Saturday, January 25, 2014

வெட்டுப்புலி - தமிழ்மகன்

வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்துக்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டு ஆகிறது - புத்தகத்தின் பின்னட்டை வாசகம்.




80-90 களில் கில்லி, பம்பரம், கோலிக்கு அடுத்த படியாக அதிகம் விளையாடிய விளையாட்டு தீப்பெட்டி அட்டை. தீப்பெட்டி மற்றூம் சிகரெட் அட்டைகளை ஒரு வட்டத்துக்குள் வைத்து தட்டையான கல்லை தூர இருந்து வீசி வட்டத்துக்கு வெளியே தள்ள வேண்டும். வெட்டுப்புலி அட்டைக்கு மதிப்பு அதிகம். காரணம், அது ஊர்ப்பக்கத்தில் அதிகமாக கிடைக்காது. பெர்க்லீ சிகரெட் அட்டைக்கும் இதே கதைதான். ஈரோடு CSI ஆஸ்பத்திரி போய் திரும்பி வரும்போது வெட்டுப்புலியை ரோட்டில் பொறுக்கிய நினைவு. வெட்டுப்புலி ஒரு உண்மை சம்பவமாம். திருவள்ளூர் பூண்டி ஏரி அருகே நடந்த கதை. அதையும், தமிழ் சினிமாவையும், திராவிட இயக்கத்தையும் வளைத்துக் கட்டியதுதான் இந்த நாவல்.



தசரத ரெட்டி, லட்சுமண ரெட்டி, ருத்ரா ரெட்டி, சின்னா ரெட்டி, குணவதி - வெட்டுப்புலி கிளை. ஆறுமுக முதலி மற்றும் சிவகுரு சினிமாவுக்கான கிளை. கணேசன், மகன் நடேசன் மற்றும் தியாகராசன் திராவிடர் கிளை. ஆறுமுக முதலி சின்னா ரெட்டியிடம் மூங்கில் வாங்க பேசுவதும், லட்சுமண ரெட்டி வீட்டை விட்டு ஒடிப்போய் ஆறுமுக முதலி தியேட்டரில் வேலை செய்வதும் ஒரு முடிச்சு. ஆறுமுக முதலியும், கணேசனும் அண்ணன் தம்பிகள்.

இந்த நாவலின் பலமே நாம் அதிகம் மேலோட்டமாக கேட்ட கதையை அந்த காலகட்டத்தில் எப்படி பார்த்திருப்பார்கள் என அடுக்கிக் கொண்டே வருவதுதான். ஆசிரியர் நிறைய உழைத்திருக்கிறார். 30களில் மெதுவாக ஆரம்பிக்கும் நாவல் எடுத்த உடனே குதிரையில் பறக்கிறது. ஆசிரியர் மிக நிதானமாக பல செய்திகளை கதை மாந்தர்கள் வழியாக சொல்கிறார்.

முப்பதுகளில் இனாம் அகரத்தில் (காரணப் பெயர்) ஏழெட்டு ஐயர் வீடுகள் மட்டுமே. மீதி எல்லாம் டெல்லி, பாம்பே, கல்கத்தா என அரசாங்க வேலைகளில். நிலத்தை சமன் செய்பவன் ஒருத்தன், உழுபவன் ஒருத்தன், விளைச்சலில் பாதி ஜமீனுக்கு, இதற்கு அப்புறம் வெள்ளைக்காரன்.

30களின் உப்புமா மற்றூ காபி பற்றி ஒரு பேச்சு மிக அருமை. பீட்சா மற்றும் பர்கர் வந்த போதும் சீ இந்தப் பழம் புளிக்கும் என சொல்லாமல் லைன் கட்டி நிற்பது தலைமுறை மாற்றம்.  அதே மாதிரியான ஒரு துண்டு 60-70 சுயமரியாதை திருமணத்தின் போது மக்கள் எல்லம் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது. எல்லோரும் சமம் என தசரத ரெட்டியும் விசாலட்சியும் பேசுவதும். 60 களில் தியாகராஜனும் ஹேமலாதாவும் பேசுவதும் வருடம்தான் வேறே ஒழிய புதிதான ஒன்றை மக்கள் ஒரே மாதிரிதான். பார்க்கிறார்கள்.

