Showing posts with label அனுபவம்/நிகழ்வுகள். Show all posts
Showing posts with label அனுபவம்/நிகழ்வுகள். Show all posts

Wednesday, April 02, 2008

கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க இன்னமும் இருக்கிறாங்க.





காலங்கார்த்தால சூரியன் சுள்ளுன்னு அடிக்கும் முன்னே சுடுகாட்டுப் பக்கம் போயிட்டு பனங்காய் பொறுக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால் பள்ளிக்கூடம் கிளம்ப சரியாக இருக்கும். லீவு நாட்களில் விளையாட போயிட்டு கடனை கழிச்சதே மறந்து போயி காடு காடாய் சுத்தி எலந்தை, கொய்யா என மரத்தில் காய்க்கும் அத்தனையும் பறிச்சு சாப்பிட்டு சாயங்காலம் காய்ந்து போய் வீடு வந்த சேர்ந்த கதையெல்லாம் இருக்கும். அரளிக்காயை மட்டும் எப்படி விடுவது என அதையும் அரைச்சு ஓணானுக்கு குடுத்த கதையும் இருக்கும்.


கக்கூஸ்ன்னுதான் இது எங்களுக்கு அறிமுகமானது. வீட்டில் கக்கூஸ் இருந்தாலும் காலற நடந்து ஊரிலிருக்கிற மாமன் மச்சான் எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்ட வர சுகம் இல்லைன்னு அவசரத்துக்கு மட்டும் போய் வர ஆரம்பிச்சாங்க. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் லெட்ரின்ல பக்கத்துல பக்கத்துல சீட் போட்டு உக்கார்ந்துட்டு தியரி ஆப் மெக்கானிக்ஸ் கதை கேட்டவங்களும் இருந்தாங்க. இந்து இன்னைக்கு என்ன சுடிதார் போடுவான்னு பந்தயம் கட்டிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. இதனால கடுப்பாகி பாத்ரூமிலிருந்து பக்கெட் நிறைய தண்ணி அள்ளி அவனுக தலைக்கு மேல கொட்டுனவனுகளும் இருந்தாங்க.




ரயில் தண்டவாளத்தில எல்லாம் எவன்டா இருந்து வைக்கிறான் அறிவே இல்லையா என திட்டிய ஆட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் ரயில் எசகுபிசகாக ஆடி வைக்க அதுக்கப்புறம் "போதி மரத்தடியில் ஞானம் பெற்ற" அப்படிங்கற மாதிரி "ரயில் லேவட்டரி" புகழ் அப்படின்னு பேர் சொல்லற அளவுக்கு ஞானம் தெளிஞ்ச ஆட்களும் இருக்காங்க.







சலவைக்கு குடுத்த தேய்ச்ச சட்டை பேண்ட் கசங்காம இருக்கணும்ன்னு எல்லாத்தையும் மடிச்சி வைச்சுட்டு, ஏசி போட்ட ரூம்ல, கால் மேல் போட்டு எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு யோசிச்ச ஆட்களும் இருந்தாங்க.கோட் டெலிவரி சாயங்காலம் வைச்சிட்டு, ஒரு பெரிய டிஃபெக்ட்டை எப்படி சரி பண்ணலாம்ன்னு நாலாபுறம் அலைஞ்சிட்டு ஒன்னும் முடியாம போய் குத்த வைச்சி ரெண்டு கையிலையும் பின்னந்தலைக்கு முட்டுக் கொடுத்த உக்காந்தா எகனை மொகனையா ஐடியா வந்து பிரிஞ்சு பிரிஞ்சு விழும் ஆசாமிக கூட இருந்தாங்க.







பிளைட்ல கொஞ்சம் தண்ணி போறதுக்கு அந்த சவுண்டு வருதேன்னு தலைய உள்ள விட்டுப் பார்த்தவங்களும் இருக்காங்க. பாட்டு பாடுனாத்தான் போவுது, தம்மடிச்சாத்தான் போவுதுன்னு இந்தியாவுல இருந்தப்போ சொன்னாங்கன்னா, புக் இல்லைன்னா போக மாட்டேங்குதுன்னு கைல கிடைச்ச பேப்பர், லேப்டாப்பை பொறிக்கிட்டு போயிட்டு போறவங்களும் இருக்கறாங்க. 'ஆய்'ரம்தான் இருந்தாலும் கம்மாக்கரை மாதிரி வருமுங்கல்லா...அது அதுதான் இது இதுதான்...








குறிப்பு:


இது ரெஸ்ட்ரூமிலிருந்து லாப்டாப்பில் தட்டச்சி அனுப்பட்டது. This mail is sent from my handheld ன்னு படம் காட்டுவாங்கல்ல, இந்த குறிப்பு அந்த வகைய சேர்ந்தது இல்லை.

Sunday, July 22, 2007

என் எட்டாத எட்டு...


எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. அனுசுயா வின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து என்னுடைய எட்டாவது எட்டு இது!

1. நான் தொலைத்த செருப்புகளின் எண்ணிக்கையை கேட்டால் நீங்க ஒரு செருப்பு கடையே வைக்கலாம். அட பராவாயில்லையே, இந்த செருப்பு 3 நாள் கழிச்சுத்தான் தொலைஞ்சுபோச்சு என பல முறை பாராட்டுப் பத்திரம் வாங்கியிருக்கிறேன். நின்ன இடம், உக்கார்ந்த இடம், போன் இடம், வந்த இடம் என எல்லா இடங்களிலும் என் முத்திரை பதித்து விட்டு வருவேன். ஆனால், அது என்றும் அதன் எஜமானனை தொடர்ந்ததே இல்லை. இது பத்தாம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தது. அது எப்படிடா, பாடம் எல்லாம் தூக்கத்தில கேட்டாலும் ஒப்பிக்கற, செருப்பு என்ன பாவம் பண்ணியது என நிறைய முறை கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன்.


2. பத்தாம் வகுப்பின் இறுதி நாளன்று எடுத்த போட்டோவை இப்போது பார்த்தால் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த போட்டோவில் எனக்கு இரு பக்கமும் நிற்கும் நண்பர்கள் அகால மரணம் அடைந்துவிட்டனர், இரு வேறு சந்தர்ப்பங்களில். அந்த போட்டோ மட்டும் என்னிடம் 2 காப்பி இருக்கிறது. அந்த இரண்டாவது காப்பி என்னிடம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து மொத்த கும்பலையும் பைத்தியம் பிடிக்க வைக்க விருப்பமில்லாததால் இத்துடன் முற்றுப் புள்ளி.


3. கேலியும் கிண்டலுமாக பத்தாவதை என் நண்பர்கள் முண்ணனியுடன் மொத்தமாக தாண்டியதும்தான் வந்ததது பிரச்சினை. சில பேர் +1 அதே பள்ளியில் சேர, பாலிடெக்னிக்கில் சேர என அப்ளிகேசன் வாங்க போக எனக்கும் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம். பள்ளியில் TC தராமல் "அவனுதான் முதல் அட்மிஷன், முதல் மாணவனுக்கு முதல் மரியாதை. சேர்க்கை கட்டணத்தை கட்டிட்டு போங்க, பாலிடெக்னிக் பத்தி பேசினா பல்லை உடைச்சிடுவேன்" ன்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என் அப்பாவின் மாமாவும், பள்ளியின் துணை தலைமையாசிரியருமான கிருஷ்ணன். என் விருப்பம் எல்லாம் என்றும் நிறைவேறாது என விரக்தியுடன் சுத்தி திரிந்த காலம் அது!


4. என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முக்கியமான நிகழ்வு என்றால் இதுதான். நான் +2 முடித்து விட்டு என்ஜியனிரிங் கவுன்சிலிங் போயிருக்கிறேன். IRTT Mechanical Engg, Kongu Computer Science & Engg என வீட்டுக்கு பக்கதிலிருக்கும் கல்லூரிகளில் சீட் இருந்தும் GCT Production என யாரோ எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபரின் பேச்சைக் கேட்டு எடுத்தேன். தவறு செய்து விட்டேனா என பல நாள் குழம்பி, மூட்டை முடிச்செல்லாம் கட்டி காலேஜ் சேர்ந்து முதல் நாள் Electrical Engineering கிளஸுக்கு வந்த புரொபசர் எபினேசர் ஜெயகுமாரைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அவர் தான் அந்த பெயர் தெரியாத ஆள்! ஆறு மாதம் கழித்து ஞாபகமாக கேட்டார் "இப்பொழுது எந்த குழப்பமும் இல்லையே?" என்று.


