Wednesday, September 27, 2006

தென்றல் வந்து தீண்டும் போது

நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...

நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.

கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.

கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...

http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

Saturday, September 23, 2006

ஏன்? எதற்கு? எப்படி???-2

Part 1

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன். இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?

2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே, இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா?

3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே, அது ஏன்?

4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே, அது ஏன்?

5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?

6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே, உண்மையா அதை படிக்கறீங்களா, இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா?

7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???

8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே, தனியா கோர்ஸ் போவீங்களா???

9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே, நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா?

10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே, இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா?

பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப்!!!

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!

தினமும் இங்க எட்டிப் பார்த்துட்டு போற 53 நல்ல உள்ளங்களே,

இப்படி இருந்த நான்



இப்படி ஆயிட்டேன்:-(


திரும்ப பழையபடி திரும்ப எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை. அதுவரை நீங்கெல்லாம் சந்தோஷமா இருங்க...

Monday, September 18, 2006

ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...

மகன்: ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?

அம்மா: இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?

மகன்: 3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???

அம்மா: அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?

மகன்: வீட்லதான்மா இருக்கேன். அக்கா, சித்தி, மாமா எல்லோருக்கும் போன் பண்ணிட்டேன். இன்னைக்கு நீதான் கடைசி. அப்புறம் என்ன நடக்குது அங்க?

அம்மா:இங்க ஒன்னும் இல்ல, திருப்பூர் போய்ட்டு வந்தேன். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா. உன்னைய பார்க்கணும்னார், ஒரு தடவைதான் அங்க போன் பண்ணேன்டா???

மகன்: முந்தா நேத்து மாமா செல்லுக்கு பண்ணுனேன்மா, அப்போ அவர் வெளிய இருந்தார். சரி, இன்னைக்கு பண்ணறேன்.

அம்மா: ரேவதி வந்து 2000 பணம் வாங்கிட்டு போனா. அவ குழந்தைக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

மகன்: ஏம்மா, போன மாசம் கூட பணம் குடுத்ததா சொன்ன? இப்படியே வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் குடுத்துட்டே இருக்கே? உன்னைய எல்லோரும் நல்லா ஏமாத்துறாங்க...

அம்மா: போடா, உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான். நானும் ரெண்டு பேரை பெத்து வளர்த்திருக்கேன், எனக்கு தெரியும்டா... அந்த குழந்தை நல்லா பெருசாச்சுன்னா அந்த புண்ணியம் எல்லாம் யாருக்கு??? எல்லாம் உங்களுக்குத்தான்...

மகன்: இதையே நீயும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கே, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல.

அம்மா: சரி, நீ என்ன பண்ணுன இந்த வாரம்?

மகன்: ஆபிஸ்... வீடு... இப்படியே 5 தடவை சொல்லு. அப்புறம் நேத்து முழுசா தூங்கினேன். அவ்வளவுதான்.

அம்மா: அதுக்கு நீ பெங்களூரிலயே இருந்துருக்கலாம், வாரா வாரம் ஊருக்காவது வந்துட்டு போயிட்டு இருப்பே...

மகன்: சரிம்ம்ம்ம்ம்மா..... வேற ஏதாவது சொல்லு.

அம்மா: சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன?

மகன்: நானே சமைச்சுக்கறேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உன்னோட அல்சர் இப்போ எப்படி இருக்கு?

அம்மா: அதை விடு, அது அப்படியேதான் இருக்கு. அத்தை சந்தியாவுக்கு 10 பவுன்ல கல்லு வைச்ச ஆரம் எடுத்திருக்கா. நானும் கூடப் போயிருந்தேன். அக்காவுக்குத்தான் அது மாதிரி ஒன்னு வாங்கி குடேன்டா...

மகன்: ஏம்மா 6 மாசம் முன்னாடிதான் அவ கிட்ட அது ஒன்னுதான் இல்லைன்னு வாங்கி குடுத்த... உங்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்.

அம்மா: டேய், அது உங்க அக்கா மகளுக்குடா...

மகன்: என்னது, அந்த நண்டுக்கா? அதைப் போட்டுட்டு நடந்தா அவ கீழ விழுந்துடுவாம்மா... மொத்தத்துல உனக்கு ஏதாவது மகளுக்கு சீதனமா குடுத்துடே இருக்கணும்... நீ நடத்து...

அம்மா: பையனுக்கு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்ன்னு கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.

மகன்: நீதான் ரெடிமேடா வெச்சிருப்பியே, என் பையன் இன்னும் குழந்தை மாதிரின்னு... அதையே சொல்ல வேண்டியதுதானே?