சுதந்தரம் பற்றிய 30களில் மணி ஐயர் கருத்தாக எழுதியது மிகை கிடையாது. எங்க ஏரியாவில் விடுதலைப் போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறைவு (0 என எழுத முடியவில்லை, இந்த ஆராய்ச்சிக்கு நிறைய உழைப்பு தேவை).  கதைகள் கூட கேட்டது கிடையாது. என் அம்மாவின் பாட்டி கட்டிக் கொடுத்த பொங்கலூரிலிருந்து அவர் அப்பா ஊரான ஊத்துக்குளி ஜேடர்பாளையம் வரை நடந்து வந்தது, ராகி/கம்பு களி, பஞ்சம், பட்டினி பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கும். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும், 1930 அமெரிக்க கிரேட் டிப்ரஷன் பற்றி விலாவாரியாக படித்து வைத்திருக்கிறோம் நாம். கதையில் கூட சிறுத்தை வெட்டப்பட்டது உண்மைதான், ஆனால் திரைக்கதை ஊருக்கு ஊர் ஆளுக்கு ஆள் மாறுகிறது.

லட்சுமண ரெட்டிதான் கதையின் முதலில் குதிரையேறியவர். ஹீரோ என்றால் காதல் இல்லாமலா? இலக்கணப்படி அவருக்கும் குணவதி மேல் காதல். பூண்டி ஏரி வெட்டி கரையெழுப்பும் கூட்டத்தில் ஒரு தலைக் காதலும் வளர்கிறது. சாதியின் பெயரால் காதல் சிதைக்கப்படும் போது சாதியின் மேல் கோபம் கொண்டு அதை மாற்ற நினைக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சி திகவாகவும், திக திமுகவாகவும் வளர்ந்த வராலறு நன்கு எழுதப்பட்டுள்ளது. இதை கதை, பொய் என பலரும் சொல்லலாம், ஆனால் ஒரு கோர்வையாக ஒரு சம்பவத்தின் ஒரு பக்கத்தை தொகுத்துள்ளது. பெரியார் சாக இருக்கும் நேரத்தில் சௌந்திரபாண்டிய நாடார் ‘நாடார் குல மித்ரன்’ என்ற பத்திரிக்கையை லட்சுமண ரெட்டிக்கு வாசிப்பதாக ஒரு பகுதி. பெரியார் சொன்னதெல்லாம் பார்ப்பனரை எதிர்ப்பதுதான் மற்ற சாதி எல்லாம் அப்படியே இருக்கிறதே என்பதாக ஆசிரியர் ஒரு சுழட்டு சுழட்டி விட்டுப் போகிறார்.

லட்சுமண ரெட்டி சமத்துவத்தை காப்பதாக சொல்லி செய்யும் செயல்கள், ஊருக்குள் அவருக்கு இருக்கும் மரியாதை எல்லாம் அவரளவில் அதில் வெற்றி பெற்றதாக தோன்றுகிறது. 30, 40, 50, 60, 70 என விலாவரியாக போகும் நூல் ஒரு நல்ல வரலாற்று அனுபவத்தை தருகிறது. பாடப் புத்தகங்களில் உள்ள வரலாறெல்லாம் அவரவர் போக்குக்கு வளைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதால் இது ஒன்றும் பெரிய தீங்கு விளைவிக்கும் செயல் இல்லை.

80, 90, 2000 just like that முடித்துக் கொண்டது பெரிய ஏமாற்றம். சற்று கற்பனை கூட குறைய 80, 90களை எழுதி இருந்தால் எந்த கழகம் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த புத்தகம் வெளி வந்து இருக்காதோ என்னவோ?  தலைவரின் மகன் காரில் அழகான பெண்களை தூக்கிச் செல்வதாக ஒரு வரி வருகிறது. இது கற்பனையோ நிஜமோ தெரியாது, சென்னையிலிருந்து 500 கீமீ தொலைவில் நானும் கேட்டிருக்கிறேன். இது ஒன்றுதான் சர்ச்சைக்குரிய பகுதி.