5. இதுவும் எனக்கு ஷாக் குடுத்த எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம்தான். மன்த்திலி டெஸ்டில் கூட பெயில் ஆனதே கிடையாது என இறுமாப்புடன் திரிந்த எனக்கு மேரி மாதா (எங்க எலெக்ட்ரிக்கல் லெக்சரர்) கருணையினால் முத இன்டெர்னல் தேர்வில் 11/30 வாங்கினேன். எங்க டிபார்ட்மெண்ட்டில் மட்டும் புரொக்ரஸ் கார்டு மாதிரி அனுப்பித் தொலைவார்கள். வீட்டிலிருந்த தாத்தா வந்தவுடன் தான் எனக்கு விசயமே உறைத்தது. எப்போதும் முதல் 10க்குள் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் அங்கேதான் ஒட்டிக் கொண்டது. அத்தனை களோபரத்திலும் "வீட்டு நினைப்பா இருக்கும் உனக்கு. எங்களை பத்தியெல்லாம் கவலைப்படாதே, படிக்கத்தான் உன்னை இங்க அனுப்பியிருக்கோம்" என சொன்ன தாத்தாவின் வார்த்தைகள் இன்னொரு சம்மட்டி அடி!


6. பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் "Come on, Give me a Break" என சிவாஜி ஸ்டைலில் சொல்ல நினைத்தாலும், "Cool" என சொல்லி நிலைமையை சமாளிப்பதே வேலையாக போய் விட்டது. அதே கேள்வியே, அதே நபருக்கு திருப்பி கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை :-)


7. சிலதெல்லாம் ஏன் நடக்கும், எதுக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். முதலில் பெங்களூருவில் சேர சொல்லி அழைப்பு அனுப்பிய Infosys அதையே ஒரு மாதம் கழித்து மங்களூரூவில் 2 மாதம் கழித்து சேர்ந்தால் போதும் என பேதி கொடுத்தது. Sepember 11 வேறு வந்து மங்களூரூவில் இருந்து வீட்டுக்குப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காய்ச்சல் வர வைத்தது. அப்படி எதுவும் நடக்காமல், ஹைதராபாதில் உங்கள் சேவையை தொடருங்கள் என அனுப்பி வைத்தார்கள். அங்கேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டி விட்டு பின் பெங்களூரு வாசம் ஒரு வருசத்துக்கு. அங்கிருந்து கிளம்பி அமெரிக்கவாசியான பிறகு(Infosys-ல் சேர்ந்து 2 வருடம் கழித்து) எனக்கு பெங்களுருக்கே ட்ரான்ஸ்பர் குடுத்து விட்டதாக வந்த மெயிலைப் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உலகம் உருண்டைதான்!!!


8. நான் ரொம்ப ஜோவியலனா, ஜாலியான ஆள் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஆனால், நான் ரொம்ப அமைதியான, என் ரகசியம் எனக்கு மட்டும் என பொத்தி வைத்திருக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி!!! இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங்... இந்த கருமத்தையும் நினைத்து நினைத்து நான் குழம்பி போனதுதான் மிச்சம். ஒன்றுடன் ஒன்று மோதாத வரை "ENJOY MAADI"

Sunday, April 01, 2007

பந்தயக் குதிரை

தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.

சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.

அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,
முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.






வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...


வானம் வேண்டுமாம்
வானவில் வேண்டுமாம்
தென்றல் வேண்டுமாம்
சாரல் வேண்டுமாம்
குளிர் வேண்டுமாம்
இருட்டு வேண்டுமாம்
தனிமை வேண்டுமாம்
கண்ணீர் வேண்டுமாம்
காதலி வேண்டுமாம்
கவிதை வேண்டுமாம்
வாழ்க்கை வட்டத்தில்
இல்லாததை தேடி ஓடும்
இந்த கால்கள்...

இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???

Thursday, November 23, 2006

வருத்தப்படாத வாலிபர்கள்

சம்பவம் 1:

வாலிபன் 1: மாப்பிள, எனக்கு கல்யாணம்.
வாலிபன் 2: உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா???
வாலிபன் 1: லவ்டா, இது லவ்டா...
வாலிபன் 2: அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை?
வாலிபன் 1: இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...
வாலிபன் 2: அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???
வாலிபன் 1: உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...
வாலிபன் 2:சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்பார்க்காதே...
வாலிபன் 1: !#$%^&*()

சம்பவம் 2:

முருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.

வாலிபர்: ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பெண்: என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.
வாலிபர்: நான் கன்சல்டன்டா இருக்கேன்.
பெண்: ஓ, அப்படியா???
வாலிபர்: MBBS ன்னா??? நர்ஸா???
பெண்:)(*&^%#$%^&*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...

கடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.

Thursday, October 19, 2006

பொங்கல்

எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.

ஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்துக்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

ஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.

எங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.

என்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.

மார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.

அடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் "நாங்கெல்லாம் அந்த காலத்துல" என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Wednesday, September 27, 2006

தென்றல் வந்து தீண்டும் போது

நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...

நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.

கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.

கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...

http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

Saturday, September 23, 2006

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!

தினமும் இங்க எட்டிப் பார்த்துட்டு போற 53 நல்ல உள்ளங்களே,

இப்படி இருந்த நான்



இப்படி ஆயிட்டேன்:-(


திரும்ப பழையபடி திரும்ப எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை. அதுவரை நீங்கெல்லாம் சந்தோஷமா இருங்க...

Monday, September 18, 2006

ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...

மகன்: ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?

அம்மா: இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?

மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???

அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?

மகன்: வீட்லதான்மா இருக்கேன். அக்கா, சித்தி, மாமா எல்லோருக்கும் போன் பண்ணிட்டேன். இன்னைக்கு நீதான் கடைசி. அப்புறம் என்ன நடக்குது அங்க?

அம்மா:இங்க ஒன்னும் இல்ல, திருப்பூர் போய்ட்டு வந்தேன். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா. உன்னைய பார்க்கணும்னார், ஒரு தடவைதான் அங்க போன் பண்ணேன்டா???

மகன்: முந்தா நேத்து மாமா செல்லுக்கு பண்ணுனேன்மா, அப்போ அவர் வெளிய இருந்தார். சரி, இன்னைக்கு பண்ணறேன்.

அம்மா: ரேவதி வந்து 2000 பணம் வாங்கிட்டு போனா. அவ குழந்தைக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

மகன்: ஏம்மா, போன மாசம் கூட பணம் குடுத்ததா சொன்ன? இப்படியே வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் குடுத்துட்டே இருக்கே? உன்னைய எல்லோரும் நல்லா ஏமாத்துறாங்க...

அம்மா: போடா, உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான். நானும் ரெண்டு பேரை பெத்து வளர்த்திருக்கேன், எனக்கு தெரியும்டா... அந்த குழந்தை நல்லா பெருசாச்சுன்னா அந்த புண்ணியம் எல்லாம் யாருக்கு??? எல்லாம் உங்களுக்குத்தான்...

மகன்: இதையே நீயும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கே, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல.

அம்மா: சரி, நீ என்ன பண்ணுன இந்த வாரம்?

மகன்: ஆபிஸ்... வீடு... இப்படியே 5 தடவை சொல்லு. அப்புறம் நேத்து முழுசா தூங்கினேன். அவ்வளவுதான்.

அம்மா: அதுக்கு நீ பெங்களூரிலயே இருந்துருக்கலாம், வாரா வாரம் ஊருக்காவது வந்துட்டு போயிட்டு இருப்பே...

மகன்: சரிம்ம்ம்ம்ம்மா..... வேற ஏதாவது சொல்லு.

அம்மா: சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன?

மகன்: நானே சமைச்சுக்கறேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உன்னோட அல்சர் இப்போ எப்படி இருக்கு?

அம்மா: அதை விடு, அது அப்படியேதான் இருக்கு. அத்தை சந்தியாவுக்கு 10 பவுன்ல கல்லு வைச்ச ஆரம் எடுத்திருக்கா. நானும் கூடப் போயிருந்தேன். அக்காவுக்குத்தான் அது மாதிரி ஒன்னு வாங்கி குடேன்டா...

மகன்: ஏம்மா 6 மாசம் முன்னாடிதான் அவ கிட்ட அது ஒன்னுதான் இல்லைன்னு வாங்கி குடுத்த... உங்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்.

அம்மா: டேய், அது உங்க அக்கா மகளுக்குடா...

மகன்: என்னது, அந்த நண்டுக்கா? அதைப் போட்டுட்டு நடந்தா அவ கீழ விழுந்துடுவாம்மா... மொத்தத்துல உனக்கு ஏதாவது மகளுக்கு சீதனமா குடுத்துடே இருக்கணும்... நீ நடத்து...

அம்மா: பையனுக்கு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்ன்னு கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.

மகன்: நீதான் ரெடிமேடா வெச்சிருப்பியே, என் பையன் இன்னும் குழந்தை மாதிரின்னு... அதையே சொல்ல வேண்டியதுதானே?

