Wednesday, October 31, 2007

கற்றது தமிழ்


முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்!!!


பிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. "தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்? என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமிழின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.


மானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.


பிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. "நிஜமாதான் சொல்லறியா?" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை!


காலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.


சாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; இயக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.


தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். "இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்" என்னும் காரணம் உச்ச கட்டம்.


சாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர்.


எங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.


யவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார்.



கற்றது தமிழ்; ஒழுக்கமல்ல.

Saturday, October 27, 2007

நிலா நிலா ஓடி வா...




பூமியை நெருங்கிய நிலா என படித்த போது தினமும் பார்க்கும் நிலாதானே என நினைத்தேன். இனறு அதை பார்த்த பிறகு ஒரு சின்ன பரவசம்; பெரிதாக எதைப் பார்த்தாலும், கடல், யானை, ரங்க ராட்டினம் பார்க்கும் போது வருமே அது மாதிரி.


சின்ன வயதில், பாட்டி கையில் பிசைந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே "நிலாவில யாரு பாட்டி இருக்கா?" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க" என சொல்ல "இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா?" என கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்த விட்டது.


யார் கண்டது, 8 மணி கூட்டத்திற்கு 10 மணிக்கு வரும் தலைவரை எதிர்பார்த்து வானத்தை பார்த்த தொண்டர்கள்; நிலாவைக் காட்டி ரெண்டு வாய் சாதம் சேர்த்து ஊட்டும் அம்மாக்கள்; நிலாவில் முதல்ல கால் வைச்சவரை எல்லாரும் சொல்லிடுவீங்க, அங்க முதல்ல ஒன்னுக்கு போனவர் பேர் தெரியுமா? என கேட்டவர் மற்றும் அவர் நண்பர்கள்; இன்றைக்காவது மனனவியை வெளியே கூட்டிப் போக வேண்டும் என எப்போதும் போல் லேட்டாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் கணவர்கள்; இருட்டு மூலையில் நிலாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சின்னதும் பெரிதும் முத்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள் என பல தரப்பட்ட மக்களிடமும் ஒரு சின்ன சலனத்தை ஒரு சில கணங்களாவது விதைத்திருக்கும்.


அதையும் மீறி, ஞானியின் நெளியும் பூணூல், தெஹெல்கா ஆப்பரேசன், சென்செக்ஸ் 20000 தாண்டுமா, தீபாவளி பலகாரம், சிவப்பு சுடிதார் உனக்கு, மஞ்சள் அவனுக்கு, வெள்ளை எனக்கு என பாகப் பிரிவினை செய்பவர்களும் இருப்பார்கள்தான்.
முழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே!!!

Monday, July 23, 2007

காதலும் காதல் நிமித்தமும்...

இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ, பத்திரிக்கைகளோ விரல் விட்டு எண்ணி விடலாம். பெற்றோர்களின் பார்வையில் இந்த காதலை மையப்படுத்தி எந்த கதையையும், சினிமாவையும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. அப்படி இருந்தாலும், பிள்ளைகளின் காதலை தெரிந்த பெற்றோர்களின் இயல்பை, சந்தோசத்தை, பயத்தை, பரிதவிப்பை முழுதாக சித்தரித்தது மிகவும் குறைவே (இருந்தால் சொல்லுங்களேன், பார்த்து விடலாம்.)