கழகக் கருதுக்களில் ஈர்க்கப் படவேண்டுமானால் கழகக் கருத்துக்களில் மூழ்கி திளைத்தவர், ஒரு முன்னோடி இருக்க வேண்டும். நடேசன் மற்றூம் தியாகராசன் அவர்கள் அப்பாவையும், நடராசன் அவர் மாமா பாலுவையும் பின்பற்றி நடக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரி திராவிடர் இயக்கத்தை முன்னெடுத்து வள்லர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருப்பதை இந்த நாவலும் பதிவு செய்திருக்கிறது. லட்சுமண ரெட்டியின் மகன் நடராசனுக்கும், கிருஷ்ணப்ப்ரியாவுக்கும் கன்னிமாரா நூலக வாசலில் நடக்கும் உரையாடல் திராவிட பார்ப்பனீய வேறுபாட்டுக்கு இந்த புத்தகத்தில் வரும் மற்றொரு சிறப்பான பகுதி. 99% மக்களை 1%  மக்கள் எப்படி ஆட்டுவிக்க முடியும் என்ற கேள்வியும் பதிலும். நீ என்னவாக னைக்கிறாயோ அதுவாக இங்கே இருக்கிறது. இரண்டு பக்கத்திலும் உக்கார்ந்து ரசித்துப் படித்தேன்.


திராவிட கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய இரண்டு குடும்பங்கள் சொல்லொனா துன்பத்துக்கு ஆளான மாதிரியும், மிதமாக பின்பற்றிய ஒரு குடும்பம் கடைசி மகனால் சீரழிந்ததாகவும்,  இவர்கள் யார் மேல் வன்மம் கொண்டு திரிந்தார்களோ அவர்கள் சேமமாக இருப்பதாகவும் கதை முடிகிறது. தினமணியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் கொள்கைக்காக வண்ணத்திரையில் தன் மகன் ரவியை சேரச் சொன்னான் நடேசன் என திராவிட கொள்கை பிடிப்பைப் பற்றி முகத்தில் அறைந்திருக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என யாரும் சிந்திக்கும் மனநிலையிலும் கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் வழி வழியாக தொங்கிக் கொண்டு இருக்கிறோமோ என சிந்திக்க வைக்கிறார். தமிழ்மகன் தினமணியில் மூத்த உதவி ஆசிரியர்.

வரலாறு திரித்து எழுதப்படும்போது 2 -3 தலைமுறை உண்மையான நோக்கத்தை அடையாளம் கொள்ளாமல் வேறு பாதையில் செல்லும் அபாயம் இருப்பது உண்மைதான். பெரியார் காங்கிரஸை விட்டு வெளியில் வந்ததும், வவேசு ஐயரின் குருகுலக் கல்வியும் வரலாறு. இந்தமாதிரியான அனுபவம் இருக்கும் ஒவ்வொருவரும் தான் திராவிடக் கொள்கையை பின்பற்ற வேண்டுமென்றால் பெரியார் யாருக்கு எதிராக கருத்துகள் சொன்னாரோ அவர்கள் பெரியாரின் பெண் விடுதலை கருத்தை மிகச் சரியாக பின்பற்றியிருக்கிறார்கள், அரிசனங்கள் இன்னும் அறியாத சனங்களாக இருக்கும் வரை இதே காட்சி தொடரும், பெரியார் உயிரோடிருந்தால் தமிழர்களை நோக்கி சத்தம் போட்டிருப்பார் என நறுக் வசனங்கள்.

வெங்கட் சுவாமிநாதனின் வெட்டுப்புலி விமர்சனமும் அதற்கான கேள்விகள்/பதில்கள்
http://www.tamilhindu.com/2011/09/tamilmagans-vettupuli-book-review/

Thursday, January 16, 2014

எட்றா வண்டியெ – வா.மு.கோமு

நவம்பர் 2008ல் கடைசியாக இந்த லிங்கை தொட்டது. அவ்வப்பொழுது எழுச்சி விழா காணுங்கள் என பல மொழிகளில் ஒரே கருத்தாக பேசுபவர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட பதிவில் தொடர்ந்து ஆடிக்கொரு தரமும் அமாவாசைக்கு ஒரு தரமும் மழை மாதிரி வந்து விட்டு போவார்கள். காலம்தான் எவ்வளவு வலிமையானாது? நேற்று உயிரானது இன்றைக்கு கால் தூசிக்கும் இன்னும் கீழே. வேலை வேலை என்று அப்படியே பறந்து பரந்து கிடந்தாயிற்று. குடும்பமும் குட்டியும் ஆன பிறகு விட்டத்தை பார்த்துக் கொண்டு உட்கார எல்லாம் நேரம் இல்லை. தெரு விளக்கு வெளிச்சத்தில் 10-11 மணி வரை அரட்டை அடிப்பதெல்லாம் கானல்தான். சும்மா கிடந்ததை சுத்தம் செய்து புலம்பலுக்கும், அவ்வப்போது அலும்புகளுக்கும் வேலை கொடுக்கலாம், இனி ஸ்டார்ட் மூசிக்!!!

