Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, October 31, 2007

கற்றது தமிழ்


முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்!!!


பிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. "தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்? என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமிழின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.


மானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.


பிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. "நிஜமாதான் சொல்லறியா?" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை!


காலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.


சாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; இயக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.


தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். "இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்" என்னும் காரணம் உச்ச கட்டம்.


சாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர்.


எங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.


யவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார்.



கற்றது தமிழ்; ஒழுக்கமல்ல.

Thursday, July 19, 2007

இழக்காதே!!!




நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல.


இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் போய்ட்டு வந்த நம்ம பசங்க எல்லாம் எதோ 15-20 வருசம் பின்னாடி இருக்கறதா ஃபீல் பண்றாங்க. சத்தமில்லாம நம்ம ஊர் சாஃப்ட்வேர் கம்பெனி எல்லாம் பிலிப்பைன்ஸ்ல கால் ஊன்றாங்களாம். சீனாகாரன் வேற இங்கிலீஸ் படிச்சுக்கிடே இருக்கறான். தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பானு நம்மளை விட கம்மியா கூலி வாங்கிட்டு மாரடிக்க நெறையப் பேரு தயாரா இருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சாஃப்ட்வேர் வேலை எல்லாம் இந்தியாவுக்கு வந்த மாதிரி இந்தியாவுல இருந்தும் அதை விடக் கொறைவான செலவுல செய்து தரக் கூடிய நாட்டுக்குப் போகும்னு சொல்றாங்க. சொல்றது என்ன? அது ஏற்கனவே சத்தமில்லாம நடந்துக்கிட்டு இருக்கு.


இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வேலைல இருக்க முடியும்னு தெரியல. வேலையை விடவும் முடியாது. சோத்துக்கு வழி வேணும்ல? சுயமா எதாவது பிசினஸ் பண்ணலாம்னாலும் அதுக்கு துணிச்சல் இல்லை. ஆபீஸ்க்கு போய்க்கிட்டு அப்படியே சைடுல எதாவது பண்ணலாமானு யோசிச்சா அதுவும் முடியாது போல இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி அதை ஒரு ஆப்ஷனா வெச்சுக்கலாமா? Early retirement க்கு அது உதவுமா? இப்படியெல்லாம் மண்டையைக் கொடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப, சொல்லி வெச்ச மாதிரி அதே செய்தியை ஒரு புத்தகம் ஆணித்தரமா சொல்லுது, அதுவும் தமிழில்.


சக வலைப்பதிவர் மற்றும் என் கல்லூரி சீனியர் செல்லமுத்து குப்புசாமி எழுதிய 'இழக்காதே' புத்தகம் கீழ்க்கண்ட நம்பிக்கை கலந்த வாசகத்தோட முடிஞ்சு நமக்குள்ள ஒரு ஆரம்பத்தை உருவாக்கத் தூண்டுது.


"துணிச்சலாக வேலையைத் துறந்து விட்டு, சுய தொழில் செய்ய முடியாத சூழலில், மாதச் சம்பளத்தில் இருப்பவர்களின் லட்சிய வேட்கையை நிறைவு செய்யும் சாதனமாகப் பங்கு முதலீடு விளங்குகிறது. உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாண்டு, மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி, தீர்க்க தரிசனத்துடன் நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து சராசரியாக வருடம் 20 சதவிகிதம் வளர்ச்சியை எட்டுவீர்களானால், செல்வந்தராக ஓய்வு பெறுவீர்கள் என்பது நிச்சயம். வயதான பிறகா? இல்லவே இல்லை. நடுத்தர வயதிலேயேகூட விரும்பி ஓய்வு பெறலாம்."
கடைசி வரி இப்படின்னா, ஆரம்பம் இப்படி..
"வருடமெல்லாம் உழைக்கிறோம். மும்பையில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார் முதலாளி. அவரை மேலும் பணக்கார் ஆக்குவதற்கே நம் உழைப்பு போகிறது.'


புத்தகத்தின் மற்ற பக்கங்களைக் கவனமாகப் படிக்கும் போது, அந்த வரிகள் நிஜம் என்று உறுதியாகத் தெரிகிறது. மற்றவனுக்கு ஊழியனாக வேலை செய்து இந்த உலகத்தில் எவனுமே பெரிய ஆளானது கிடையாது. நமக்கெல்லாம் வேலையை விடற அளவுக்கு தைரியம் கெடையாது. அப்படியே விட்டாலும் பொண்ணு கெடைக்காது. ஆனா, ஷேர் மார்க்கெட் நல்ல மேட்டரா தெரியுது. நம்ம செய்யற வேலை நாளைக்கு அல்லது பத்து வருசத்துல தென் ஆப்பிரிக்காவுல கேப்டவுன் நகர்ல யாராவது செய்யலாம். ஆனா, நாம நல்லா முதலீடு செய்ய கத்துக்கிட்டா அதே தென்னாப்பிரிக்க கம்பெனில பங்குதாரரா இருக்கலாம்.


ஆனா, முதலீடு செய்யறதுக்கு என்ன தெரியணும், எவ்வளவு தெரியணும், எது சரி, எது தப்பு, எதை நம்பணும், எதை நம்பக் கூடாது அப்படீங்கற வெவரம் எல்லாத்தையும் ரொம்ப நல்லா தொகுத்திருக்கார் நம்ம குப்புசாமி.
"நீங்க படிக்கற எந்த புத்தகமும், செய்தியும் உங்களைத் தவறா வழி நடத்த அனுமதிக்காதீங்க, இந்தப் புத்தகம் உட்பட" என்பது அவரது யோசனை. But, every page of this books seems to be rich in content and mean a lot. எல்லாமே சரியா வழி நடத்துது. அல்லது யாரும் நம்மைத் தப்பா வழி நடத்தாமக் காப்பாத்திக்க உதவுது.


இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இரண்டு எண்ணம் ஏற்படுகிறது. ஒன்று, இவ்வளவு மேட்டர் இருக்கா என்பது. மற்றது, அட இவ்வளவுதானா(எளிமை) என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நமக்குத் தோன்றுகிறது.


சில புத்தகங்கள் பாமரத்தனமா இருக்கும். சிலது ரொம்ப ஹை லெவலா நமக்குப் புரியாத பாஷைல இருக்கும். இது இந்த இரண்டு வகையிலும் வராது. எளிமையாவும், விவரமாவும் இருக்கு. ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியாதவங்க நெறைய தெரிஞ்சுக்கலாம். ஏற்கனவே தெரிஞ்சவங்க இன்னும் தெரிஞ்சுக்கலாம்.


யாரு கண்டா? 40 வயசுல தேவைக்கு அதிகமான பணத்தோட ரிட்டையர்ட் ஆகறதுக்குத் தேவையான பாதையில் நீங்க எடுத்து வைக்கிற முதல் அடியாக இந்த நூல் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


புத்தகத்தை ஆன்லைனில் பெற http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&itemid=292

Sunday, February 18, 2007

தீபாவளி

திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.

கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.

ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.

கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.

சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.

நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.

பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...

காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.