Monday, April 30, 2007

கெத்துதான் எங்க சொத்து!!!

வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...

கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....

Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy22foru@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga

8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

4.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

5.
hai, i've not yet put a scrap tu u.
first one

இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...

6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?

7.
Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu0107@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu

டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?


8.
hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye

இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???


Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

Sunday, April 29, 2007

செம ரகளை!!!

பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!

பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???

Wednesday, April 18, 2007

அழகென்றால்...

அமிழ்து (பேரே அழகா இருக்கு) அன்பாய் அழைத்ததால் இந்த அழகுப் பதிவு

கருப்பு

பெரும்பாலும் கருப்பு என்பது ஒவ்வாத, ஒதுக்கப்பட்ட, துக்க நிறமாக பலர் கருதினாலும் நளினம், அந்தஸ்து என வரும் பொழுது கருப்பு நிறம் முக்கியமான இடத்தில் உள்ளது. உதாரணமாக, லிமோசின், டக்ஸீடோ என வரும் பொழுது கருப்புதான்... என் தாத்தா எப்போதும் கருப்பு மையில்தான் எழுதுவார். பரிட்சை பேப்பர் கருப்பில் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும் என சொல்லிய காலம் தொட்டு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...
ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.

நினைவுகள்

8 வயது பையனுக்கு 3 வயது வரை குடித்த பால் புட்டி, 10 வயது பையனுக்கு 6 வயதில் ஓட்டிய நுங்கு வண்டி, 15 வயது பையனுக்கு 10 வயதில் ஓட்டிய பழைய சைக்கிள் என நினைத்தவுடன் மனதினுள் குபுக் என ஒரு மகிழ்ச்சி பொங்கும் பாருங்கள், அதுவும் ஒரு அழகுதான்.

பயணம்

பகல் நேரத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது அழகோ அழகு. செம்மண் காடாக இருக்கட்டும், வறண்ட காற்று முகத்திலறைவதாகட்டும் அதன் சுகமே தனிதான். பெங்களூரிலிருந்து மதியம் கிளம்பி KPN ல் ஊருக்கு போகும் நாட்களில் நானே ராஜா, நானே கவிஞன்...

காலைக் கனவு

மெத்தையில் துயில் கொண்டாலும், கயிற்றுக் கட்டிலில் படுத்தாலும் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து கொள்ளாமல், படுத்து புரண்டபடியே காணும் கனவுகளில் விண்ணைத் தொடுகிறேனோ இல்லையோ, நிகழ முடியாத சின்ன சின்ன ஆசைகளை(!) நிறைவேற்றி வைக்கும் காலைக் கனவும் அழகுதாம்...

கடைசியா, என் கம்ப்யூட்டரிலிருந்து ரொம்ப நாளாய் என்னையே ஆச்சர்யமாய் வெறித்துப் பார்க்கும் அசினும் அழகுதான் :-)



சில பேரை ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை. அவர்களை திரும்ப பார்க்க வேண்டுமானால் இந்த மாதிரி தொடர் பதிவுகளுக்கு அழைப்பு அனுப்பினால்தான் உண்டு போல...



  1. இளவஞ்சி

  2. குப்புசாமி

  3. சுதர்சன் கோபால்

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்

தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.

கல்யாண மண்டபத்தில் நம்ம ஹீரோ கண்ணீர் விட்டுக் கொண்டு டயலாக் விடும் போது அந்த ஹோம குண்டத்தின் புகையத் தவிர்க்க மட்டும் எழுந்து நின்று கொண்டு "சரி சரி, தாலியை கட்டிடறனே, அப்புறம் பேசலாமே" என உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் என ஒரு ரகம்.

நாயகன் சேட்டு கடையில் வைப்பதற்க்கு எதை வைக்கலாம் என குழப்பமாக இருக்கும் சமயம் 10 ரவுடிகளை அனுப்பி தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு கிளைமாக்ஸில் நாயகன் தெரியாமால் வேற மண்டபத்துக்கு வேறு நாளில் வந்து விட்டால் என்ன செய்வது என கல்யாண பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.

பெங்களூரில் பத்து கிரவுண்ட், ஒரே பொண்ணு, நல்ல இடம் என சொன்ன மாத்திரத்தில் "நல்ல இடமாத்தான் இருக்கும், எப்படியும் 2 கோடிக்கு மேல் போகும்" என மனதிலும் "அப்போ அந்த இடத்தையே பேசி முடிச்சிடிங்க" என skype phone-லும் சுருக்கமாக வாழ்க்கையை தீர்மானிக்கும்-
என பல தரப்பட்ட ரகங்களில் தமிழ் இயக்குநர்களின் கைகளில் கசங்கி சின்னாபின்னாப்படும் கேரக்டர் இந்த அமெரிக்க மாப்பிள்ளை.

சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும். உயர் நீதி மன்றத்தில் தமிழக இயக்குநர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என கூட நான் நினைத்தேன். சிவாஜி படப் பாடல்களில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை, காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு, உலக கோப்பையில் தோற்ற இந்திய வீரர்களை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம்புள்ளி குத்தலாமா என பல பிரச்சினைகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதை யாரும் கவனிப்பார்களா என தெரியவில்லை.

Sunday, April 01, 2007

பந்தயக் குதிரை

தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.

சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.

அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,
முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.






வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...


வானம் வேண்டுமாம்
வானவில் வேண்டுமாம்
தென்றல் வேண்டுமாம்
சாரல் வேண்டுமாம்
குளிர் வேண்டுமாம்
இருட்டு வேண்டுமாம்
தனிமை வேண்டுமாம்
கண்ணீர் வேண்டுமாம்
காதலி வேண்டுமாம்
கவிதை வேண்டுமாம்
வாழ்க்கை வட்டத்தில்
இல்லாததை தேடி ஓடும்
இந்த கால்கள்...

இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???

Sunday, February 18, 2007

உலகின்(ல்) உயிர்

மெயிலில் வந்த கவிதை இது.

On 2/18/07, Parthiban Subramanian wrote:

Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.


எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.

கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்

இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.

தீபாவளி

திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.

கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.

ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.

கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.

சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.

நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.

பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...

காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.

Friday, February 09, 2007

திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...

காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.

http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute

இது ஒரு நடுநிலையான கட்டுரை இல்லையென முகப்பிலேயே சொல்லி இருக்கும் போதிலும் உங்கள் மேலான கருத்துக்களை அதில் இணைப்பதன் மூலம் தமிழர்களின் காவேரி வாதம் இணையத்தில் இன்னும் வலுப்படும்.

என் பார்வையில்:

  1. தமிழ், தமிழன் என்றால் பிச்சைக்கார கூட்டம், அடுத்தவன் சொத்த்துக்கு ஆசைப்படுபவர்கள் என்னும் எண்ணம் எவருக்கும் வரும்படி மிக அழகாக, கோர்வையாக அடுக்கப்பட்டுள்ளது.
  2. 92' கலவரம் மிகவும் மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசி வரிகளில், "தமிழ்நாட்டிலும் இதேபோல் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது" என்று சொல்வதன் மூலம் அந்த கலவரத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி தெளிவாக தெரிகிறது.
  3. பழைய வரலாறு மிக அதிகமாகவும், கலவரம் பற்றிய குறிப்பு மிக குறைவாக இருக்கிறது என்ற எதிர்ப்புக்கு "91ல் இணையம் இல்லை, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்" என்பதுதான் பதில்.
  4. 2002 நாடகம் என்று சொல்வதின் மூலம் ஆசிரியரின் "நடுநிலை" வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
  5. "காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை - ஒரு கன்னடரின் பார்வையில்" என்பதுதான் மிகச்சரியான தலைப்பு. கட்டாயமாக ஒரு நடுநிலைமைக் கருத்தை என்னிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது கொஞ்சம் அதீதமாக தோண்றியது.
  6. நான் வாழும் காலத்திலேயே இணையத்தில் மிகப் பெரிய திறந்த மூலத்தில் வரலாறு திருத்தி எழுதப்படுகிறது. இதை சரியான முறையில் வெளிக் கொணரவில்லையெனில் என் முதல் கருத்து முற்றிலும் உண்மை என பின்னால் நிறுவப்பட்டுவிடும்.
  7. வழக்கம் போல், தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு இன்னொரு தலைமுறை நகர்ந்து கொண்டிருக்கும்.


என் நண்பன் சுவாமிநாதன் இதற்காகவெல்லாம் வாதாடி இருக்கிறான் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பா!!!

இந்த வாதங்களை இங்கே பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute

நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?

Monday, February 05, 2007

IT மக்கள் அசுரர்களா?

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்! என்ற கட்டுரைக்கு என் பின்னூட்டம் இது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் இணையத்தில் உலாவியதாலோ என்னவோ ஒரு பதிவுக்கு தேவையான அளவு சேர்ந்துவிட்டது.

=========
அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.

1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????

2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???

4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.

5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.

Sunday, December 31, 2006

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

- வேதாத்ரி மகரிஷி.

Monday, December 25, 2006

ஓற்றை முடி

என்னை என்னால்
நம்ப முடியவில்லை
என் முகத்தை பார்க்கவே
எனக்கு பிடிக்கவில்லை.
தினமும் உபயோகித்த
ஞாபகம் இருக்கிறது.

கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?
அப்படியே மறைத்து
விட்டால்...
இல்லை கல்யாணத்துக்கு
முன்னால் சொல்லி விட்டால்...

-என் தலையில்
ஒற்றை வெள்ளை முடி!

