Wednesday, May 28, 2014

கோழி வளரும் கதை


ஆமையைக் காணவில்லை என அறிவுப்பு பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். அப்படியே பின்னோக்கி போய் ஊரில் கோழியைக் காணோம் எனத் தேடும் ஆயாக்கள் நினைவுக்கு வந்தார்கள். கோழி ஊரெல்லாம் குப்பையைக் கிளறினாலும் பொழுதானால் சரியாக சாய்த்து வைத்த கூடையில் ஐக்கியமாகி விடும். சிறு சிறு சத்தங்களுடன், பொழுது போய் ஒரு மணி நேரத்தில் அடங்கி விடும். பாம்போ, பல்லியோ அதன் இருப்பை கலைக்காதிருந்தால் காலை வரை  சத்தம் கேட்காது.

கோழி காட்டுக்குள் திரியும் வரை பிரச்சினை இல்லை. போகும் போது வரும் போது வழியில் இருக்கும் குப்பையை கிளறி வெட்டுக்குத்து அளவுக்கு போய் விடும். கோழி நன்றாக வளருவதைப் பார்த்தால் குப்பையை கிளறும் வரை பொறுத்து பின் சமயம் பார்த்து கல்லெடுத்து எறிந்து ஆத்திரத்தை அடக்கிக் கொள்வார்கள்.



கோழி குஞ்சுகள்தான் ஏழரையுடன் பிறந்திருக்கும். நோய் கொண்டு போகுமோ, காக்கா கொத்துமோ, கழுகு தூக்குமோ, வெயில் தாங்காமல் சுருண்டு விழுமோ என்ற பயங்களுக்கு நடுவில் திக்கு தெரியாமால் சில சமயம் காணாமலும் போய் விடும். அம்மா கோழியைக் காணாமல் அலை மோதும். பொடியன் எவனாவது இது அன்னக்கொடி அக்கா வீட்டுக்குஞ்சு என பாய்ந்து அமுக்கி பிடிக்கும் கணத்தில் இழுத்த காற்றுதான் கடைசி மூச்சாக இருக்கும். விழுக் விழுக் என இரண்டு முறை காலைக் கூட முழுதாக இழுக்க முடியாமல் போய் சேர்ந்திருக்கும். சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது கோழி மிதித்தெல்லாம் குஞ்சு சாவாது, வேண்டுமானால் நொண்டலாம்.

ஊருக்குள் வந்து போகும் யாரோ ஒருவர் ஒரு கோழிக் குஞ்சு தனியாக அல்லாடுகிறது என எதிர்ப்பட்ட ஒருவரிடம் சொன்னால் போதும் பொட்டி வந்துருச்சாமா பொட்டி வந்துருச்சாமா என ஆண்பாவத்தில் சொல்வது மாதிரி நொடியில் ஊரெல்லாம் தெரிந்துவிடும். காட்டுக்கு வேலைக்குப் போகாமல் வீட்டில்  இருந்தால் கூந்தலை அள்ளி முடிந்து வந்து விரட்டிக் கொண்டு போவார்கள். பொதுவாகவே வேலையிலிருந்து திரும்பி வந்தவுடன் ஊர் மேயும் கோழிகளை எண்ணிப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். கோழி தினமும் ஒரே இடத்தில்தான் முட்டையிடும். அதை எடுத்து சேர்த்து வைத்து அடைக்கு வைப்பது கில்லாடியான வேலை. முட்டையிடும் இடத்தை கண்டுபிடிக்கவில்லையெனில் கோவிந்தாதான்.

இதெல்லாம் தாண்டி குஞ்சு கொஞ்சம் வளர்ந்து தனியாக மேயும் பருவத்தில் ஆபத்து புளிய மரத்தடியிலோ, சாவடியிலோ நிழலுக்கு அமர்ந்திருக்கும் மைனர் குஞ்சு ரூபத்தில் வரும். ஆள் இல்லாத சமயம் பார்த்து கோழியை அமுக்கி, இறக்கை இரண்டையும் சேர்த்து திருகிவிடுவார்கள். அது என்ன ஏது என சுதாரிப்பதற்குள் தலைகீழாக ஒரு கையில் பிடித்து இன்னொரு கையால் கழுத்தின் மேல் வீசினால் தலை திருகி விடும். அதை அப்படியே எதாவது ஒரு காட்டுக்கு எடுத்துப் போய் கிடைத்த விறகுகளை வைத்து அடுப்புக்கூட்டி சாறு வைத்து விடுவார்கள்.

மைனர்களின் சமையல் திறமை அலாதியானது. சட்டி உடைந்ததாக இருக்கும், சமயத்தில் விறகு ஈரமாக இருக்கும், எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவுதான் இருக்கும். சினன வெங்காயம் மற்றும் வர மிளகாய்தான் மசாலா பொருட்கள். ஒரு மணி நேரத்தில் சுட சுட வறுவல் தயார். இந்த சம்பவம் நடந்த இடத்தை அவர்களே காட்டினாதால் உண்டு, யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அவ்வளவு தொழில் நேர்த்தி. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என ஒட்டிய மண்ணை தட்டி விட்டுக் கொண்டு எழுந்து நடந்து விடுவார்கள்.

