Tuesday, April 25, 2006

பாஸ் வேர்டு கூத்துக்கள்

அந்த காலத்தில் (சுமார் 3 வருடங்களுக்கு முன்பு வரை) பாஸ் வேர்டு பரிமாறிக் கொள்வது என்பது IT கம்பெனிகளில் சகஜமான ஒன்று. அந்த கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை இதை எழுத வைக்கிறது.

முதலில் நடந்தது இது. வேலையில் சேர்ந்திருந்த நேரம். நண்பன்(1) அவன் பாஸ் வேர்டாக ஒரு பெண்ணின் பெயரை வைதிருக்கிறான் என நண்பன்(2) சொன்னான். நாங்கள் யாரும் நண்பன்(2)வை நம்பவில்லை. இதில் உசுப்பேறிய நண்பன்(2) கீ போர்டில் டைப் செய்யும் எல்லாத்தையும் ஸ்டோர் பண்ணும் சாப்ட்வேர் நண்பன்(1)வின் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் பண்ணி எங்களுக்கு அதை நிருபித்தான். (நண்பன்(2) இன்னமும் அப்படித்தான்). நண்பன்(1)வை கையும் களவுமாக பிடித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால் நண்பன்(1) அது என் அம்மாவின் பெயர் என சொன்ன பொழுது நாங்கள் நம்பித்தான் தீர வேண்டி இருந்தது.

இன்னொரு நாள் ஒருத்தனிடம் யுனிக்ஸ் பாஸ் வேர்டு கேட்டால் F***123 ட்ரை பண்ணு இல்லைன்னா c@#$, இல்லைன்னா P^&*( என சத்தமா சொன்னான். ஏன் உனக்கு இவ்ளோ கெட்ட வார்த்தை மட்டும்தான் தெரியுமா என பின்னாடி எங்க பிராஜெக்ட் மேனேஜர் வந்து நின்றார். எங்க ஊரில டவுசர் கழண்ட்ருச்சுன்னு சொல்லுவாங்க, எனக்கு ஏற்கனவே பல முறை டவுசர் கழண்டிருந்தாலும் அடுத்தவனுக்கு நடக்கும் போது பார்ப்பது அலாதி சுகம்.

ஒரு பெண் நண்பி அலுவலகம் முடிந்து சென்ற பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு மெயில் அனுப்பவில்லை என்று. இது எங்கள் மேனஜருக்கு தெரிந்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்று அந்த பெண் பதறிக் கொண்டு எனக்கு போன் செய்து நீ அனுப்பிவிடுகிறாயா என கேட்டாள். நானும் அவள் மெயில் பாக்ஸை திறக்க பாஸ் வேர்டு கேட்டேன். அவள் கூட வேலை செய்பவன் பெயரை சொல்லி கூட 3 நம்பர் சொன்னாள். எல்லாம் அனுப்பிய பிறகுதான் தோன்றியது அட மவனே இது காதல் செய்யும் பாடு என்று. அடுத்த நாள் அவளே வந்து நான் பாஸ் வேர்டு மாத்திட்டேன் யாருகிட்டையும் சொல்லாதே என்றாள். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என தைரியம் சொன்னேன். (அவள் பாஸ் வேர்டை மட்டும்தான் மாற்றியிருக்கிறாளா இல்லை ஆளையும் மாற்றி விட்டாளா என எனக்கு இப்போது தெரியாது.)

Sunday, April 23, 2006

பெங்களூர் பிளாக்கர் மீட்

போன வாரத்தில் விளையாட்டுத்தனமாக ராகவனுக்கு முதலில் அடித்த மெயில் பிளாக்கர் மீட் வரை வந்துவிட்டது. இளவஞ்சி, சுதர்சன் என கூட்டம் சேர்ந்தவுடன் இளவஞ்சி அப்படியே சனிக்கிழமை சாப்பிட வாங்கன்னு அழைப்பு விடுத்தார். அசைவ சாப்பாடு மட்டுமே நான் சாப்பிடுவதால் முதலில் நான் நிறைய யோசித்தேன். அப்புறம் அவர் மெனு என்னன்னு சொன்ன பிறகு நான் போகாமல் விட்டால் அது நான் என் வயிற்றுக்கு செய்யும் துரோகம்னு அட்டெனென்ஸ் குடுக்க தயாராகி விட்டேன். இதற்காக நான் மதியம் கூட சாப்பிடலைன்னா பாருங்க...