Sunday, December 24, 2006

போய் வா!!!

என் வெற்றி
என் அழுகை
என் கோபம்
என் இயலாமை
என் சோகங்கள்
என் காதல்கள்

உன்னுடன் ஒத்துப் போகாதபோது
உன் செல்லச் சிணுங்கல்கள்
உன்னுடனான சின்னச் சண்டைகள்
உன்னால் சுருங்கிய
உறவுகளும் நட்பு வட்டங்களும்
உன்னால் குறைந்துபோன
தொலைபேசி
உரையாடல்கள்...

முகம் பார்த்து சிரிக்க மறந்து
சாட்டிங்கில் சிரிப்பு முகம்
காட்ட வைத்த உன்
கஞ்சத்தனம்...

அத்தனையையும்
கூட இருந்த
அமைதியாய் பார்த்தாய்
நீ...

நான் இழுத்த இழுப்புக்கு வராமல்
உன் பின்னால் என்னை
அலைய வைத்தாய்
ஒவ்வொரு முறையும்
ஜெயித்தது நீதான்...

என்னோடு நீ இருந்த
ஒவ்வொரு நாட்களும்
மறக்க முடியாதடி...

போய் வா 2006.

Thursday, November 23, 2006

வருத்தப்படாத வாலிபர்கள்

சம்பவம் 1:

வாலிபன் 1: மாப்பிள, எனக்கு கல்யாணம்.
வாலிபன் 2: உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா???
வாலிபன் 1: லவ்டா, இது லவ்டா...
வாலிபன் 2: அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை?
வாலிபன் 1: இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...
வாலிபன் 2: அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???
வாலிபன் 1: உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...
வாலிபன் 2:சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்பார்க்காதே...
வாலிபன் 1: !#$%^&*()

சம்பவம் 2:

முருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.

வாலிபர்: ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பெண்: என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.
வாலிபர்: நான் கன்சல்டன்டா இருக்கேன்.
பெண்: ஓ, அப்படியா???
வாலிபர்: MBBS ன்னா??? நர்ஸா???
பெண்:)(*&^%#$%^&*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...

கடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.

Thursday, November 16, 2006

குடைக்குள் மழை

வாசல் வரை வந்து
வழியனுப்பு விழா,
காருக்குள் அமர்ந்ததும்
உன் பறக்கும் முத்தம்,
என்னுடன் கை கோர்த்து
ஏரிக்கரையில்
நடை பயணம்...
செல்லச் சண்டையில்
மண்டையில் கொட்டு....

ஏய் பிசாசே,
யார் கண்ணுக்கும் தெரியாமல்
எனக்கு மட்டும் தெரியும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்?

Tuesday, November 14, 2006

தூக்கம் தொலைக்கும் இரவுகள்

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்??

Thursday, October 19, 2006

பொங்கல்

எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.

ஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்துக்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

ஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.

எங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.

என்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.

மார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.

அடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் "நாங்கெல்லாம் அந்த காலத்துல" என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Monday, October 16, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006

1. காலையில் வேட்பாளரின்
ஆவேச முழக்கம்
"சாதிகள் இல்லையடா மடையா".
இரவில் பக்கத்து ஊருக்கு
கூடுதல் பணப் பட்டுவாடா
அது வேறு சாதிக்காரர்கள்
இருக்கும் ஊராம்...

2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்
"ஸ்காட்ச்" உடன் ஊறுகாய்,
பழசை மறக்க மாட்டாராம் தலைவர்.

3. அனைத்து வேட்பாளர்களிடமும்
பணம் வாங்கியாயிற்று
யாருக்கு போடப் போகிறாய் ஓட்டு?
கேட்ட மனைவியிடம் சொன்னான்,
எல்லோருக்குந்தான்...
இவனுக ஜெயிச்சா
நாடு உருப்படவா போகுது.

Wednesday, September 27, 2006

தென்றல் வந்து தீண்டும் போது

நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...

நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.

கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.

கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...

http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

Saturday, September 23, 2006

ஏன்? எதற்கு? எப்படி???-2

Part 1

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன். இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?

2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே, இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா?

3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே, அது ஏன்?

4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே, அது ஏன்?

5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?

6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே, உண்மையா அதை படிக்கறீங்களா, இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா?

7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???

8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே, தனியா கோர்ஸ் போவீங்களா???

9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே, நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா?

10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே, இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா?

பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப்!!!

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!

தினமும் இங்க எட்டிப் பார்த்துட்டு போற 53 நல்ல உள்ளங்களே,

இப்படி இருந்த நான்



இப்படி ஆயிட்டேன்:-(


திரும்ப பழையபடி திரும்ப எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை. அதுவரை நீங்கெல்லாம் சந்தோஷமா இருங்க...