அம்மா: குரு பலன் 29 வரைக்கும் இல்லை, அப்புறந்தான் பார்க்கணும்ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் நம்பற மாதிரி இல்லை. பையனே பார்த்துட்டு இருக்கான்னு சொல்லிட்டேன்.. இப்போ பேச்சே இல்லை. சுதந்திரமா வெளிய போயிட்டு வர முடியுது.

மகன்: நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.

அம்மா:(சிரிப்புடன்)எல்லாம் நல்லபடியா நடக்கும். எம் பையனைப் பத்தி எனக்கு தெரியாதா?

மகன்: சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...

அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?

மகன்: இல்லம்மா... எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசிக்கிறேன்.

அம்மா: எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தைதான் பேசேன். ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?

மகன்: வச்சுர்றேன்...

Saturday, September 09, 2006

ஒரு பயணக் குறிப்பு

3 நாள் கண்காணாத எடத்துக்குப் போய் தொலைஞ்சு போயிட வேணும்ங்கற எண்ணம் எல்லோருக்கும் இருந்துட்டே இருந்தது. ஒருத்தன்தான் வண்டி ஒட்டும் முடிவில் இருந்தோம். ஆனால கார் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் SUV (SUV க்கும் எங்களுக்குமான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை) மட்டுந்தான் என்று சொன்னதும் பாதுகாப்பு கருதி என்னையும் டிரைவராக சேர்த்து வண்டியை வாடைகைக்கு எடுத்தோம்.

நைட் ஒரு மணிக்கு புறப்பட்டு கிண்டல், கேலி, குத்துப் பாட்டு என கீரின் பே தாண்டியதும் வண்டி நான் ஓட்ட ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கப்புறம் வண்டி ஓட்டுவதால் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டினேன்.

020 Munising 009

காலங்கார்த்தால போட்டோ எடுக்குறோம்ன்னு வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுத்து வழியை தவற விட்டு அப்புறம் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தோம். 54 மைலுக்கு ஒரே நேர்கோடாய் ஒரு ரோடு (H13).

020 Munising 028

Munising போய் சேர்ந்ததும் முதலில் முகத்தில் அறைந்தது நீர்தான். அழுகின முட்டையை யாரோ தண்ணியில் கலந்து விட்டது மாதிரியான வாசம். அழுது கொண்டே குளித்து முடித்தேன். உலகிலேயே மிகப் பெரிய தூய நீர் ஏரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சுத்தமான நீர் இல்லை என்பது அமெரிக்காவிலும் இருக்கிறது. படம் போடும் பாறைகளைப்(Pictured Rocks) பார்த்து விட்டு திரும்பும்போது ஒரு உலக சாதனை சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருந்தது. 50 நிமிடங்களில் 150 போட்டோ (ஒரு நிமிஷத்துக்கு 3) என அடித்து தள்ளிவிட்டு அப்பாடா என உக்கார்ந்தோம்.

020 Munising 154

மதியம் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு போனது Au Sable Light Station. இதுக்கு ஒரு மைல் நடக்க வேண்டும். போகும் வழியில் தரகரிடம் குடுக்க ரெண்டு மூணு போட்டோ எடுத்துட்டு கலங்கரை விளக்குக்குப் போனால் மேலே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேர்ல பார்த்ததை விட இந்த போட்டோல இன்னும் நல்லா வந்திருக்கு.

020 Munising 207

அப்புறம் காட்டுப் பாதையில் போய் சேர்ந்த இடம் Log Slide. மக்கள் அந்த காலத்துல மரத்தை வெட்டி வெட்டி இந்த வழியாத்தான் அமெரிக்காவின் மத்த பாகங்களுக்கு கொண்டு போனாங்க. இயற்கையான ஒரு அமைப்பை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி காடுகளையெல்லாம் மொட்டையடிச்சாங்க. என்ன சந்தோஷம்னா காடுகள் இன்னமும் அப்படியேதான் இருக்கு.

020 Munising 227

Log Slide ல இருந்துட்டே Grand Sable Banks and Dunes பார்த்தோம். எங்க ஊரு ஏரியில இந்த பக்கமிருந்து கத்துன அந்த பக்கம் கேக்கும். ஆனால், அவ்வளவு பெரிய ஏரி, அதுக்கு பக்கத்தில் மணல் மேடு, அடர்ந்த காடு ன்னு விசித்திரமா இருந்தது லேக் சுப்பிரீயர்.

020 Munising 220

அடுத்த பார்த்தது Sable Falls. என்ன இருந்தாலும் குற்றாலம், அதிரப்பள்ளி அருவி மாதிரி வருமா? னெல்லாம் ஒப்பீடு செய்யாமல் அழகை அனுபவிக்க மட்டும் செய்தோம்.

Munising 153

எட்டு மணிக்கு சூரியன் உள்ளே போய் வானத்தில் கலர் கோலம் மட்டும் மீதி இருந்தது. அதையும் கேமராவில் அடைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

Munising 169

விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு.

020 Munising 251

காலையில் எழுந்து Mackinac Island போனோம். ஒரு சாதரண தீவை ரொம்ப ஏத்தி விட்டிருக்காங்க. ஒரு நாள் ஓடுனதே தெரியவில்லை.

020 Munising 401

மூனாவது நாள் திரும்ப Munising. Wagner falls, Munising Falls, Miners Falls பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பினோம்.

Munising 261

Munising 270

020 Munising 4532

எல்லோரும் எடுத்த 850 போட்டோல எதைப் போடுவது எதை போட வேண்டாம் என்பதில்தான் குழப்பம் வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு இதைப் போட...

செப்டெம்பர் 10, 2006 ஞாயிறு:

நெட்டில் இருந்து சுட்டதா என சூடாக சந்தேகம் வரும் என்பதால் என் படம் ஒன்னையும் வெட்டிப்பயலின் வார்த்தைக்காக இணைக்கிறேன்.

020 Munising 4451

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணி தள்ளிட்டாங்க. நான் வேற தனியா சொல்லணுமா என்ன??? இது நாங்க வேட்டையாடு விளையாடு படத்துக்கு போய் வந்த பயணக் கட்டுரை.

தமிழ் படம் எதுவும் எங்க ஊர்ல ரிலீஸ் பண்ண மாட்டாங்க (அருள் மட்டும் ஆச்சு, பாய்ஸ், விருமாண்டி ரெண்டும் பக்கத்து ஊர்ல ஆச்சு) நாங்க சிகாகோக்கு வண்டி கட்டிட்டு போய்த்தான் படம் பார்ப்போம். தமிழ் மக்கள் யாருக்கு நியூஸ் கிடைச்சாலும் உடனே கூட்டம் போட்டு யாரு கார்ல யாரு, எத்தனை மணி ஷோ ந்னு கிளம்பி போய்ட்டு நிதானமா ஊர் சுத்திட்டு வருவோம். இப்போ கூட்டம் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதானால தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு நாங்க நாலு பேரு கிளம்பறதா முடிவு பண்ணிட்டோம். ஒரு புது நண்பர் நான் வர்றப்ப மட்டும் உங்களோட வரட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டு நாங்க வண்டியை கிளப்பினோம்.

அந்த தியேட்டரில் அதுதான் நாங்க பார்க்கும் முதல் தமிழ் படம் அதனால வழி மாறிட கூடாதுன்னு உஷாரா ரோட்டையே பார்த்துட்டு இருந்ததுல பெருசா ஒன்னும் பேசிக்கவே இல்லை. தியேட்டரில நிறைய நம்மூர்காரங்களை பார்த்தவுடனே எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு கூட வந்த ஒரு பட்சி சிறகடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதை அமைதிப்படுத்தறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. தியேட்டரில் இருந்து சிவாவுக்கு ஃபோன் போட்டு படத்து வந்தால் சிகாகோவில் வலைப்பதிவர் மாநாடுன்னு ஒரு பதிவு போடலாம்னா அவர் வர முடியாத நிலைய சொன்னார்.

கூட்டத்துல அடிச்சு புடிச்சு உள்ள போயி உக்கார்ந்து படம் ஆரம்பிச்சது முதல் சின்ன சின்ன ஜோக்குகளை ரசிச்சுட்டும், கமெண்ட் அடிச்சிட்டும் விளையாட்ட போயிடுச்சு முதல் பாதி. பொண்ணு யாரு மாதிரி வேணும்ன்னு கேட்டா கமலினி மாதிரின்னு கமலினியைப் பார்த்த முதல் ஷாட்டிலேயே முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கதாநாயகியை பார்க்கும் போதும் நினைச்சுக்கறது, ம்ம்ம்ம்....... நீங்க இதை கண்டுக்காதீங்க. ஏன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்திருக்கும் என அமெரிக்கா தொடர்பான சில தேவையில்லாத காட்சிகளைப் பற்றி இடைவேளையில் ஒரு குட்டி விவாதம் பண்ணிட்டு ரெண்டாவது பாதி பார்க்க உக்கர்ந்த்தா அது கொஞ்சம் சோதனையாத்தான் இருந்தது.