20, 25 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த நம் குழந்தை எடுத்த முடிவு தப்பாகி விடவா போகிறது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். உலகம் தெரியாத பையன் விளையாட்டுத்தனமா செய்யறதையெல்லாம் ஏத்துக்க முடியாது என சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அதீதமாக சிந்தித்து எக்குத்தப்பான முடிவு எடுக்கும் பெற்றோர்களும் உண்டு. காதலை துணையிடம் சொல்லத் தெரிந்த மனதுக்கு பெற்றோருக்கு தெரியப்படுத்தும் எண்ணம் ஏனோ பெரும்பாலும் இருப்பதில்லை. வயது, நமது சமூக கட்டமைப்பு என பல விசயங்களை சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், பெற்றோர்களின் பார்வையில் காதல் என்பது தீண்டாமையா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வருடம் உனக்கே உனக்காக அழைந்து திரிந்து ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக்கும் அந்த சுகம் இனிமேல் இருக்கப் போவதில்லை; கல்யாண கோலாகலத்தில் ஒரு மூன்று மாதம் அலைந்து திரிந்து எனக்கு ஓய்வே இல்லை என புலம்ப முடியாது; கல்யாண அலைச்சலில் பிளட் பிரசர் ஏறி ஒரு நாலு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க முடியாது; உன் அக்காவுக்கு மறு சீர் என சொல்லி அவள் கல்யாணத்துக்கு செய்த அதே அளவு திரும்ப சீர் செய்ய முடியாது; பெண் வீட்டு பெருமையெல்லாம் நானே சொல்ல முடியாமல் உன்னைக் கேட்டு சொல்ல வேண்டி இருக்கும்; பரவாயில்லை உன் சுகமே எங்களுக்கும் சுகம் என சொல்லும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

இருக்கறதுலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்கறதுதான் என பதிலுக்கு மல்லுக்கட்டி காதலை தூக்கியெறிபவர்களும் இருப்பார்கள். வீழ்வது நம் கனவாக இருப்பினும் வாழ்வது நம் காதலாக இருக்கட்டும் என காவிய வசனங்கள் பேசமால், கிடைத்த வாழ்க்கையில் டையப்ப்ர் மாத்திக் கொண்டிருக்கும் இப்போதைய அம்மா அப்பாக்கள் என்ன செய்வார்கள்?

Sunday, July 22, 2007

என் எட்டாத எட்டு...


எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. அனுசுயா வின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து என்னுடைய எட்டாவது எட்டு இது!

1. நான் தொலைத்த செருப்புகளின் எண்ணிக்கையை கேட்டால் நீங்க ஒரு செருப்பு கடையே வைக்கலாம். அட பராவாயில்லையே, இந்த செருப்பு 3 நாள் கழிச்சுத்தான் தொலைஞ்சுபோச்சு என பல முறை பாராட்டுப் பத்திரம் வாங்கியிருக்கிறேன். நின்ன இடம், உக்கார்ந்த இடம், போன் இடம், வந்த இடம் என எல்லா இடங்களிலும் என் முத்திரை பதித்து விட்டு வருவேன். ஆனால், அது என்றும் அதன் எஜமானனை தொடர்ந்ததே இல்லை. இது பத்தாம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தது. அது எப்படிடா, பாடம் எல்லாம் தூக்கத்தில கேட்டாலும் ஒப்பிக்கற, செருப்பு என்ன பாவம் பண்ணியது என நிறைய முறை கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன்.


2. பத்தாம் வகுப்பின் இறுதி நாளன்று எடுத்த போட்டோவை இப்போது பார்த்தால் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த போட்டோவில் எனக்கு இரு பக்கமும் நிற்கும் நண்பர்கள் அகால மரணம் அடைந்துவிட்டனர், இரு வேறு சந்தர்ப்பங்களில். அந்த போட்டோ மட்டும் என்னிடம் 2 காப்பி இருக்கிறது. அந்த இரண்டாவது காப்பி என்னிடம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து மொத்த கும்பலையும் பைத்தியம் பிடிக்க வைக்க விருப்பமில்லாததால் இத்துடன் முற்றுப் புள்ளி.


3. கேலியும் கிண்டலுமாக பத்தாவதை என் நண்பர்கள் முண்ணனியுடன் மொத்தமாக தாண்டியதும்தான் வந்ததது பிரச்சினை. சில பேர் +1 அதே பள்ளியில் சேர, பாலிடெக்னிக்கில் சேர என அப்ளிகேசன் வாங்க போக எனக்கும் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம். பள்ளியில் TC தராமல் "அவனுதான் முதல் அட்மிஷன், முதல் மாணவனுக்கு முதல் மரியாதை. சேர்க்கை கட்டணத்தை கட்டிட்டு போங்க, பாலிடெக்னிக் பத்தி பேசினா பல்லை உடைச்சிடுவேன்" ன்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என் அப்பாவின் மாமாவும், பள்ளியின் துணை தலைமையாசிரியருமான கிருஷ்ணன். என் விருப்பம் எல்லாம் என்றும் நிறைவேறாது என விரக்தியுடன் சுத்தி திரிந்த காலம் அது!