புத்தாண்டு அற்புதமாக 10 புத்தங்களுடன் ஆரம்பித்தாயிற்று.  ஒரு முன் கதை சுருக்கம்; வா மு கோமுன்னா கதை கோக்குமாக்கா இருக்கும் என நினைத்துக் கொண்டு இருந்தவனை பேஸ்புக்கில் வா மணிகண்டன் போகிற போக்கில் அடிச்சு விடாதீங்க படிச்சுட்டு பேசுங்கன்னு லெப்ட்ல ஒன்னு ரைட்ல ஒன்னு விட்டார். அடிபட்ட சிங்கமாய் வலிக்காத மாதிரியே ஒரு புக் வாங்கித்தான் பார்க்கலாமே என தேடிய போது கிடைத்த முதல் தலைப்பு இது. 




எட்றா வண்டியெ - படையப்பா படத்தில் ஒரு மிக முக்கியமான காட்சிக்கு முன்னாடி இதைச் சொல்லி ரஜினி சுருட்டை பற்ற வைத்துக் கொண்டே நடப்பார். இதிலும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு நேரத்தில் இந்த வசனம். மூங்கில் பாளையம் மண் ரோடில் ஓட ஆரம்பிக்கும் வண்டி விஜயமங்கலம் பைபாஸ் வழியாக வேகமெடுக்கிறது.

இந்தக் கதையில் வரும் அத்தனை பேரையும் ஏதோ ஒரு தருணத்தில் கூட அமர்ந்து பார்த்த நினைவு. மூங்கில்பாளையம், விஜயமங்கலம், கள்ளியம்புதூர், கிணிப்பாளையம், ஆயிகவுண்டன் பாளையம், சீனாபுரம், பெருந்துறை என சின்ன வயதில் காடு காடாய் சில சமயம் காலில் செருப்பு கூட இல்லாமல் இட்டேரி இட்டேரியாய் சுத்தி வந்திருக்கிறேன். என் ஊர் மற்றும் என் மக்கள். இது ஒரு மெகா காரணம். புத்தகத்தில் பக்கத்து ஊர் பேரெல்லாம் பார்க்க ஒரே ஆனந்தம். அடுத்த முறை எங்க ஊர் பேர் வருதான்னு எழுத்தாளர் கிட்ட கேட்க வேண்டும்.

கிறுக்கு (சின்ன) கவுண்டிச்சி சரோஜாவாய் ஒரு பத்து பேராவது கண் முன் வந்து போனார்கள். 6 மாதம் வரை கர்ப்பம் மறைத்தவள், மூன்றாவது மனைவியாகி 45 வயது ஆளுடன் ஒடியவள், ஊரை விட்டு ஓடிப் போய் மாட்டிக் கொண்டு அந்த இரவே ஒரு தியாகிக்கு மனைவியானவள் என வெரைட்டியாக வந்து போனார்கள். பங்காளிகளுக்குள் ஆயிரத்தி ஒன்று கூட இருக்கும். ஒரு ஞாயிறு மதியம் சரக்கு அதிகம் போனால் மண்டை உடைந்து கட்டிய துணிமணி கிழிந்து பெருந்துறை போலிஸ் ஸ்டேசனுக்கும், சுந்தர்ராஜ் ஆஸ்பத்திரிக்கும் போய் வந்து லீவு நாள் சுபமாய் முடியும். ஆனால் பிரச்சினை என்று கண்ணை கசக்கி வீட்டில் போய் நின்றால் எட்றா வண்டியெதான். எங்கிருந்து வருமோ பாசம்; ஒத்தைக்கு ஒத்தையெல்லாம் இல்லை, லாரி வைத்து ஆள்கூட்டிப்போய் அடித்து விட்டு வருவார்கள். அப்படியே இயல்பாய் கதைக்குள் போய் உக்கார்ந்து  சுகமாய் வேடிக்கை பார்த்த அனுபவம். 