அம்மா: குரு பலன் 29 வரைக்கும் இல்லை, அப்புறந்தான் பார்க்கணும்ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் நம்பற மாதிரி இல்லை. பையனே பார்த்துட்டு இருக்கான்னு சொல்லிட்டேன்.. இப்போ பேச்சே இல்லை. சுதந்திரமா வெளிய போயிட்டு வர முடியுது.

மகன்: நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.

அம்மா:(சிரிப்புடன்)எல்லாம் நல்லபடியா நடக்கும். எம் பையனைப் பத்தி எனக்கு தெரியாதா?

மகன்: சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...

அம்மா:என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?

மகன்: இல்லம்மா... எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசிக்கிறேன்.

அம்மா: எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தைதான் பேசேன். ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?

மகன்: வச்சுர்றேன்...

Sunday, September 10, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

இரவு மணி 8. பஸ்ஸிலிருந்து இறங்கி 10 நிமிடம் வீட்டுக்கு நடக்க வேண்டும். வழக்கம் போல் விளக்குக் கம்பம் விளக்கில்லாமல் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. போன வாரம் பெய்த மழையில் ரோடு எது குழி எது என தெரியாமால் எல்லா இடமும் குழியாக இருந்தது. என்னிடமிருப்பதோ நம்பரெல்லாம் அழிந்து போன ஒரு பழைய நோக்கியா 1108, அதிலிருக்கும் வெளிச்சத்தை வைத்து சமாளித்துக் கொண்டே போய் விடலாம். "ஏன்டா, அந்த போனைத்தான் தூக்கி போட்டுட்டு வேற வாங்குறது? இன்னும் அதை கட்டிட்டு அழுதுட்டு இருக்கே..." என யாராவது திட்டினால் "இதை வாங்கி அவ ஒரு தடவை பேசினா... நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன்" என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.

இருட்டாய் வேறு இருக்கிறது, துணைக்கு யாராவது வந்தால் பேசிட்டே போயிடலாம். இல்லை, யாராவது வந்தால் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? என கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். என்னைத் தவிர ரோட்டில் வேறு யாரும் இல்லை. யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான். நான் எப்போ மிஸ்ஸுடு கால் விட்டாலும் பொறுப்பாய் போன் பண்ணும் சீனிக்கு போன் பண்ணினேன். ஒன்னு, ரெண்டு என எண்ணி மூனாவது ரிங்கில் கட் பண்ணினேன். ஒரு வண்டி மெயின் ரோடில் இருந்து நான் இருந்த ரோட்டுக்கு திரும்பியதை பார்த்ததும் நான் இன்னும் 2 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என என் உள்ளுணர்வு சொல்லியது.

நான் கையை ஆட்டி அந்த வண்டியை நிறுத்துவதற்க்கும் சீனியின் கால் வருவதற்க்கும் சரியாய் இருந்தது. "சீனி, ஒரு முக்கியாமானவங்க வந்திருக்காங்க, நானே உனக்கு அப்புறம் போன் பண்ணரேன்" என போனை கட் செய்தேன். நிமிர்ந்து பார்த்தால் வண்டியில் 2 பேர் உக்கார்ந்திருந்தார்கள். அடடா, கால் பண்ணின சீனியையும் கட் பண்ணியாச்சு, இனி வேற யாரையாவதுதான் கூப்பிட வேண்டும் என நடக்க ஆரம்பித்ததும் "சார், மலர் ஹாஸ்பிடல் எப்படி போகணும்?" என வண்டியிலிருந்தவன் கேட்டான். "அதுக்கு மெயின் ரோட்டில் போகணும், 10 கிலோ மீட்டர் வரும்" என பேச்சை முடித்தேன்.

"இல்லைங்க, பிரெண்டுக்கு அடிபட்டிருக்குங்க. இதுல போனா சீக்கிரம் போகலாம்ன்னு சொன்னாங்க ,அதான் வந்தோம்..." என பரிதாபமாக சொன்னான். நான் இந்த ஏரியாவிலதான் ரொம்ப நாளா இருக்கேன், அப்படியெல்லாம் ஒரு வழியும் கிடையாது. பையன் தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்துட்டானா, இல்லை..." என நான் எனக்கே உண்டான ஆர்வக் கோளாறில் இழுத்த போது "அவன் கூட யாரும் இல்லைங்க, நாங்க போய் சேர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் பிடிக்கும். என் போன்ல பேலன்ஸ் இல்லை,பக்கத்துலையும் ஒரு பூத் இல்லை, உங்க போனை குடுத்தீங்கன்னா ஒரே ஒரு கால் பண்ணிட்டு குடுத்திடுவேன்" என பின்னால் இருந்தவன் கேட்டான்.