4. என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முக்கியமான நிகழ்வு என்றால் இதுதான். நான் +2 முடித்து விட்டு என்ஜியனிரிங் கவுன்சிலிங் போயிருக்கிறேன். IRTT Mechanical Engg, Kongu Computer Science & Engg என வீட்டுக்கு பக்கதிலிருக்கும் கல்லூரிகளில் சீட் இருந்தும் GCT Production என யாரோ எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபரின் பேச்சைக் கேட்டு எடுத்தேன். தவறு செய்து விட்டேனா என பல நாள் குழம்பி, மூட்டை முடிச்செல்லாம் கட்டி காலேஜ் சேர்ந்து முதல் நாள் Electrical Engineering கிளஸுக்கு வந்த புரொபசர் எபினேசர் ஜெயகுமாரைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அவர் தான் அந்த பெயர் தெரியாத ஆள்! ஆறு மாதம் கழித்து ஞாபகமாக கேட்டார் "இப்பொழுது எந்த குழப்பமும் இல்லையே?" என்று.


5. இதுவும் எனக்கு ஷாக் குடுத்த எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம்தான். மன்த்திலி டெஸ்டில் கூட பெயில் ஆனதே கிடையாது என இறுமாப்புடன் திரிந்த எனக்கு மேரி மாதா (எங்க எலெக்ட்ரிக்கல் லெக்சரர்) கருணையினால் முத இன்டெர்னல் தேர்வில் 11/30 வாங்கினேன். எங்க டிபார்ட்மெண்ட்டில் மட்டும் புரொக்ரஸ் கார்டு மாதிரி அனுப்பித் தொலைவார்கள். வீட்டிலிருந்த தாத்தா வந்தவுடன் தான் எனக்கு விசயமே உறைத்தது. எப்போதும் முதல் 10க்குள் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் அங்கேதான் ஒட்டிக் கொண்டது. அத்தனை களோபரத்திலும் "வீட்டு நினைப்பா இருக்கும் உனக்கு. எங்களை பத்தியெல்லாம் கவலைப்படாதே, படிக்கத்தான் உன்னை இங்க அனுப்பியிருக்கோம்" என சொன்ன தாத்தாவின் வார்த்தைகள் இன்னொரு சம்மட்டி அடி!


6. பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் "Come on, Give me a Break" என சிவாஜி ஸ்டைலில் சொல்ல நினைத்தாலும், "Cool" என சொல்லி நிலைமையை சமாளிப்பதே வேலையாக போய் விட்டது. அதே கேள்வியே, அதே நபருக்கு திருப்பி கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை :-)


7. சிலதெல்லாம் ஏன் நடக்கும், எதுக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். முதலில் பெங்களூருவில் சேர சொல்லி அழைப்பு அனுப்பிய Infosys அதையே ஒரு மாதம் கழித்து மங்களூரூவில் 2 மாதம் கழித்து சேர்ந்தால் போதும் என பேதி கொடுத்தது. Sepember 11 வேறு வந்து மங்களூரூவில் இருந்து வீட்டுக்குப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காய்ச்சல் வர வைத்தது. அப்படி எதுவும் நடக்காமல், ஹைதராபாதில் உங்கள் சேவையை தொடருங்கள் என அனுப்பி வைத்தார்கள். அங்கேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டி விட்டு பின் பெங்களூரு வாசம் ஒரு வருசத்துக்கு. அங்கிருந்து கிளம்பி அமெரிக்கவாசியான பிறகு(Infosys-ல் சேர்ந்து 2 வருடம் கழித்து) எனக்கு பெங்களுருக்கே ட்ரான்ஸ்பர் குடுத்து விட்டதாக வந்த மெயிலைப் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உலகம் உருண்டைதான்!!!