பரவாயில்லை, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தால் அந்த புது நண்பர் வந்து சேர்ந்திருந்தார். எல்லோரடையும் அறிமுகப் படலம் முடிந்தவுடன் ரெண்டாவது பாதி உக்கார முடியலை என ஆரம்பித்து வைத்தார். காரில் அப்படியே ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொரு காட்சியாக எல்லோரும் அலசி காயப் போட்டோம். இந்த படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள், சப் டைட்டில் இருந்தாலும் மக்களை ரீச் ஆகாது. A சென்டர் மக்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும், கட்டாயம் அங்க ஒடும் என சொல்லி முடித்தார். பேசறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அவங்கவங்க மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருந்தப்போ என்னைய பார்த்து "உங்களுக்கு படம் புடிச்சிருக்கா?" ந்னு கேட்டார்.

நான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ என் மூளையில் ஒரு ஃபிளாஷ்... அப்போ நான் A சென்டரா??? என மனசுக்குள் நினைத்தது வாயிலும் வந்துருச்சு. பசங்க எல்லோரும் சிரிச்ச சிரிப்புக்கு புது நண்பருக்கு அர்த்தம் புரியலை. பாஸ், சந்துல அவன் ஊரை சிட்டின்னு சொல்லிக்கிறான். பாவம், அவந்தான் என்ன பண்ணுவான், இப்படியாவாது அவன் ஊரை சிட்டின்னு மாத்திக்கட்டும்ன்னாங்க... மனசுக்குள்ள மட்டும் சொல்லிருந்தா போன பதிவோட டைட்டிலை மனசுக்குள்ள சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாம நம்ம சொந்த ஊரு ரொம்ப மாறிடுச்சுன்னா நாம அன்னியப்பட்டு போயிடுவம்ல... எப்பவும் நாம் நினைக்கறதா நடக்குது????

மூணு நாளைக்கு லீவு... அடுத்ததும் பயணக் கட்டுரைதான்... லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன். மத்த நாலையும் ஏற்கனவே பார்த்தச்சு, இது ஒன்னுதான் பாக்கி...

Thursday, August 31, 2006

நானாத்தான் நாறீட்டனா???

என்னவெல்லாம் செய்யலாம்ன்னு 5 மாசத்துக்கு முன்னாடி ஒன்னு எழுதினேன். ரொம்பக் குறைவான பேருதான் படிச்சிருப்பாங்க. சரி மிச்ச நச்சமிருக்கிறதையும் போட்டுருவோம்ன்னு போட்டா இப்பவும் கொஞ்சம் பேருதான் படிச்சிருக்காங்க. என்னடா எழவு இதுன்னு என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தா ஒன்னு நான் நாறுன மாதிரி இருக்குற பதிவு இல்லைன்னா நாறுனது நாந்தான்னு நெனைச்சுட்டு கமெண்ட் வாங்கின பதிவுதான் ரொம்ப அதிகமாயிருந்தது. ஓ, அப்ப நானாத்தான் நாறிட்டு இருக்கேனா? காமெடியன் சொல்லறதையெல்லாம் மக்கள் காதுல வாங்கிக்க மாட்டோங்களோ? ந்னு வேலைய பார்த்துட்டு இருந்தேன். இப்படி நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இந்த 2005 சனிப் பெயர்ச்சிக்கு அப்புறம் வந்ததா இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். எங்க ஊரு கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். பக்கத்து ஊரு பசங்களுக்கும் எங்க ஊரு பசங்களுக்கும் மேட்ச். மத்தியானம் மொட்டை வெயிலில் கருப்பராயன் கோவில் குதிரைக்கு கீழே ஒண்டி உக்கார்ந்துட்டு இருந்தோம். வந்த பக்கத்து ஊரு பசங்க நேரா வந்து என்ன எங்களுக்கு பயந்துட்டு இப்படி உக்கார்ந்து இருக்கீங்களான்னு லந்து பண்ணவுடனே செந்திலுக்கு வந்ததே கோவம்,தைரியமான பசங்களா இருந்தா பேட்ல பேசுங்கடா, தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். பக்கத்து ஊரு பசங்க கொஞ்சம் கலவரமாயிட்டாங்க.

சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது. பேட்டிங் நாங்கன்னு சொல்லிட்டு வந்து செந்திலை பேட் புடிக்க சொன்னா எனக்கு கை ஈரமா இருக்கு, நீதான் சிக்ஸர் சிக்ஸரா அடிப்பியே நீயே முதல்ல ஆடுன்னு சொன்னான். எனக்கு தரைக்கு மேலெ ஓரடி பறக்கிற மாதிரி இருந்தது.

அதே வேகத்தில் பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு தொலைஞ்சிங்கடா என கர்ஜனை பண்ணீட்டு உள்ளே போனா ரொம்ப தூரத்தில் ஒருத்தன் பந்தோட நின்னுட்டு இருந்தான். எதுக்குடா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து பந்தை வீசி, ம்ம்ம்ம்??? அதெப்படியும் கலர் தோட்டத்துக்குள்ள நான் அடிச்சா போகப் போகுது. அலட்டிக்காம பக்கதிலிருந்து வீசுன்னு அவனை காமெடி பண்ணியதில் அவன் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லாம் பயம் என சிரிச்சிட்டே பந்தை அடிக்க தயாரானேன். முதல் பந்து நடு பிட்ச்சில் குத்தி லட்டு மாதிரி பேட்டுக்கு வந்தது. தூக்கி அடிச்சா பந்து நேர மேல மேல போயிட்டு நேர பந்து வீசினவன் கையிலயே விழுந்தது.

உணர்ச்சிவசப்பட்டு பேட்டை ரொம்ப ஓவரா தூக்கிட்டமே என தலையை தொங்க போட்டுட்டு வெளிய வரும் போது "முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.


மொத்தம் 27 ரன், அவ்வளவுதான். ஏன்டா போறவன் எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு அவுட் ஆகறீங்க, நின்னு விளையாடுங்கடான்னா பொடி சுடுதுடா, உள்ளையெல்லாம் ரொம்ப நேரம் நிக்க முடியலைன்னு நொள்ளை சொன்னாங்க. சரி வாங்கடா அவனுகளையும் அப்படியே உருட்டி எறிஞ்சிறலாம்ன்னு முதல் ஓவரை வீசப் போனேன். வேகமாக வந்து பந்தை எரிந்ததில் பேட்ஸ்மேன் தலைக்கு மேலெ பறந்த பந்து கீப்பரை ஒரு சாத்து சாத்திருந்தது. ரெண்டாவது பாலும் நேரா அவன் நெஞ்சு மேல விழுந்து இவன் பந்து வீசினா நான் பின்னாடி நிக்க மாட்டேன்னு ஓடிட்டான். இவன் இந்த பாலும் நேர வீச மாட்டானு பேட்ஸ்மேன் சும்மா நின்னுட்டிருந்தான். இந்த பந்து நேரே போய் ஸ்டம்பில் அடிச்சு அவன் அவுட். இப்படி ஓவருக்கு 14 பால் வீசி 3 பேரைக் காலி பண்ணியிருந்தேன். வைடு , நோ பாலுக்கு ரன் இல்லைன்னு அவுனக செட் பண்ணின ரூல் எங்களுக்கு நல்லா வேலை செஞ்சுது. இபபடியே போறவன் எல்லாம் 15, 16 பந்து வீசி 25 ரன்ல அவுனுக எல்லாத்தையும் சுருட்டியாச்சு.

தண்ணி காட்டீட்டம்லன்னு குதிச்சிட்டு இருந்தப்போ இந்த பொழப்புக்கு பேசமா எருமைக்கு தவிடு காட்டலாம் இவனுகளோட கிரிக்கெட்ன்னு எவனாவது வந்து கூப்பிட்டீங்க அங்கேயே கிடையா போட்டு மிதிப்பேனுட்டு போயிட்டான் ஒருத்தன். இதுலிருந்து என்ன தெரியுதுன்னா சனிப் பெயர்ச்சி எல்லாம் சாதாரணம்ன்னு தெரியுது. சேச்சே... இதை வைச்சுட்டெல்லாம் நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறதுன்னு முடிவு பண்ணக் கூடாதுன்னு திரும்ப கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.

Sunday, August 27, 2006

கேமரா கவிஞர்கள்

எங்காளு ஒருத்தன் வெளிய போயிட்டு வரலாம்னா கார் சாவி, வீட்டு சாவி எடுத்திருக்கானான்னு பார்க்க மாட்டான் கேமெராவைத்தான் முதலில் எடுப்பான். அவன் எடுத்த ஃபோட்டோ ஒன்னு ஏற்கனவே நான் இங்கே போட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மில்வாக்கீ வந்த முதல் வாரமே நாங்க ரெண்டு பேருமே சர்க்யூட் சிட்டியில $400 க்கு கேமரா + $80 க்கு மெமரி ஸ்டிக் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சதுல( அதுவே இன்டர்நெட்ல வாங்கிருந்தா இன்னும் சீப்பா இருந்திருக்கும், ஆனா எனக்கு இன்னைக்கே வேணும்ன்னு வாங்குனது) அவன் மட்டும் இன்னும் எடுத்துட்டே இருக்கான்.

