கா போலிருக்கு... அதுக்கு நம்ம இங்கிலீஷ் தினத் தந்தியில் இவ்வளவுதான் மரியாதையான்னு (ஒரு வரியில சொல்லிட்டாங்க) ஒரே சோகமா இருந்தேன். சரி இந்த அறிவுப்பசி அண்ணாசாமிக்கு நிறைய வேலை இருந்திருக்கும். அதனால விரிவான செய்தி சொல்லாமல் விட்டிருக்கலாம்ன்னு படத்தில் கிடைத்த விவரங்களை வைத்து தேடிப் பார்த்தால் த்த்தூஉஊ.... காறித் துப்பலாம் போல இருந்தது... மேட்டர் என்னன்னா அது Income tax department, Information Technology இல்லை...

கீழே படத்தை பாருங்க... அதே பேப்பரில் இதை எப்படி போட்டிருக்காங்கன்னு

I-T strike

நம்ம மக்களாவது இதுக்கெல்லாம் ஒன்னு சேருவதாவது... பில்லிங், டெட்லைன், இம்பிளிமென்டேஷன், கமிட்மென்ட் ஒதுங்கிடுவாங்க...

இது (Professional tax hike) 2004 முதலே பேசப்பட்டு வந்தாலும் இப்போதான் அமுல்படுத்திருக்காங்க... 2004ல் பிரேம்ஜியின் வார்த்தைகள் இங்கே...

ஒன்று மட்டும் நிஜம்... கொஞ்சம் விசாரிக்காம நாமளும் வார்த்தையை விட்டுட்டா கடைசி வரைக்கும் அதுக்கு சப்பைகட்டு கட்டவே நேரம் சரியாக இருக்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம்...

Tuesday, July 25, 2006

புதிர்

kr1

ஆப்பிரிக்கா காட்டில் ஒரு நாள் உங்களை தலை கீழாக மேலே உள்ள படத்தில் இருப்பது போல் கட்டி வைத்துள்ளார்கள். மெழுகுவர்த்தி மெதுவாக உங்களை கட்டியிருக்கும் கயிற்றை எரித்துக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் 3 நாள் சாப்பிடாத சிங்கம் உங்களுக்காக பசியுடன் காத்திருக்கிறது. உங்களை காப்பாற்ற ஒருவரும் அருகில் இல்லை. உங்களது உயிர் இப்போது அந்த கயிற்றிடம் உள்ளது.

நீங்கள் எப்படியாவது அந்த சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மெழுகுவர்த்தியை அணைக்கச் செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை:

2

Monday, July 24, 2006

மப்பு சுல்தான்

சாப்ட்வேர் குஞ்சுகளுக்கு லொள்ளு மற்றும் வேகம் அதிகம், அதிலும் கட்டுடைப்பு என்றால் முன்னாடி நிற்பார்கள். TIP சுல்தான் என ஒருவரை Microsoft Office tip குடுக்க அனுப்பினால் அவர் அடுத்த நாள் திரும்பி வரும் முன்னர் மப்பு சுல்தானை இறக்கி விட்டிருந்தார்கள் அவருக்கு போட்டியாக...

image002

யாதுமாகி நின்றாய் - 1

broken-heart-2

மண்டைக்குள் எப்பொழுதும் குதிரைக் குளம்பின் சத்தம் வந்து கொண்டிருக்கிறதா? கண்ணை மூடினால் கடைசியில் நீங்கள் விளிம்பில் தொங்கிக் கொண்டு யாரவது வந்து தூக்கி விடுவார்களா என படுக்கையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறீர்களா? இன்னைக்கு ட்ரீட் என்னுடையது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் என நண்பர்கள் யாரவது சொன்னால் என் இதயம் கவர்ந்தவளுடன் ஏரிக் கரையில், நிலவு வெளிச்சத்தில் என சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்களா? எந்த ஜோடி மரத்தை சுத்தி டூயட் பாடிக் கொண்டிருந்த்தாலும் நாயகனின் முகத்தில் உங்கள் ஃபோட்டோவையும் நாயகி முகத்தில் ஒரு கேள்விக்குறியை மாட்டி டூயட் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? ஜாதகம் வந்திருக்கு என அம்மா ஃபோனில் சொன்னால் இங்க நான் சாதிக்க (?) வேண்டியது நிறைய இருக்கு, அப்புறம்தான் கல்யாணம் என சாமாளிக்கிறீர்களா? அந்த பெண்ணிடம் ஃபோனில் பேச ஒன்றும் இல்லாமல் அப்புறம் அப்புறம் அப்புறம் ... என 100 தடவை சொல்லிக் கொண்டிருக்கீறீர்களா? அவளிடம் பேச காரணம், மெயில் அனுப்ப காரணம் தேடிக் கொண்டிருகிறீர்களா?

எதோ என்னால் முடிந்த வகையில் உங்களுக்கு உதவ (உபத்திரவம்?) முயலும் முதல் முயற்சி!!!

என் தூக்கமில்லா இரவுகளுக்காக உன்னை சபிக்கலாம் போல இருக்கிறது; உனக்கொரு மகன் பிறப்பான், அவன் என் மகள் பின்னால் பைத்தியமாக சுற்றுவான், இப்போது நான் உன் பின்னால் சுற்றுவதை போல.

ஆனால் நாம் ஏன் அந்த பிஞ்சுகளுக்கு இந்த கொடூரத்தை செய்ய வேண்டும்,
அவர்கள் அண்ணன் தங்கையாக இருந்துவிட்டு போகட்டுமே!!!

இதை யாரிடமாவது சொல்லி உயிரோடு இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த சேவையை தொடர எனக்கு அது மேலும் ஊக்கமளிக்கும் :-)

பின்குறிப்பு:- தலைப்பை தனியாக விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

Friday, July 21, 2006

காலை வணக்கம்!!!


எழுதிய நாள்: மே 12, 2006
எழுதிய நேரம்: காலை 8:30 மணி

இது நான் யாருக்கு சொல்லியிருப்பேன், இல்லை யாரை நினைத்து எழுதி இருப்பேன்னு பெரிய விவாதமே நடந்தது...