8. நான் ரொம்ப ஜோவியலனா, ஜாலியான ஆள் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஆனால், நான் ரொம்ப அமைதியான, என் ரகசியம் எனக்கு மட்டும் என பொத்தி வைத்திருக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி!!! இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங்... இந்த கருமத்தையும் நினைத்து நினைத்து நான் குழம்பி போனதுதான் மிச்சம். ஒன்றுடன் ஒன்று மோதாத வரை "ENJOY MAADI"

Thursday, July 19, 2007

இழக்காதே!!!




நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல.


இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் போய்ட்டு வந்த நம்ம பசங்க எல்லாம் எதோ 15-20 வருசம் பின்னாடி இருக்கறதா ஃபீல் பண்றாங்க. சத்தமில்லாம நம்ம ஊர் சாஃப்ட்வேர் கம்பெனி எல்லாம் பிலிப்பைன்ஸ்ல கால் ஊன்றாங்களாம். சீனாகாரன் வேற இங்கிலீஸ் படிச்சுக்கிடே இருக்கறான். தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பானு நம்மளை விட கம்மியா கூலி வாங்கிட்டு மாரடிக்க நெறையப் பேரு தயாரா இருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சாஃப்ட்வேர் வேலை எல்லாம் இந்தியாவுக்கு வந்த மாதிரி இந்தியாவுல இருந்தும் அதை விடக் கொறைவான செலவுல செய்து தரக் கூடிய நாட்டுக்குப் போகும்னு சொல்றாங்க. சொல்றது என்ன? அது ஏற்கனவே சத்தமில்லாம நடந்துக்கிட்டு இருக்கு.


இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வேலைல இருக்க முடியும்னு தெரியல. வேலையை விடவும் முடியாது. சோத்துக்கு வழி வேணும்ல? சுயமா எதாவது பிசினஸ் பண்ணலாம்னாலும் அதுக்கு துணிச்சல் இல்லை. ஆபீஸ்க்கு போய்க்கிட்டு அப்படியே சைடுல எதாவது பண்ணலாமானு யோசிச்சா அதுவும் முடியாது போல இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி அதை ஒரு ஆப்ஷனா வெச்சுக்கலாமா? Early retirement க்கு அது உதவுமா? இப்படியெல்லாம் மண்டையைக் கொடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப, சொல்லி வெச்ச மாதிரி அதே செய்தியை ஒரு புத்தகம் ஆணித்தரமா சொல்லுது, அதுவும் தமிழில்.


சக வலைப்பதிவர் மற்றும் என் கல்லூரி சீனியர் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகம் கீழ்க்கண்ட நம்பிக்கை கலந்த வாசகத்தோட முடிஞ்சு நமக்குள்ள ஒரு ஆரம்பத்தை உருவாக்கத் தூண்டுது.


"துணிச்சலாக வேலையைத் துறந்து விட்டு, சுய தொழில் செய்ய முடியாத சூழலில், மாதச் சம்பளத்தில் இருப்பவர்களின் லட்சிய வேட்கையை நிறைவு செய்யும் சாதனமாகப் பங்கு முதலீடு விளங்குகிறது. உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாண்டு, மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி, தீர்க்க தரிசனத்துடன் நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து சராசரியாக வருடம் 20 சதவிகிதம் வளர்ச்சியை எட்டுவீர்களானால், செல்வந்தராக ஓய்வு பெறுவீர்கள் என்பது நிச்சயம். வயதான பிறகா? இல்லவே இல்லை. நடுத்தர வயதிலேயேகூட விரும்பி ஓய்வு பெறலாம்."
கடைசி வரி இப்படின்னா, ஆரம்பம் இப்படி..
"வருடமெல்லாம் உழைக்கிறோம். மும்பையில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார் முதலாளி. அவரை மேலும் பணக்கார் ஆக்குவதற்கே நம் உழைப்பு போகிறது.'