சரி, சமாச்சாரம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஃபோட்டோ எல்லாம் எங்க புடிக்கிற நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதாலா ஃபோட்டோ ஏதாவது சுட்டுட்டு வரலாம்ன்னு flickR பக்கம் ஒதுங்கினேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி தேடிட்டு இருந்தா நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருந்த முகம் நான் ரொம்ப கூலா இருக்கானே ன்னு கேட்டுட்டு இருந்தது.

ரெகுலரான பட்டேல் ஸ்டைல் ஃபோட்டோகளோட கொஞ்சம் பார்க்கற மாதிரியும் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறான். அவன் எப்படியும் வாரம் ஒரு முறை ஃபோட்டோ சேர்ப்பது உறுதி. நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் எப்படியும் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கும்.


பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...

Friday, August 25, 2006

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ

Long Islan

வரலாறு:

லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீயானது முதன் முதலில் ஹேம்ப்டன் பேஸில் (Hampton Bays) உள்ள ஓக் பீச் இன் (Oak Beach Inn) பார் டெண்டர் ரோஸ்பட் (Rosebud) (அ) ராபெர்ட் பட் (Robert Butt) என்பவரால் 70களில் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது.

செய்முறை:

22.5 மில்லி டெக்கீலா, 22.5 மில்லி ஜின், 22.5 மில்லி வெள்ளை ரம், 22.5 மில்லி வோட்கா, கொஞ்சம் போல சர்க்கரை, எலுமிச்சை ரசம், கோலா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் கிளாஸில் ஊற்றி மேற்புறம் எலுமிச்சை துண்டை சொருகவும்.

*************கட்...கட்...கட்...****************

சர்வர் மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களையும் வைத்து விட்டு நகர்ந்தவுடன்,

நம்பர் 1: அந்த லெக் பீஸ் எடு மாப்பிள...

நம்பர் 2: டேய், நீ கைகாட்டி சொல்லிட்டு இருக்கிறது மீன் டா... மீன் ல லெக் பீஸ் கேட்ட முத ஆளு நீதான்டா...

கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: (தட்டில் இருந்ததை பார்த்துக் கொண்டே) என்ன கருமம்டா இது, வாயிலயே வைக்க முடியல...

நம்பர் 3: புடிக்கலைன்னா எனக்கு குடு நான் சாப்பிட்டு போறேன். சும்மா நை நைன்னு குதிச்சுட்டு இருக்க...

நம்பர் 4: தல, அவரு சொன்னது மீனை... இதுதான் சாக்குன்னு அப்படியே மொத்தமா உறுவரீங்க போல இருக்கு... உங்ககிட்ட உஷாரா இருக்கனும்...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 2: என்னடா வேணும் உனக்கு???

நம்பர் 4: நீங்க என்ன சொன்னீங்களோ அதையோ சொல்லுங்க...

நம்பர் 2: நான் குடிக்க தண்ணி கேட்டேன், அதையே சொல்லட்டுமா???

நம்பர் 4: என்னது தண்ணியா? அதை மனுஷன் குடிப்பானா? சாப்படறக்கு வேற ஏதவது சொல்லுங்க...

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 1: மாப்பிள, நீ இந்த கோக் குடிக்கலைன்னா நான் எடுத்துக்கட்டுமா?

நம்பர் 2: சரி எடுத்துக்கோ. ஒரு நிமிஷம் இரு. ஸ்ட்ராவை திருப்பி போட்டுக்கிறேன். இப்போ குடி...

நம்பர் 1: அப்போத்தான் உன் எச்சை எல்லாம் நல்லா கோக்கில் கலக்குமா??? எல்லா என் நேரம்....

இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...

நம்பர் 5: இனிமேல் நான் பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்....

நம்பர் 2: அப்புறம் அந்த சாந்தி ...

நம்பர் 5: சாந்திகூட எப்படியாவாது பேசிடலாம்னுதான் பார்க்கறேன்...

நம்பர் 2: பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை... எல்லாம் கலி முத்திப் போச்சு...


டிஸ்கி: லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீக்கும் மேற்கண்ட உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.

Saturday, August 19, 2006

டீ டைம்...


அலையாய் நான்,
கால் நனைக்க பயத்தில் குழந்தையாய் நீ!
உன்னை விழுங்கிவிடுவேன்
என்னும் பயம் எனக்கும் ...














உன் விழியில் மாட்டிய பூச்சி நான்,
சிலந்தியாய நீ!
ஏன என்னை விழுங்காமல்
அணு அணுவாய் சாகடிக்கிறாய்...













அம்மோவ்....படத்துக்கு ஏதாவது தலைப்பு வைக்கலாம்ன்னா மண்டை காய்ஞ்சிருச்சு. அப்புறம் கவிஞர் காத்துவாயன் தான் காப்பாத்தினார்... கவிதைன்னு 3 லைன் கிறுக்கி குடுத்துட்டு போயிட்டார்... ஆமா, போட்டோவுக்கு தலைப்பு????

Thursday, August 17, 2006

அண்ணனும் அண்ணியும்...



அண்ணனுக்கு கல்யாணம் என்றதும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா இருந்தது, அதுவும் என் அண்ணியுடன் என்றதும். அண்ணன் ரொம்ப நல்லவந்தான். எங்க பெரியப்பாவுக்கு தப்பாம பொறந்த நல்ல புள்ளை. தொழிலே அமையாமல் சும்மா சுத்திட்டு இருந்தான். அப்பவும் அவனை யாரும் வெட்டிப் பயலன்னு சொன்னதில்லை. பெரியப்பாவின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு உறுதியா நம்புனதோட மட்டும் இல்லாம அண்ணனை வைத்து தொழில் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. அண்ணன் அவனோட விடா முயற்சியால பொழைச்சுக்கிட்டான்.

அண்ணிக்கு என்னை விட 2 வயசுதான் அதிகம். அண்ணியோட கண்ணுல இருக்குற குறும்பை வைத்தே எல்லோரையும் தன் பக்கம் இழுத்து விடுவாள். அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்ங்கற மாதிரி அதிர்ஷ்டக்காரி! ஊரே அவள் பின்னால்தான் சுத்தி சுத்தி வந்தது, இன்னும் வந்துட்டுதான் இருக்கும். அவ எங்க போனாலும் ஜோ ன்னு இளவட்டப் பசங்க கூட்டம் கூடிருவாங்க...ஆனா எனக்கு என்னமோ அண்ணியோட குறும்பு பிடிச்சாலும் பின்னாடி எல்லாம் சுத்தினது கிடையாது.

ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிடிவாதம் அதிகம்ன்னு அவங்க கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு பெரியப்பா சொன்னதுக்கு அப்புறந்தான் நிறைய பேருக்கு தெரிஞ்சுது. அண்ணன் இப்போ இருக்குற நிலைமைக்கு அண்ணியை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா பெரியப்பா சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு உறுதியா இருந்தான். அண்ணியும் ரொம்ப பொறுமையா காத்துட்டு இருந்தாங்க.


அவங்க ரெண்டு பேருக்கும் கசமுசான்னு ஊருக்குள்ள பேச்சு வந்தப்போ, அவங்கப்பா ரொம்ப நல்லவரு, பையன் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான்னு ஒரு கும்பலும், அண்ணி இருக்கிற இருப்புக்கு இவனை எல்லாம் திரும்பி பார்ப்பாங்களான்னு ஒரு கும்பலும் மாறி மாறி பேசுச்சு. இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு.


கல்யாணத்துக்கு யாரையும் அழைக்கலை அதனால வருத்தப்படாதீங்கன்னு சிவகுமார் பெரியப்பா சொல்லிட்டாரு. எங்க தாத்தாதான் சொல்லுவாரு நான் அப்படியே சூர்யா அண்ணன் மாதிரி இருக்கேன்னு. பார்போம் எனக்கு அண்ணி ஜோதிகா மாதிரி பொண்ணு கிடைக்குதான்னு...

Wednesday, August 16, 2006

மசாலா மிக்ஸ்...

வேலை ரொம்ப அதிகம்ங்க, பிளாக் பக்கம் ஒதுங்கவே முடியலை. இருந்தாலும் நான் வயிறு வலிக்க சிரிச்ச சில மேட்டரை சொல்லாம இருக்க முடியலை.