லேட் அடிஷனாக கொங்கு ராசாவும் வருவதாக சுதர்ஷன் சொன்னதும் சரி இன்னைக்கு சிவராத்திரிதான் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். சரியாக 7 மணிக்கு இளவஞ்சி சொன்ன இடத்தில் நின்று கொண்டிருந்தபோது TN 41 ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி வந்து நின்றது. அது பொள்ளாச்சி வண்டி என்று உறுதியாக தெரிந்தாலும் ஒரு 5 நிமிடம் பொறுத்து மெதுவாக நீங்க கொங்கு ராசாவா என மெதுவாக பேசி அப்புறம் சகஜமாக கொசுக்கடியில் கையை காலை தேய்த்துக்கொண்டே பேச ஆரம்பித்தோம். ராகவனுக்கு போன் செய்தால் 5 நிமிடத்தில் இருப்பதாக சொன்னார். அதுக்கு அப்புறம் ஒரு அரை மணி நேரம் அவர் வராததால் அவர் வந்தவுடன் அவர் என்ன வாட்ச் கட்டியிருக்கிறார் என பார்க்க வேண்டும் என நினைத்து அவர் அடுத்தடுத்து பண்ணிய கூத்துகளில் இது சுத்தமாக மறந்து விட்டது.

திரும்ப ராகவன் போன் பண்ணி வேறு ஒரு இடத்தில் நிற்பதாக சொன்னார். அங்கே போய் அவரை காணாமல் திரும்ப போன் செய்தால் நாங்கள் முதலில் இருந்த இடத்தில் இருப்பதாக சொன்னார்கள். நானும் கொங்கு ராசாவும் அங்கு போய் சேர்ந்த பொழுது இளவஞ்சியும் வந்து சேர்ந்து இருந்தார். சரியாக 7 மணிக்கு சந்திப்பதாக சொல்லி 8 மணிக்கு (இந்திய நேரப்படி சரியாக 7 மணின்னு படிங்க) பார்த்தோம்.

செவிக் குணவில்லாத போழ்து சிறுது
வயிற்றுக்கும் ஈயப் படும் என்பதற்க்கு பதிலாக பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து மணி பார்த்தால் மணி 10. ஒருவருக்கொருவர் அறிமுகமான பிறகு அரசியல், இலக்கியம், சொந்த கதைகள் என பேச்சு F1 ரேசில் த்ரோட்டில் போட்டு வண்டி ஓட்டுவது போல் இலக்கிலாமல் சீறி பாய்ந்தது. செகண்ட் ஷோ சினிமா பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணிருந்தோம், இனி ஒரு படத்துக்கும் போக முடியாது என சந்திப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

அடடா, முக்கியமானத சொல்ல மறந்துட்டேன். சப்பாத்தி, கோழி, மீன், தயிர் சாதம்ன்னு திருமதி.இளவஞ்சி கலக்கி இருந்தாங்க... நாங்க சாப்பிடறதை பார்த்ததுக்கு அப்புறமும் அடிக்கடி வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாங்க.. அவங்க ரொம்ப நல்லவங்க...

Saturday, April 22, 2006

தவமாய் தவமிருந்து...


யாரோ ஒரு பெரிய தலை தெரு விளக்குல படிச்சு பெரிய ஆளானார்ன்னு புத்தகதுல படிச்சது. இவரு எப்படியும் பெரிய ஆளாகிடுவோம்னு லேடீஸ் ஹாஸ்டல் முன்னாடி தவமாய் தவமிருந்து படிச்சப்போ எடுத்த ஃபோட்டோ இது. இந்த கூத்துல இவரு பெரிய ஆளா ஆக முடியாம போனது மட்டும் இல்லாம லேடீஸ் ஹாஸ்டல் இருந்த ஓரு பொண்ணும் ஏறெடுத்து பார்க்காம இன்னும் தனியா சுத்திட்டு இருக்கிறார்.ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கலாம்னு ட்ரை பண்ணி ரெண்டையும் கோட்டை விட்டுடார்ன்னு தோணுதா???

Tuesday, April 18, 2006

ஒரு காலை இள வெய்யில் நேரம்


இது எங்கேயோ எடுத்த ஃபோட்டோ இல்லை.என் நண்பன் கிச்சா இங்க பெங்களூரில் நாங்கள் தினமும் கடக்கும் இடத்தைத்தான் இப்படி எடுத்திருக்கிறான். தினமும் இதை கடந்து போனாலும் ரசிக்கும் மனநிலையில் ஒருவரும் இல்லை அப்படிங்கறதுதான் வருத்தத்திற்க்கு உரியது.

அதே நேரத்தில் நேற்று இரவு ரொம்ப நாளைக்கு அப்புறம் "நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே" பாடல் இந்திரா படத்தில் இருந்து ஒளிபரப்பினார்கள். இந்த மாதிரி பாடல்களை அபூர்வமாகத்தான் யாரவது கேட்கிறார்கள். மத்தபடி எல்லோரும் கேட்பதெல்லாம் "வாழை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்", "வடு மாங்கா ஊருதுங்கோ" பாடல்கள்தான்.

Monday, April 10, 2006

தடங்கலுக்கு வருந்துகிறோம்

தடங்கலுக்கு வருந்துகிறோம்ன்னு DD-யில் போடுவது போல போடலாம்ன்னு நினைச்சா அதுக்கு கூட நேரம் கிடைக்கல... சில பல சிக்கல்களினால் இந்த பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. மீண்டும் பழையபடி கிறுக்க இன்னும் சில நாள் பிடிக்கும். அது வரைக்கும் ஒரு குட்டி குட்டி பிரேக்.