கோழிய பாத்தியா என யாராவது கேட்டு, அட ஆமாம் இங்கதான் மேஞ்சுட்டு இருந்தது என அடையாளம் சொல்லி தேடும்போது ஒன்றிரண்டு கோழி இறகுகளைப் பார்த்தால் அவ்வளவுதான், அதற்க்குப் பிறகு வர ஆரம்பிக்கும் எந்த வார்த்தைகள் எதையும் அச்சில் ஏற்ற முடியாது. ப்பீப் - ப்பீப் - ப்பீப் - ப்பீப் மட்டுந்தான் கேட்கும். விதம் விதமாக திட்டுவதில்லாமல் அண்ணாமருக்கு கோழி குத்தி சாபம் விடறேன், முட்டை மந்திரித்து வைக்கிறேன், திருடினவன் கை விளங்காம போயிடும், சாப்பிட்ட வாய் கோணிக்கும் என பீதி கிளப்பி விடுவார்கள்.

இதெல்லாம் பலிக்குமா என கேட்டால் ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிடாக கதையாக, செவியூரில இப்படித்தான், ஊதியூரில் இப்படித்தான் என போய் விசாரித்து வர முடியாத ஊரில் நடந்ததாக சொல்வார்கள். நம்பிக்கை இல்லாமல் கேட்டால் அம்மணி அக்காவின் ரெண்டாவது கொழுந்தியாவின் மச்சாண்டார் பேத்தியை அங்கதான் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் என தரவு தருவார்கள். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் யாருக்காவது நக சுத்தி வாந்தாலும் பார்வை வேறுமாதிரிதான் இருக்கும். நக சுத்தி வந்தவருக்கு பிடிக்காதவர்களோ இவ சுத்த பத்தமா இருந்து சாபம் விட்டிருந்தா முழுசா பலிச்சிருக்கும் என கோழியத் தொலைத்தவரை திட்டிக் கொண்டிருப்பார்கள்.

இது அத்தனையும் தாண்டி கோழி வளர்ந்தாலும் வீட்டுக்கு மச்சான் மற்றும் மாப்பிள்ளைகள் வரும் நாளில் காரியம் முடிந்திருக்கும்.

Monday, May 26, 2014

டாலும் ழீயும், கரும்புனல், மாதொருபாகன்

வருட ஆரம்பத்தில் வைராக்கியத்துடன் புத்தகம் வாங்கி, வழக்கம் போல் கோழி அடைக்கு உக்காரும் கதையாக ஆகிவிடுமோ என நினைத்திருந்தேன். பரவாயில்லை, எண்ணிலடங்கா புடுங்கல்கள் மத்தியிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மேய்ந்து கொண்டிருக்கிறேன். 

முதலில் டாலும் ழீயும் - விழியன்




நான் ஒரு கதைசொல்லி இல்லையென்றாலும் ஒரு ஊரில் என இழுத்து இழுத்து கன்னித்தீவு மாதிரி சொல்லி சமாளிக்கலாம் என நினைத்தால் ப்ரித்திவ் இன்னமும் கதை கேட்க தயாராக இல்லை. ஒரு விநாடி கதை கேட்டால் அடுத்த விநாடி சைக்கிளில், அடுத்த விநாடி அம்மா மடியில் என்று சுத்துகிறவனுக்கு ஒரு நிமிடம் பெரிய விசயம். விழியன் குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என்பதை விட பெற்றோர்களுக்கு ஒரு மேப் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கதை கேட்பவர்களுக்கு தகுந்த மாதிரி கதைசொல்லிகள் அத்தியாயங்களை எப்போது விருப்பமோ அப்போது முடிக்கலாம். 

உங்கள் குழந்தை தானே படிக்கும் வயதில் இருந்தாலும் பிரச்சினை இல்லை. பக்கங்கள் குறைவு, குழந்தை தலைக்கு வைத்து தூங்கும் அபாயமும் இல்லை, நழுவி விழுந்து எலும்பு முறியும் துன்பமும் இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் அழகான தலைப்பு மற்றும் படம். இரண்டு குழந்தைகள் சேர்ந்து இதை வாசித்தால் என்ன மாதிரியான உரையாடல் இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். 2000 பக்கம் தாண்டியும் அது போகும் வாய்ப்புகளைத்தான் கதையாக சொல்லியிருக்கிறார். 

அவரின் மற்ற படைப்புகளை வாசிக்கவில்லை, என் வாரிசு கதை கேட்கும் பருவத்திற்கு I am waiting.