Community

Orkutல friend, friend-oட friend, community, friend-oட community ன்னு போயிட்டே இருக்கலாம். அங்க பார்த்தா ஒரு community ஒரு சமூகத்தைச் சேர்ந்த்தது. அடடா, எல்லோரும் நல்ல இனப் பற்றோட இருக்காங்க (மத்த சமூகத்து மக்களுக்கும் இருக்கலாம், இது வரை என் கண்ணில் படவில்லை) சரி வந்ததுதான் வந்தோம் நமக்கு ஏதாவது புரியற மாதிரி, என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி இருந்தா எட்டிப் பார்த்துட்டு போலாம்ன்னா முதல் டாபிக்கே என்னை இழுத்து உள்ளே போட்டுவிட்டது. "காதல் கல்யாணத்தை நம் சமூகம் அங்கீகரிக்கிறாதா? எனக்கு காதல் மற்றும் வீட்டில் பார்த்து நடத்தும் arranage (ராகவன், உதவி பண்ணுங்களேன்) கல்யாணம் பண்ண ஆசை" ன்னு ஒருத்தர் ஆரம்பிச்சு வைச்சுட்டார். அதுக்கு பதில் "சரி, உன்னையெல்லாம் யாரு காதலிப்பா? (உன் ஃபோட்டோ பார்த்துட்டுத்தான் சொல்லறேன்)" ன்னு சரி நக்கலா இருந்தது. அடுத்தது அதுக்கு மேல: "நீ இந்த மாதிரி கேட்டு இங்கயே ஃபிகர் பிடிச்சு வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிக்குவ போல இருக்கு".

அப்புறம் கொஞ்சம் சீரியஸ்: "இந்த மாதிரி நம்ம சமூகத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிட்டா நாமளும் ஒரு நாள் டைனோசர் மாதிரி அழிஞ்சு போயுடுவோம், ஆதலால் காதல் செய்வீர்" ன்னு இருந்ததைப் பார்த்து அடப்பாவிகளா, வெறும் 300, 400 பேரு இருந்த ஊரை காதல் கல்யாணம் எல்லாம் இல்லாமலேயே இப்போ 100 கோடியைத் தாண்டி (மொத்த இந்தியாவையும் சொன்னேன்) இன்னும் கொஞ்ச நாள்ள நிக்க இடம் இல்லாம பண்ணீருவீங்க போலிருக்கு, டைனோசரோட ஒப்புமை இந்த இடத்தில் ரொம்ப தேவைதான்னு என் மனம் விட்டு சிரித்தேன்.

**********************************

chicken-copy

சைவம், அசைவம்ன்னு எங்க நண்பர்கள் கூட்டதுக்குள்ள அடிக்கடி அடிச்சுக்குவாங்க. ஐநா சபை ரேஞ்சுக்கு சமாதானம் எல்லாம் பண்ண வேண்டி வரும். இந்த மாதிரி சூடா விவாதம் (ஆமாங்க, ரெண்டு மூனு நாளுக்கு நடக்கும், இது வரைக்கும் வெட்டுக் குத்து இல்லை) நடந்து கொண்டிருந்த போன வாரத்தில் ரெண்டு வெவ்வேறு தொடர்பு இல்லாத இடங்களில் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கேட்டேன். ரெண்டுக்கும் சிரிக்காம இருக்க முடியலை.

"I Love Animals, only in the Lunch and Dinner"

"Why Make your stomach a graveyard"

நீ எந்த கட்சின்னு கேப்பீங்கன்னு தெரியும். அது என்னோட சந்தோசத்தைப் பொறுத்து. கட்சி மாறிட்டே இருப்பேன்.

**********************************

Sky-Diving-ani1

அப்புறம் நண்பன் ஒருத்தன் sky diving போன அனுபவத்தை அவனது சைட்ல போட்டிருந்தான். ரொம்ப நல்லா சொல்லிருந்தான். கடைசியா, காலை முதலில் கீழே நிலத்தில் வைக்காமல் நல்லா சௌகரியமா உக்காந்ததை சொல்லி முடித்தபோது என் கண்ணில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது. பின்னே, கடைசி லைன் இப்படி இருந்தா சிரிக்காம என்ன பண்ணுவது...

"Finally they gave me a nice little certificate, that certifies me, XXXXXX has actually jumped (!) from an airplane !!"

who landed on his ... ன்னு சேர்த்து படிச்சுப் பாருங்க, அப்பத் தெரியும் என் சிரிப்புக்கு காரணம்.

**********************************

இது ரொம்ப வித்தியாசமான விளம்பரம். முதுகு விளம்பரத்துக்குன்னு e-bay -ல பார்த்தேன்.

e-Bay


எங்கேயோ போயிட்டு இருக்கோம், நல்லதுக்குத்தானான்னு தெரியலை (நான் என் வேலையச் சொன்னேங்க, நீங்க வேற)..

Monday, July 31, 2006

மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...

nose

ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்தது இது. சனி உச்சத்துல இருக்குன்னு எங்கம்மா சொல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு எள் தீபம் போட்டுக் கொண்டிருந்த நேரம். எங்கிட்ட இருந்த PDA (Palm Tungsten E) வில் mp3 பாட்டு கேக்கலாம். 100 பாட்டு எப்பவும் இருக்கும் அதில். புதுசு, குத்து, சோகம், ரிலாக்ஸ்ன்னு வகை வகையா பிரிச்சு வைச்சுக்கிட்டு பஸ்ஸில் பாட்டு கேட்பேன். 1 மணி நேர பயணம் மினிமம் கியாரண்டி என்பதால் குறைந்தது 10 பாட்டு கேட்கலாம்.

அன்னைக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா யார் கூடவோ ரொம்ப நேரம் பேசினதில் சந்தோஷமா இருந்தேன். ஸ்கூல், காலேஜ், கோயில் என எல்லா இடத்திலுமே கடைசியில் நின்னு நின்னு அதே பழக்கத்தில் பஸ்ஸில் கடைசி சீட்டுக்கு போனால் ஏற்கனவே 3 பெண்கள் உக்கார்ந்து கொண்டு தமிழில் சும்மா சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். சரி, வந்தது வந்தாச்சுன்னு அதற்க்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் உக்கார்ந்து கொண்டேன். ஐடி கார்டை பெல்ட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன்.

சீட்டில் உக்கார்ந்த பிறகு வழக்கம் போல ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு உக்கார்ந்திருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களது டிரெயினிங், யுனிக்ஸ் என பேசியதால் அதுவும் போர் அடித்தது. ரொம்ப சந்தோஷமா இருந்ததாலோ என்னவோ உலகத்தில் மற்றவர்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக இயங்குவதாக தோன்றியது. என் PDA வை எடுத்து (இரண்டாவது வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) நோண்ட ஆரம்பித்தேன்.

இதை கவனித்த ஒரு பெண், "பாருடி பீட்டரை... கால்குலேட்டரை கையில் வைச்சுக்கிட்டு பால்ம்டாப் கையில இருக்கிற நினைப்புல மிதக்கிறதை"...

"ஆமாண்டி, வந்தவுடன் ஐடி கார்டை அவசர அவசரமா எடுத்து ஒளித்து வைத்ததை பார்த்தியா? இப்போதான் ட்ரையினிங் பேட்ச்சில் சேர்ந்திருப்பான் போல"

"புதன் கிழமை பக்கா ஃபார்மல்ஸ் போட்டுட்டு வந்திருக்கான். அவன் பேக் பாரேன், 3 புக் உள்ள இருக்கு, நிச்சயம் டிரெயினிங் பேட்ச்தான்"

அதுவரை பேசாமல் இருந்த ஒரு பெண், "ஏண்டி, அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுட்டு இந்த ஓட்டு ஓட்டறீங்க... அவனை பார்க்காமல் கிண்டல் பண்ணுங்க. அவனை பத்தி பேசுறம்ன்னு தெரிஞ்சு எவன் கிட்டையாவது அர்த்தம் கேட்டு தொலைக்கப் போறான்"

சும்மா டர் டர்ருன்னு கிழியர அளவுக்கு ஓட்டித் தள்ளிட்டாங்க. சரி நமக்கு விதிச்சது அவ்வளவுதான்... தமிழ் பொண்ணுகளா இருக்கு, அப்படியே பிக்கப்,ட்ராப், எஸ்கேப்ன்னு பிளான் பண்ணினா நம்மை பஞ்சர் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல வழிஞ்சா நல்லா இருக்காதுன்னு பாட்டு கேக்க என் சோனி இயர் ஃபோனை எடுத்தேன்...