"ஆபத்துக்கு உதாவாதவன் எல்லாம் மனுஷனே இல்லை, இந்தாங்க போன்" என பின்னாலிருந்தவனிடம் குடுத்தேன். "டேய், வண்டியை ஓரமா நிறுத்து. பேசிட்டு அப்புறம் போலாம்" என பின்னாலிருந்தவன் சொன்னவுடன் ஒரு யு டர்ன் எடுத்து மெயின் ரோட்டைப் பார்த்து வண்டியை நிறுத்துவது மாதிரி நிறுத்தி வண்டியை விரட்டி சிட்டாய் பறந்தான். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் அவர்கள் மெயின் ரோட்டிற்க்கு அருகில் இருந்தார்கள். என் போன், பேலன்ஸ் 200 ரூபாய் என் கண் முன்னே காணாமல் போய் கொண்டிருந்தது. மெயின் ரோட்டின் விளக்கு வெளிச்சத்தை தொட்டவுடன் வண்டி திரும்பவும் என்னைப் பார்த்து திரும்பியது.

எனக்கு தெளிவாக தெரிந்தது மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகப் போவது நான்தான் என்று. 10 காசுக்கு தேறாத போனுக்கு எங்களை இவ்வளவு பொய் சொல்ல வெச்சுட்டியேன்னு பைக் பார்ட்டிகள் வந்து மிதிக்கப் போறாங்கன்னு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். என் உள்ளுணர்வு சொல்லியபடி 2வது நிமிடத்தில் வீட்டிலிருந்தேன்.

Saturday, September 09, 2006

ஒரு பயணக் குறிப்பு

3 நாள் கண்காணாத எடத்துக்குப் போய் தொலைஞ்சு போயிட வேணும்ங்கற எண்ணம் எல்லோருக்கும் இருந்துட்டே இருந்தது. ஒருத்தன்தான் வண்டி ஒட்டும் முடிவில் இருந்தோம். ஆனால கார் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் SUV (SUV க்கும் எங்களுக்குமான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை) மட்டுந்தான் என்று சொன்னதும் பாதுகாப்பு கருதி என்னையும் டிரைவராக சேர்த்து வண்டியை வாடைகைக்கு எடுத்தோம்.

நைட் ஒரு மணிக்கு புறப்பட்டு கிண்டல், கேலி, குத்துப் பாட்டு என கீரின் பே தாண்டியதும் வண்டி நான் ஓட்ட ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கப்புறம் வண்டி ஓட்டுவதால் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டினேன்.

020 Munising 009

காலங்கார்த்தால போட்டோ எடுக்குறோம்ன்னு வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுத்து வழியை தவற விட்டு அப்புறம் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தோம். 54 மைலுக்கு ஒரே நேர்கோடாய் ஒரு ரோடு (H13).

020 Munising 028

Munising போய் சேர்ந்ததும் முதலில் முகத்தில் அறைந்தது நீர்தான். அழுகின முட்டையை யாரோ தண்ணியில் கலந்து விட்டது மாதிரியான வாசம். அழுது கொண்டே குளித்து முடித்தேன். உலகிலேயே மிகப் பெரிய தூய நீர் ஏரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சுத்தமான நீர் இல்லை என்பது அமெரிக்காவிலும் இருக்கிறது. படம் போடும் பாறைகளைப்(Pictured Rocks) பார்த்து விட்டு திரும்பும்போது ஒரு உலக சாதனை சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருந்தது. 50 நிமிடங்களில் 150 போட்டோ (ஒரு நிமிஷத்துக்கு 3) என அடித்து தள்ளிவிட்டு அப்பாடா என உக்கார்ந்தோம்.

020 Munising 154

மதியம் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு போனது Au Sable Light Station. இதுக்கு ஒரு மைல் நடக்க வேண்டும். போகும் வழியில் தரகரிடம் குடுக்க ரெண்டு மூணு போட்டோ எடுத்துட்டு கலங்கரை விளக்குக்குப் போனால் மேலே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேர்ல பார்த்ததை விட இந்த போட்டோல இன்னும் நல்லா வந்திருக்கு.