*************************************************************
கரும்புனல் - ராம்சுரேஷ்



இந்த வருட புத்தக கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தின்  பெஸ்ட் செல்லர் புத்தகம் கரும்புனல். பெனாத்தல் சுரேஷ் பிளாக்கை 2005 தமிழ்மணம் காலத்தில் இருந்து வாசித்து வருகிறேன். இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல என டிஸ்கி போடாமல் எல்லா நான் அனுபவித்ததுதான் கூட வந்து பாருங்கள் என ஜார்க்கண்ட் கூட்டிபோகிறார். நிலக்கரி, ஆதிவாசிகள், அரசாங்கம் என கதை. முதல் அத்தியாயம் வாசிக்கும்போது ஜிலீர் என்றது. அதுவும் பழகினா சரியாப்போகும் என்பதான மைண்ட்செட் கலவரத்தை உண்டு பண்ணியது. நாயகி இல்லாத கதையை சொன்னால் யாரும் வாசிக்க மாட்டார்கள் என நினைத்தாரோ என்னவோ தமிழ்ப்பட கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவே இதிலும். இந்த கதையை விருமாண்டி பாணியில் பலவிதமாக சொல்லலாம். நாயகனை லீகல் ஆள் என இறக்கியதில் இவர் எதோ நட்ட நடு செண்டரில் சொல்வார் என நினைத்தேன். பார்த்ததை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். 

எனக்குப் புரியாத பூமி, தொழில் மற்றும்  பிரச்சனை. பள்ளியில் படித்த புவியியல் பாடம் மற்றும் கூகுள் மேப் துணையுடன் முதலில் இடத்தைப் பார்த்தேன். கற்பனையான சுரங்கம் என்றாலும் விவரிக்கும்போது மேப்பில் சரியாக புள்ளி வைத்து மார்க் வாங்கி விடலாம். சுரங்கத்தைப் பற்றி எழுதியதை வைத்து ஒரு மாதிரி மனதில் கோடு போட்டு வைத்திருந்தேன். புத்தகத்தைப் படித்துவிட்டு பொகாரோ சுரங்கம் எப்படி இருக்கும் என பார்க்கலாம் என்றால் பிங்கோ!!! என் மனதில் நினைத்தது படமாக இருந்தது. விரல் விட்டு எண்ணி விடும் பாத்திரங்கள், ஆனால் எல்லா பக்கத்து பார்வையும் பதிவு செய்ய தோதான பாத்திரங்கள். கதையின் கட்டமைப்பு அருமை. மெதுவாக உள்ளிழுத்து பிரச்சினையின் வடிவத்தை சொல்லி, பிரச்சினையின் ஊடாகவே பயணித்து அதைத் தீர்க்கும் வரைக்கும் வந்த பிறகு அடுத்த பக்கத்தில் சுபம் என முடிப்பார் என நினைத்தால் ஒரு பைனல் கிக்!

இந்தியா ஒளிர வேண்டும் என்றால் சுரங்கம் அவசியம், நக்சல், மாவோயிஸ்ட் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என நினைப்பவர்கள் இந்த புதினத்தைப் படிப்பார்களே ஆனால் கொஞ்சமாவது  இதைப்பற்றி சிந்திப்பார்கள். ஆனாலும் இந்த புதினத்திலும் மேலோட்டமாகவே சொல்லியிருக்கிறார் என சொல்வேன். திவ்யாவுக்கு பதில் தமிழ் பேசத்தெரிந்த அலோக் இருந்திருந்தாலும் ஆசிரியர் நினைத்த திருப்பங்கள் இருந்திருக்கும். ஒரே இரவில் வாசித்தாலும் 3 நாட்கள் சுரங்கம் பற்றிய தேடல்தான் நிறைந்து இருந்தது.

*************************************************************
மாதொருபாகன் - பெருமாள் முருகன்



மாதொருபாகன்- திருச்செங்கோடு அர்த்தநாறீஸ்வரின் இன்னொரு பெயர். ஆணும் பெண்ணும் சமமென உடலை சரிபாதி பிரித்து வைத்திருக்கும் சாமி. கதை சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தில் நடப்பதால் ஆசிரியரின் முன்னுரையை வாசித்து விட்டு கதைக்கு செல்லாம் என்றால் ரெட் அலெர்ட்.  சொல்ல வந்த விசயம் அப்படிப்படதென்பதால் தன் உழைப்பை,ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

பெயர் சொல்லாமல் ராஜாஜியை திட்டியிருக்கிறார், திருச்செங்கோட்டு கோயில் அய்யர் பாவாத்தாவை மறைத்ததை சொல்கிறார், குத்தல் பேச்சுக்களால் இயல்பு மாறும் வறடியின் கோபங்களை சொல்கிறார். காளியும் பொன்னாளும் கதையின் தலைப்பை அத்தனை பக்கங்களிலும் நிறைத்துக்கொண்டே வருகிறார்கள். சாமியின் பெயர்க்காரணத்துக்கு ஏற்ப வாழ்ந்து சாமி ஆனார்களா இல்லை சாமி குழந்தை இருந்தால் போதும் என இருந்தார்களா? வாசகர்களிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு பதினாலாம் நாள் திருவிழாவை கண் முன் நிறுத்துகிறார். கலவையான ஒரு மனநிலையில் நான்.

*************************************************************
பாதி வருடம் முடிக்கப் போகிறேன், இடையில் வந்த சிறு தொய்வைத்தவிர நான் படிப்பதற்காக நேரம் பெயரளவுக்காவாது வைத்திருக்கிறேன். ஹேப்பி அண்ணாச்சி!!!