புத்தகத்தின் மற்ற பக்கங்களைக் கவனமாகப் படிக்கும் போது, அந்த வரிகள் நிஜம் என்று உறுதியாகத் தெரிகிறது. மற்றவனுக்கு ஊழியனாக வேலை செய்து இந்த உலகத்தில் எவனுமே பெரிய ஆளானது கிடையாது. நமக்கெல்லாம் வேலையை விடற அளவுக்கு தைரியம் கெடையாது. அப்படியே விட்டாலும் பொண்ணு கெடைக்காது. ஆனா, ஷேர் மார்க்கெட் நல்ல மேட்டரா தெரியுது. நம்ம செய்யற வேலை நாளைக்கு அல்லது பத்து வருசத்துல தென் ஆப்பிரிக்காவுல கேப்டவுன் நகர்ல யாராவது செய்யலாம். ஆனா, நாம நல்லா முதலீடு செய்ய கத்துக்கிட்டா அதே தென்னாப்பிரிக்க கம்பெனில பங்குதாரரா இருக்கலாம்.


ஆனா, முதலீடு செய்யறதுக்கு என்ன தெரியணும், எவ்வளவு தெரியணும், எது சரி, எது தப்பு, எதை நம்பணும், எதை நம்பக் கூடாது அப்படீங்கற வெவரம் எல்லாத்தையும் ரொம்ப நல்லா தொகுத்திருக்கார் நம்ம குப்புசாமி.
"நீங்க படிக்கற எந்த புத்தகமும், செய்தியும் உங்களைத் தவறா வழி நடத்த அனுமதிக்காதீங்க, இந்தப் புத்தகம் உட்பட" என்பது அவரது யோசனை. But, every page of this books seems to be rich in content and mean a lot. எல்லாமே சரியா வழி நடத்துது. அல்லது யாரும் நம்மைத் தப்பா வழி நடத்தாமக் காப்பாத்திக்க உதவுது.


இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இரண்டு எண்ணம் ஏற்படுகிறது. ஒன்று, இவ்வளவு மேட்டர் இருக்கா என்பது. மற்றது, அட இவ்வளவுதானா(எளிமை) என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நமக்குத் தோன்றுகிறது.


சில புத்தகங்கள் பாமரத்தனமா இருக்கும். சிலது ரொம்ப ஹை லெவலா நமக்குப் புரியாத பாஷைல இருக்கும். இது இந்த இரண்டு வகையிலும் வராது. எளிமையாவும், விவரமாவும் இருக்கு. ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியாதவங்க நெறைய தெரிஞ்சுக்கலாம். ஏற்கனவே தெரிஞ்சவங்க இன்னும் தெரிஞ்சுக்கலாம்.


யாரு கண்டா? 40 வயசுல தேவைக்கு அதிகமான பணத்தோட ரிட்டையர்ட் ஆகறதுக்குத் தேவையான பாதையில் நீங்க எடுத்து வைக்கிற முதல் அடியாக இந்த நூல் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


புத்தகத்தை ஆன்லைனில் பெற http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&itemid=292

Monday, April 30, 2007

கெத்துதான் எங்க சொத்து!!!

வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...

கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....

Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy22foru@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga

8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

4.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

5.
hai, i've not yet put a scrap tu u.
first one

இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...

6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?

7.
Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu0107@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu

டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?


8.
hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye

இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???


Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

Sunday, April 29, 2007

செம ரகளை!!!

பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!

பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???

Wednesday, April 18, 2007

அழகென்றால்...

அமிழ்து (பேரே அழகா இருக்கு) அன்பாய் அழைத்ததால் இந்த அழகுப் பதிவு

கருப்பு

பெரும்பாலும் கருப்பு என்பது ஒவ்வாத, ஒதுக்கப்பட்ட, துக்க நிறமாக பலர் கருதினாலும் நளினம், அந்தஸ்து என வரும் பொழுது கருப்பு நிறம் முக்கியமான இடத்தில் உள்ளது. உதாரணமாக, லிமோசின், டக்ஸீடோ என வரும் பொழுது கருப்புதான்... என் தாத்தா எப்போதும் கருப்பு மையில்தான் எழுதுவார். பரிட்சை பேப்பர் கருப்பில் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும் என சொல்லிய காலம் தொட்டு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...
ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.