020 Munising 207

அப்புறம் காட்டுப் பாதையில் போய் சேர்ந்த இடம் Log Slide. மக்கள் அந்த காலத்துல மரத்தை வெட்டி வெட்டி இந்த வழியாத்தான் அமெரிக்காவின் மத்த பாகங்களுக்கு கொண்டு போனாங்க. இயற்கையான ஒரு அமைப்பை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி காடுகளையெல்லாம் மொட்டையடிச்சாங்க. என்ன சந்தோஷம்னா காடுகள் இன்னமும் அப்படியேதான் இருக்கு.

020 Munising 227

Log Slide ல இருந்துட்டே Grand Sable Banks and Dunes பார்த்தோம். எங்க ஊரு ஏரியில இந்த பக்கமிருந்து கத்துன அந்த பக்கம் கேக்கும். ஆனால், அவ்வளவு பெரிய ஏரி, அதுக்கு பக்கத்தில் மணல் மேடு, அடர்ந்த காடு ன்னு விசித்திரமா இருந்தது லேக் சுப்பிரீயர்.

020 Munising 220

அடுத்த பார்த்தது Sable Falls. என்ன இருந்தாலும் குற்றாலம், அதிரப்பள்ளி அருவி மாதிரி வருமா? னெல்லாம் ஒப்பீடு செய்யாமல் அழகை அனுபவிக்க மட்டும் செய்தோம்.

Munising 153

எட்டு மணிக்கு சூரியன் உள்ளே போய் வானத்தில் கலர் கோலம் மட்டும் மீதி இருந்தது. அதையும் கேமராவில் அடைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

Munising 169

விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு.

020 Munising 251

காலையில் எழுந்து Mackinac Island போனோம். ஒரு சாதரண தீவை ரொம்ப ஏத்தி விட்டிருக்காங்க. ஒரு நாள் ஓடுனதே தெரியவில்லை.

020 Munising 401

மூனாவது நாள் திரும்ப Munising. Wagner falls, Munising Falls, Miners Falls பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பினோம்.

Munising 261

Munising 270

020 Munising 4532

எல்லோரும் எடுத்த 850 போட்டோல எதைப் போடுவது எதை போட வேண்டாம் என்பதில்தான் குழப்பம் வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு இதைப் போட...

செப்டெம்பர் 10, 2006 ஞாயிறு:

நெட்டில் இருந்து சுட்டதா என சூடாக சந்தேகம் வரும் என்பதால் என் படம் ஒன்னையும் வெட்டிப்பயலின் வார்த்தைக்காக இணைக்கிறேன்.

020 Munising 4451

Wednesday, September 06, 2006

ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!

"படம் போடும் பாறைகள் (Pictured Rocks, Munising, MI, USA) - ஒரு பாமரனின் பயணக் குறிப்பு"ன்னு எழுதிட்டு இருந்தேன்.தமிழோவியத்தில் இந்த வாரம் என்னா இருக்குன்ன்னு பார்த்தா என் கதை!!!

இந்த கதை எப்படி தமிழோவியத்துக்குப் போச்சு அப்படிங்கறதே ஒரு பெரிய கதை... நிலா உறவுன்னு தேன்கூடு போட்டிக்கு தலைப்பு குடுத்தாலும் குடுத்தாங்க நானும் ஒரு கதையை நாலு மணி நேரம் உக்கார்ந்து ரெடி பண்ணி பிளாக்ல போட்டு நண்பன் ஒருத்தன் கிட்ட எப்படிடா இருக்குன்னு கேட்டா "இதை அனுப்ப போறீயா?" ன்னு கேட்டான். ரைட்டோய், அவ்வளவுதான் நம்ம கதைக்கு ஆயுசுன்னு உடனே தூக்கி குப்பையில போட்டுட்டு வேலையப் பார்த்துட்டு இருந்தேன்.

என்ன இருந்தாலும் நானே எழுதுனது, பத்தோட பதினொன்னா இதுவும் என் பிளாக்கை அலங்கரிக்கட்டும்ன்னு ஒரு வாரம் கழித்து குப்பைத் தொட்டியில் இருந்து தூசி தட்டி எடுத்து போடலாம்னா அங்க பாபா எல்லோரையும் வரிசையா நிக்க வைச்சு லெப்ட், ரைட், மேல, கீழ ன்னு பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருந்தாரு... அவரு சொன்னதுக்கு அப்புறம்தான் என் கதையை படிச்சி பார்த்தேன் (நாங்கெல்லாம் எழுத மட்டுந்தான் செய்வோம், படிக்கறதுதான் உங்க தலையெழுத்து) அப்படியே கதிர் படம் மாதிரி இருந்தது. கதிர் படமாவது தியேட்டர் வரைக்கும் வரும், என் கதைக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. இதை மட்டும் போட்டோம் நம்ம கதைக்குத்தான் அவர் போடும் முதல் 0 ன்னு நினைச்சிட்டு (சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...) ன்னு திரும்ப வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