"அது கால்குலேட்டர் இல்லடி, 50 ரூபாய்க்கு விக்கிற FM ரேடியோ, செம ஹாட் மச்சி" ன்னு சுசித்ரா மாதிரி ஹஸ்கி வாய்சில் சொல்லி வயித்தை புடிச்சி சிரிச்சாங்க. நான் இந்த இழவையெல்லாம் கேக்கணும்னு இருக்கே,"கடவுளே, உனக்கு கண்ணே கிடையாதா??? இப்படியெல்லாம் அழும்பு பண்ணாறாங்க, நான் ஆடம் டீஸ்ன்னு கேஸ் கூட போட முடியாதே" என புலம்பினேன். இருந்த பதட்டத்தில் இயர் ஃபோனை PDA வில் சொருகினேனா என பார்க்காமல் காதில் மட்டும் மாட்டிக் கொண்டு குத்து பிளே லிஸ்ட் செலெக்ட் பண்ணினேன்.

கோடம்பாக்கம் ஏரியா, கூத்து பார்க்க வாரியா ந்னு எங்கேயோ தூரத்தில் கேக்குது. என்னடா ஆச்சு நம்ம இயர் ஃபோனுக்கு, சும்மா ஹோம் தியேட்டர் எபெக்ட் குடுக்குமே, இன்னைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்தா இயர் ஃபோனை சொருகவே இல்லை. அவ்வளவுதானான்னு இயர் ஃபோனை சொருகிட்டு தலையை தூக்கிப் பார்த்தா 3 பொண்ணுகளும் பேயறஞ்ச மாதிரி என்னையவே பார்த்தாங்க...

அட இதுக்கே பயந்துட்டீங்க, நீங்கெல்லாம் கண்ணகி பரம்பரைன்னு நினைச்சா இப்படி பம்முறிங்க, அய்யோ அய்யோ... ன்னு நான் பாட்டில் மூழ்கி விட்டேன். அப்புறம் அந்த 3 பெண்களும் உக்கார்ந்து இருந்த இடத்தில் இன்னொரு ஆள் உட்காரும் அளவுக்கு இடம் உருவானது. அவர்கள் நான் இறங்கும் வரை வாயை திறக்கவே இல்லை என்பது கூடுதல் செய்தி.

Friday, July 28, 2006

பார்வைகள்

2006, ஜுன் இரண்டாம் வாரம் அது. ஒவ்வொரு வார இறுதியிலும் வீட்டில் அட்டென்டண்ஸ் குடுத்து வந்ததால் நேரம் தவறாமல் சகாக்களுடன் வீட்டின் முன் உள்ள புளிய மரத்தினடியில் நின்று பேசி கொண்டிருந்தேன்.என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. திடீரென பாட்டிக்கு காய்ச்சல் அதிகமாகி விட்டதால் டாக்டரை வீட்டுக்கு வரச் சொல்லாம் என கட்டியிருந்த லுங்கியுடன் கிளம்பி விட்டேன்.

அப்போது இரவு 8 மணி. டாக்டர் கிளீனிக்குக்கு 1 கிலோமீட்டர் போக வேண்டும். டாக்டரை பற்றி ஒரு சின்ன முன்னுரை. எங்கள் ஊருக்கு 15 வருடமாக சிகிச்சை அளிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் (எனக்கு உடம்பு சரியில்லைன்னா பாட்டிதான், டாக்டர் எல்லாம் கிடையாது). ஆனால் அவர் முழு நேர அலுவல் பெருந்துறை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியும்.

கிளீனிக்குக்கு போன பொழுது டாக்டர் உள்ளே ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்தார். டாக்டரின் மகள் நிறைய சாக்லெட் வைத்துக் கொண்டு உக்கார்ந்திருந்ததால் என்ன பிறந்த நாளா என கேட்டேன். இல்லை 10 ம் வகுப்பில் 1010 மார்க் எடுத்திருக்கேன் அதுக்கு என்றாள். ரொம்ப சந்தோசம் எந்த ஸ்கூல், எந்த குரூப் என கேட்பதற்க்குள் டாக்டர் என்ன வீட்டுக்கு போலாமா என கேட்டுக் கொண்டே வெளியே வந்தார். என்ன டாக்டர் உங்களை மாதிரியே டாக்டருக்கு படிக்க வைக்க போகிறீர்களா என சொல்லிவிட்டு நான் என் நிலைமையை சொன்னேன்.

என்னப்பா, வீட்டுக்கு போகும் நேரத்துல இந்த மாதிரின்னு என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். டாக்டர், இது உங்களுக்கு புதுசில்லை ஆனால் எஙக பாட்டிக்கு புதுசு... வீட்டுக்கு போற வழிதானே பார்த்துட்டு போலாமே என்றேன். 15 வருடமாக எங்கள் ஏரியாவில் மருத்துவம் செய்து கொண்டு இருந்தாலும் எங்கள் வீட்டுக்கு வழி தெரியாது என்றதால் வழி சொல்லிவிட்டு வீட்டுக்கு முன்னே போனேன்.

எங்கள் பழைய வீட்டை இடித்துக்கட்டி 2 வருடம் ஆகிறது. வீடு கட்டும் பொழுது நான் அருகில் இல்லாததால் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதை எல்லாம் வைத்து வீட்டை என் மனதில் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஒரு வருடத்துக்கு முன் வீட்டிற்க்கு சென்ற பொழுது என் கற்பனைக்கும் வீட்டுக்கும் நிறைய இடைவெளி இருந்ததால் அது சரியில்லை இது சரியில்லை என ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பேன்.

எங்க வீட்டுக்கு பெரிய கேட் இருக்கும். என்ன பெயின்ட் அடிப்பதுன்னு பெரிய பட்டிமன்றமே நடத்தி கருப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்திருந்தோம். அதுவரைக்கும் வீட்டில் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது என்ன இது கேட்டுக்கு கருப்பு பெய்ண்ட் என்று கேட்டதில் எங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் (அவர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை இப்பொழுது யாரும் குறை சொல்வதில்லையாதலால்). டாக்டர் காரை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு சொன்ன முதல் வார்த்தை கேட் ரொம்ப நல்லா இருக்கு, அதுவும் இந்த கருப்பு மஞ்சள் காம்பினேஷன் ரொம்ப இருக்குன்னு சொல்லிட்டே வீட்டுக்குள் வந்தார்.

பாட்டிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே வீட்டை நன்கு பார்த்துக் கொண்டிருந்தார். அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்குன்னு சொன்னவர் கடைசியாக வரிசையாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்தார். சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதை தொகுப்பு, Da Vinci Code, A monk who sold his Ferrari, Angels and Demons, The Alchemist என கலந்து இருந்ததை பார்த்து இதெல்லாம் யாரு இந்த கிராமத்தில படிக்கிறதுன்னு கேட்டார்.

எல்லாம் எஙக பையன்தான்னு பாட்டி சொன்னாங்க. அதுவரை என்னிடம் சரியாக பேசாத டாக்டர் திரும்பி, நீ என்னப்பா படித்திருக்கிறாய் என கேட்டார். என்ஜினியரிங் என்று சொல்லியதும், அதை படிச்சிட்டு இந்த கிராமத்துல என்ன பண்ணிட்டு இருக்கிறாய் என ஆச்சர்யமாக கேட்டார். இல்லைங்க, பெங்களூரில் இருக்கிறேன், வார இறுதியில் ஊருக்கு வந்துவிடுவேன் என்று சொன்னதும், வார வாரம் வர்றியே, சாப்ட்வேரா கம்பெனியிலயா இருக்க? என கேட்க ஆம் என் சொன்னேன். திரும்பவும் ஆச்சர்யபட்டார். டாக்டர் ரொம்ப ஆச்சர்ய படாதீங்க, உங்க உடம்புக்கு ஒத்துக்காது என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

உன் உடையை பார்த்து உன்னை நான் தவறாக நினைத்துவிட்டேன். என் பார்வையை நான் சரி செய்து கொள்ளவேண்டும் என்றார். நீங்களும் இந்த வீட்டை பற்றிய என் பார்வையை சரி செய்துவீட்டீர்கள். இங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பார்த்து கட்டிய வீட்டை அது சரியில்லை இது சரியில்லை என எதாவது நொல்லை சொல்லிக் கொண்டிருப்பேன். ஒவ்வொருவருடைய பார்வையும் அது வைக்கும் அளவுகோலும் வித்தியாசம். என்னுடையதுதான் பெருசு என்பதில்தான் பிரச்சினை. இப்போ இதை புரிஞ்சிக்கிட்டதால இனி மேல் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். எங்கள் வீட்டில் அனைவரது முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.