சாமிநாதன் மாதிரி, சுப்பன் மாதிரி அறியாத சனங்கள் ஏராளம். எது சொன்னாலும் நம்பும் அப்பாவிகள், கொலை கூட தற்கொலையாய்தான் தெரியும்.  உபத்திரவத்தையும் ஆனந்ததையும் ஒரே மாதிரிதான் பார்ப்பார்கள். 70 ரூபாய் குவார்ட்டர்தான் கொண்டாட்டத்துக்கும், அதே குவார்ட்டர்தான் குமுறியழுவதற்கும். 

விவசாயம் மட்டுமே பார்த்து வந்த ஊரில் கைத்தறி வந்தது. ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை. விவசாயம் பார்த்தவர்கள் காட்டின் ஓரத்தில் தறிக்குடோன் கட்டிக் கொண்டார்கள். பரம்பரை பரம்பரையாக பண்ணையம் போனவர்கள் விசைத்தறி வந்ததும் தறி குடோனுக்கு மாறினார்கள். அப்போதும் மொழி, பழக்க வழக்கங்களில் அவ்வளவு பெரிய மாறுதல் இல்லை, அதே பண்ணையத்தில் வேறு வேலை அவ்வளவுதான். சிப்காட்டும், பனியன் கம்பெனியும் வந்ததற்கு அப்புறம் ஒரு பெரிய வளர் சிதை மாற்றம் பெருந்துறை வட்டாரத்தில். வெளியூர்காரர்கள் பேசுவதை பார்த்து அதே மாதிரி பேசுவது, லுங்கியிலிருந்து ஜீன்ஸ், TVS லிருந்து கியர் வண்டி, தாவணியிலிருந்து சுடிதார் என வேறு முலாம் பூசிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். கெத்து காட்டுவதற்கும், ரப்பு பேசுவதற்கும் மட்டும் கொங்கு மொழி புழக்கத்தில். சாமிநாதன் மற்றும் ராஜேந்திரன் மற்றவர்களிடம் பேசும் போதும் பிரியாவுடனும் மல்லிகாவுடன் பேசும் போதும் உணர முடியும்.

செல்போன் வந்து உருப்பட்டது ஒன்றையும் காணோம், உருப்படியானதுதான் நிறைய. அப்படி என்னாதான் மணிக்கணக்கில் கொஞ்சுவாங்களோ என்பதற்கான பக்கங்கள் இதில் கொஞ்சம் அதிகம். எழுத்தாளரின் நோக்கமே அந்த கிரகத்தை நீங்களும் அனுபவியுங்கள் என்பதாகத்தான் இருக்கும். காதலர்களின் பரிசுப் பொருளெல்லாம் சிரிக்கும் படியாக இருக்கும், செல்போன் ரீசார்ஜ் தான் இப்போ டாப். 

சரோஜா அக்கான்னு ஒரு கேரக்டர். எதற்கும் பயப்படாத, எல்லா விசயத்துக்கும் முன்னாடி நிற்கும் ஆள். இந்த கேரக்டரை வைத்தே இன்னொரு 100 பக்கம் எழுதும் அளவுக்கு போக்குவரத்து அதிகம். அளவாய், உப்பு மாதிரி தேவையான அளவுக்கு வருகிறது

கட்டம் சரியில்லாமல் போனால் எதுவும் நடக்கும் என்பது சாமிநாதன் கதையில் 100% உண்மை. கல்யாணம் பண்ணியவளை ஒரு நிமிட வீராப்பில் ஒதுக்குவது, விருந்துக்கு போன ஊரில் சலம்பி விட்டு வருவது, எஸ்கேப்பாக உதவப் போய் கோமணம் அவுருவது என தொட்டதெல்லாம் நாசமாய் போகிறது. இது என்னை நைநை என இரண்டு நாள் படுத்திவிட்டது. நானும் இரண்டு நாளாய் பார்க்கறேன் ஊர்ல பேசிட்டு இருக்கறமாதிரியே பேசிட்டு இருக்க, என்ன ஆச்சு என இல்லாள் கேட்டதும் பாரத்தை இறக்கி விட்டு 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினத்தை எடுத்தேன்.

அலங்காரம், அலட்டல் இல்லாமல் எங்க ஊர் எகத்தாளம் மற்றும் குசும்புடன் ஒரு நாவல் படிக்க வேண்டுமானால் எட்றா வண்டியெ...