நினைவுகள்

8 வயது பையனுக்கு 3 வயது வரை குடித்த பால் புட்டி, 10 வயது பையனுக்கு 6 வயதில் ஓட்டிய நுங்கு வண்டி, 15 வயது பையனுக்கு 10 வயதில் ஓட்டிய பழைய சைக்கிள் என நினைத்தவுடன் மனதினுள் குபுக் என ஒரு மகிழ்ச்சி பொங்கும் பாருங்கள், அதுவும் ஒரு அழகுதான்.

பயணம்

பகல் நேரத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது அழகோ அழகு. செம்மண் காடாக இருக்கட்டும், வறண்ட காற்று முகத்திலறைவதாகட்டும் அதன் சுகமே தனிதான். பெங்களூரிலிருந்து மதியம் கிளம்பி KPN ல் ஊருக்கு போகும் நாட்களில் நானே ராஜா, நானே கவிஞன்...

காலைக் கனவு

மெத்தையில் துயில் கொண்டாலும், கயிற்றுக் கட்டிலில் படுத்தாலும் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து கொள்ளாமல், படுத்து புரண்டபடியே காணும் கனவுகளில் விண்ணைத் தொடுகிறேனோ இல்லையோ, நிகழ முடியாத சின்ன சின்ன ஆசைகளை(!) நிறைவேற்றி வைக்கும் காலைக் கனவும் அழகுதாம்...

கடைசியா, என் கம்ப்யூட்டரிலிருந்து ரொம்ப நாளாய் என்னையே ஆச்சர்யமாய் வெறித்துப் பார்க்கும் அசினும் அழகுதான் :-)



சில பேரை ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை. அவர்களை திரும்ப பார்க்க வேண்டுமானால் இந்த மாதிரி தொடர் பதிவுகளுக்கு அழைப்பு அனுப்பினால்தான் உண்டு போல...



  1. இளவஞ்சி

  2. குப்புசாமி

  3. சுதர்சன் கோபால்

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்

தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.

கல்யாண மண்டபத்தில் நம்ம ஹீரோ கண்ணீர் விட்டுக் கொண்டு டயலாக் விடும் போது அந்த ஹோம குண்டத்தின் புகையத் தவிர்க்க மட்டும் எழுந்து நின்று கொண்டு "சரி சரி, தாலியை கட்டிடறனே, அப்புறம் பேசலாமே" என உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் என ஒரு ரகம்.

நாயகன் சேட்டு கடையில் வைப்பதற்க்கு எதை வைக்கலாம் என குழப்பமாக இருக்கும் சமயம் 10 ரவுடிகளை அனுப்பி தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு கிளைமாக்ஸில் நாயகன் தெரியாமால் வேற மண்டபத்துக்கு வேறு நாளில் வந்து விட்டால் என்ன செய்வது என கல்யாண பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.

பெங்களூரில் பத்து கிரவுண்ட், ஒரே பொண்ணு, நல்ல இடம் என சொன்ன மாத்திரத்தில் "நல்ல இடமாத்தான் இருக்கும், எப்படியும் 2 கோடிக்கு மேல் போகும்" என மனதிலும் "அப்போ அந்த இடத்தையே பேசி முடிச்சிடிங்க" என skype phone-லும் சுருக்கமாக வாழ்க்கையை தீர்மானிக்கும்-
என பல தரப்பட்ட ரகங்களில் தமிழ் இயக்குநர்களின் கைகளில் கசங்கி சின்னாபின்னாப்படும் கேரக்டர் இந்த அமெரிக்க மாப்பிள்ளை.

சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும். உயர் நீதி மன்றத்தில் தமிழக இயக்குநர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என கூட நான் நினைத்தேன். சிவாஜி படப் பாடல்களில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை, காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு, உலக கோப்பையில் தோற்ற இந்திய வீரர்களை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம்புள்ளி குத்தலாமா என பல பிரச்சினைகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதை யாரும் கவனிப்பார்களா என தெரியவில்லை.