Tuesday, July 18, 2006

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

அமெரிக்க பயணம் முடிவானவுடனே இந்த முறை ரொம்ப நல்லா பிளான் பண்ணி போகணும்ன்னு முடிவு பண்ணி சில காரியங்கள் செய்தேன். குறைந்த நேரம் மட்டும் ஏர்போர்ட்டில் செலவு செய்வது மாதிரியான பயண திட்டம் அமைத்துக் கொடுத்தார்கள். பெங்களூர் டூ டெல்லி கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் என்றதும் என்னையும் அறியாமல் கிங்ஃபிஷர் காலேண்டரும் F TV யும் ஞாபகத்திற்க்கு வந்தது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் 3+3 சீட். அதில் எனக்கு எயில் சீட், பக்கத்தில் ஒரு மத்திம வயது பெண் மற்றும் ஒரு பாட்டி, இந்த பக்கம் ஒரு ஹை ஃபை இளைஞன், அவனுக்கு பக்கத்தில் இரு பாட்டிகள். என் பெயர் என்னன்னு பக்கத்தில் இருந்த மத்திம வயது பெண் ஆரம்பிக்க நான் என் வாழ்க்கை வரலாற்றை சொன்னேன். அந்த மத்திம வயது பெண் உடனே என் பெயர் சவிதா, H இல்லைன்னு சொன்னாள். தென்னிந்தியர்கள் எல்லா இடதிலும் H போடுவீங்க, ஹிந்தியிலதான் சரியாக எதையும் சொல்வார்கள் என துதி பாடினாள். ஓ, அப்படியா, J I T K A என ஒவ்வொரு எழுத்தாக சொல்லி என்னுடன் வேலை செய்யும் செக்கோஸ்லோவியா பெண்ணின் பெயர், இதை எப்படி ஹிந்தியில் கூப்பிடுவீர்கள் என கேட்டேன். யோசிக்காமல் ஜிட்கா என்றாள். செக் மொழியில் அது இட்கா, ஜிட்கா இல்லை. அவரவர் மொழியில் எப்படி உச்சரிக்க வேணுமோ அப்படி சொல்லிக் கொடுங்கள், நாங்கள் சொல்லுவோமே, அதை விட்டுவிட்டு வெட்டி தனமாக பதில் சொல்லக் கூடாதுன்னு கொஞ்சம் காட்டமாக சொன்னேன்.

அதன் பிறகு என் தொழில் விவரங்கள் கேட்டறிந்தாள். அந்த பெண் ஒரு டீச்சர் என்பதால் இப்போதைய குழந்தைகள் படும் அவஸ்தைகள் மற்றும் எங்கள் காலத்தில் நாங்கள் இருந்தற்க்கும் அவர்களின் இப்பொதைய பண்புகளை சிறிது நேர்ம் அலசி ஆராய்ந்தோம். எனக்கு திடீரென மூக்கு அடைத்த மாதிரி இருந்ததால் கிங்ஃபிஷர் அழகி (ஏர் ஹோஸ்டஸ் என்பது அவர்களை அவமானப்படுத்தும் என நினைக்கிறேன்)யிடம் சொன்ன மாத்திரத்தில் கேண்டி, தண்ணீர் பாட்டில், மாத்திரை என நன்கு கவனித்தாள்.
இதையெல்லாம் கவனித்த ஹை ஃபை இளைஞன், அவனாக வந்து பெங்களூர் ஒரு வெட்டியான ஊரு, இவ்வளவு வரி குடுத்தும் டிராபிக் ஜாம், குறுகலான ரோடுகள், ரோட் சென்ஸ் இல்லாத மக்கள் என திட்டி தள்ளினான். இந்த இடத்தில் நானும் கொஞ்சம் ஒத்துப் போனதால் ஆமாம் போட்டு வைத்தேன். டெல்லிதான் சிறந்த ஊர், இங்க இல்லாததே இல்லை, டிராபிக் சுத்தமாகவே இல்லை என சொன்னான். அப்புறம் ரஜினி பற்றி பேச்சு வந்தது. அவன் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு சந்திர முகி படத்தின் முதல் சணடையை கலாய்த்துக் கொண்டிருந்தான். கிருஷ் பார்த்துட்டையான்னு கேட்டேன். பார்த்தேன், நல்ல படம்ன்னு சொன்னான். நான் சிரித்துக் கொண்டு விமானத்தை விட்டு இறங்கி லக்கேஜ் எடுக்க அவனுடன் ஒன்றாக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுதும் அவன் ரஜினி பற்றியே ஒயாமல் பேசிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வெள்ளை நிற கதர் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் , தோளில் ஒரு ஜோல்னா பை வேகமாக மின்னல் மாதிரி வந்து கொண்டிருந்தது. திரையிலேயே பார்த்து பழகிய முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த போது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். சரியாக அவர் என்னை கடக்கும் போது, சட்டென்று என் குரல் எனையும் அறியாமல் வெளி வந்தது. சிவாஜி சூட்டிங் முடிஞ்சுதா சார்? நாங்கெல்லாம் ரொம்ப ஆர்வமாக இருக்கோம் என்றேன். சட்டென என்னிடம் கையை நீட்டி குலுக்கிக் கொண்டே நல்லா வந்துட்டு இருக்குங்க அப்படின்னு சொன்னார். வரேன் என என் பதிலுக்கு காத்திராமல் மின்னல் மாதிரி வெளியேறினார். அடடா, கேமரா கையிலேயெ இருக்கு, பேனா இருக்கு ஒன்னும் தோணவே இல்லைன்னு என் நெற்றியில் தட்டிக் கொண்டிருந்தேன். அது ரஜினியா,இவ்வளவு சிம்பிளா இருக்காரு? என அந்த டெல்லிக்காரன் அசந்து போய் கேட்டான். ஆமாம், ரஜினி கிட்ட அப்படி என்ன இருக்குன்னு கேட்டியே, எவ்வளவு உயர்த்தில இருந்தாலும் அவரு யாருன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நமக்குத்தான் மத்தவங்க பண்ணுவது தப்பாகவே தெரிகிறது என்றேன்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் -ஷட்டில் என்பதால் எங்களை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி வேறு ஒரு கார் மூலம் அழைத்துச் சென்றார். டெல்லி ரோடெல்லாம் ரொம்ப அகலமாகத்தான் இருந்தது, ஆனால் 5 கிலோ மீட்ட்ர் செல்ல 45 நிமிடம் பிடித்தது. ஏர்போர்ட்டில் இறங்கும் போது ஏனோ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது ஞாபகத்துக்கு வந்தது.

Tuesday, July 04, 2006

கரம், சிரம் உள்ளே நீட்டாதீர்!!!

கரம், சிரம் புறம் நீட்டாதீர்ன்னு எல்லா அரசு பேருந்துகளிலும் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது ரொம்ப தப்பான கருத்து என்பதை நிருபிக்கும் நிகழ்ச்சி இன்னைக்கு காலைல நடந்தது.

பெங்களூரில் ஒசூர் ரோடு டிராபிக் பத்தி நான் தனியா சொல்ல வேண்டியதில்லை. வேண்டிய மட்டும் கேட்டிருப்பீர்கள் இல்லைன்னா அனுபவத்திருப்பீர்கள். என்னோட கைக்கணிணியில் புதுப்பேட்டையிலிருந்து "ஒரு நாளில்" பாட்டை செலக்ட் செய்துவிட்டு அப்படியே ஜன்னலில் சாய்ந்து கண்ணை மூடலாம் என நினைத்தால் அருகில் வந்து கொண்டிருந்த ஹுண்டாய் சான்ட்ரோவில் ரெண்டு கைகள் ஒரே சமயத்தில் கியர் ராடின் மேல் இருந்தது.

இது என்னடா வித்தியாசமான விளையாட்டே இருக்கே யாருன்னு பார்த்தா ரெண்டு IT ப்ரொபசனல்ஸ் (வேற யாரு இந்த கூத்தெல்லாம் பட்ட பகலில் பண்ணுவாங்க). நகராத வண்டிக்கே சும்மா மாத்தி மாத்தி கியர் போட்டுட்டு இருந்தாங்க. அப்புறம் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சு முகத்தை முகத்தை பார்த்துட்டே இருந்தாங்க ஆனா வாயை மட்டும் தொரக்கவே இல்லை. அப்படி இப்படின்னு 5 நிமிஷம் போச்சு. முன்னாடி இருந்த குப்பை லாரி எல்லா புகையையும் நேரா சான்ட்ரோ மேலே மொத்தமாக வாரி இறைத்துவிட்டு (குப்பை லாரி வாழ்க!!!) மெதுவாக 20 அடி நகர்ந்தது. சான்ட்ரோ அப்படியே ஸ்டெடியா நின்ன இடத்திலேயே நிக்க என் பஸ்ஸும் நகர ஆரம்பித்தது. சரி காலைக் காட்சி முடிந்ததன்னு பாட்டை கேக்கலாம்ன்னு போன டமார்ன்னு ஒரு சவுண்ட். சான்ட்ரோ பார்ட்டிகள் ரோட்டில் அவர்கள் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டு சும்மா நச்சுன்னு சான்ட்ரோவின் முன்பக்கதை குப்பை லாரியில் பார்க்கிங் செய்திருந்தார்கள்.

அப்பாடா, இனி நிம்மதியாக பாட்டுக் கேக்கலாம்ன்னு தலையை சாய்ச்சா எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகுதான் கண்ணை முழித்தேன்.

கரம், சிரம் உள்ளேயும் நீட்டாதீர்!!!!