Sunday, April 01, 2007

பந்தயக் குதிரை

தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.

சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.

அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,
முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.






வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...


வானம் வேண்டுமாம்
வானவில் வேண்டுமாம்
தென்றல் வேண்டுமாம்
சாரல் வேண்டுமாம்
குளிர் வேண்டுமாம்
இருட்டு வேண்டுமாம்
தனிமை வேண்டுமாம்
கண்ணீர் வேண்டுமாம்
காதலி வேண்டுமாம்
கவிதை வேண்டுமாம்
வாழ்க்கை வட்டத்தில்
இல்லாததை தேடி ஓடும்
இந்த கால்கள்...

இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???

Sunday, February 18, 2007

உலகின்(ல்) உயிர்

மெயிலில் வந்த கவிதை இது.

On 2/18/07, Parthiban Subramanian wrote:

Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.


எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.

கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்

இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.

தீபாவளி

திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.

கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.

ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.

கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.

சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.

நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.

பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...

காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.

Friday, February 09, 2007

திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...

காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.

http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute

இது ஒரு நடுநிலையான கட்டுரை இல்லையென முகப்பிலேயே சொல்லி இருக்கும் போதிலும் உங்கள் மேலான கருத்துக்களை அதில் இணைப்பதன் மூலம் தமிழர்களின் காவேரி வாதம் இணையத்தில் இன்னும் வலுப்படும்.

என் பார்வையில்:

  1. தமிழ், தமிழன் என்றால் பிச்சைக்கார கூட்டம், அடுத்தவன் சொத்த்துக்கு ஆசைப்படுபவர்கள் என்னும் எண்ணம் எவருக்கும் வரும்படி மிக அழகாக, கோர்வையாக அடுக்கப்பட்டுள்ளது.
  2. 92' கலவரம் மிகவும் மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசி வரிகளில், "தமிழ்நாட்டிலும் இதேபோல் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது" என்று சொல்வதன் மூலம் அந்த கலவரத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி தெளிவாக தெரிகிறது.
  3. பழைய வரலாறு மிக அதிகமாகவும், கலவரம் பற்றிய குறிப்பு மிக குறைவாக இருக்கிறது என்ற எதிர்ப்புக்கு "91ல் இணையம் இல்லை, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்" என்பதுதான் பதில்.
  4. 2002 நாடகம் என்று சொல்வதின் மூலம் ஆசிரியரின் "நடுநிலை" வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
  5. "காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை - ஒரு கன்னடரின் பார்வையில்" என்பதுதான் மிகச்சரியான தலைப்பு. கட்டாயமாக ஒரு நடுநிலைமைக் கருத்தை என்னிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது கொஞ்சம் அதீதமாக தோண்றியது.
  6. நான் வாழும் காலத்திலேயே இணையத்தில் மிகப் பெரிய திறந்த மூலத்தில் வரலாறு திருத்தி எழுதப்படுகிறது. இதை சரியான முறையில் வெளிக் கொணரவில்லையெனில் என் முதல் கருத்து முற்றிலும் உண்மை என பின்னால் நிறுவப்பட்டுவிடும்.
  7. வழக்கம் போல், தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு இன்னொரு தலைமுறை நகர்ந்து கொண்டிருக்கும்.


என் நண்பன் சுவாமிநாதன் இதற்காகவெல்லாம் வாதாடி இருக்கிறான் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பா!!!

இந்த வாதங்களை இங்கே பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute

நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?

Monday, February 05, 2007

IT மக்கள் அசுரர்களா?

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்! என்ற கட்டுரைக்கு என் பின்னூட்டம் இது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் இணையத்தில் உலாவியதாலோ என்னவோ ஒரு பதிவுக்கு தேவையான அளவு சேர்ந்துவிட்டது.

=========
அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.

1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????

2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???

4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.

5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.