ஆடுன காலும் பாடுன வாயும் தான் சும்மா இருக்காதே... ஏதாவது இணைய இதழுக்கு அனுப்பி வைப்போம்ன்னு தமிழோவியத்துக்கு "வறுமையில் வாடும் புலவன் நான், ஏதாவது போட்டுக் குடுங்கன்னு" ரொம்ப டீசண்ட்டா பிச்சை எடுத்திருந்தேன். அவங்களும் பரிதாபப்பட்டு (இன்னமும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்னையும் எழுத்தாளராக்கிட்டாங்க... உங்க தலையெழுத்து, நான் என்னங்க பண்ண முடியும்???

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணி தள்ளிட்டாங்க. நான் வேற தனியா சொல்லணுமா என்ன??? இது நாங்க வேட்டையாடு விளையாடு படத்துக்கு போய் வந்த பயணக் கட்டுரை.

தமிழ் படம் எதுவும் எங்க ஊர்ல ரிலீஸ் பண்ண மாட்டாங்க (அருள் மட்டும் ஆச்சு, பாய்ஸ், விருமாண்டி ரெண்டும் பக்கத்து ஊர்ல ஆச்சு) நாங்க சிகாகோக்கு வண்டி கட்டிட்டு போய்த்தான் படம் பார்ப்போம். தமிழ் மக்கள் யாருக்கு நியூஸ் கிடைச்சாலும் உடனே கூட்டம் போட்டு யாரு கார்ல யாரு, எத்தனை மணி ஷோ ந்னு கிளம்பி போய்ட்டு நிதானமா ஊர் சுத்திட்டு வருவோம். இப்போ கூட்டம் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதானால தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு நாங்க நாலு பேரு கிளம்பறதா முடிவு பண்ணிட்டோம். ஒரு புது நண்பர் நான் வர்றப்ப மட்டும் உங்களோட வரட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டு நாங்க வண்டியை கிளப்பினோம்.

அந்த தியேட்டரில் அதுதான் நாங்க பார்க்கும் முதல் தமிழ் படம் அதனால வழி மாறிட கூடாதுன்னு உஷாரா ரோட்டையே பார்த்துட்டு இருந்ததுல பெருசா ஒன்னும் பேசிக்கவே இல்லை. தியேட்டரில நிறைய நம்மூர்காரங்களை பார்த்தவுடனே எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு கூட வந்த ஒரு பட்சி சிறகடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதை அமைதிப்படுத்தறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. தியேட்டரில் இருந்து சிவாவுக்கு ஃபோன் போட்டு படத்து வந்தால் சிகாகோவில் வலைப்பதிவர் மாநாடுன்னு ஒரு பதிவு போடலாம்னா அவர் வர முடியாத நிலைய சொன்னார்.

கூட்டத்துல அடிச்சு புடிச்சு உள்ள போயி உக்கார்ந்து படம் ஆரம்பிச்சது முதல் சின்ன சின்ன ஜோக்குகளை ரசிச்சுட்டும், கமெண்ட் அடிச்சிட்டும் விளையாட்ட போயிடுச்சு முதல் பாதி. பொண்ணு யாரு மாதிரி வேணும்ன்னு கேட்டா கமலினி மாதிரின்னு கமலினியைப் பார்த்த முதல் ஷாட்டிலேயே முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கதாநாயகியை பார்க்கும் போதும் நினைச்சுக்கறது, ம்ம்ம்ம்....... நீங்க இதை கண்டுக்காதீங்க. ஏன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்திருக்கும் என அமெரிக்கா தொடர்பான சில தேவையில்லாத காட்சிகளைப் பற்றி இடைவேளையில் ஒரு குட்டி விவாதம் பண்ணிட்டு ரெண்டாவது பாதி பார்க்க உக்கர்ந்த்தா அது கொஞ்சம் சோதனையாத்தான் இருந்தது.

பரவாயில்லை, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தால் அந்த புது நண்பர் வந்து சேர்ந்திருந்தார். எல்லோரடையும் அறிமுகப் படலம் முடிந்தவுடன் ரெண்டாவது பாதி உக்கார முடியலை என ஆரம்பித்து வைத்தார். காரில் அப்படியே ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொரு காட்சியாக எல்லோரும் அலசி காயப் போட்டோம். இந்த படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள், சப் டைட்டில் இருந்தாலும் மக்களை ரீச் ஆகாது. A சென்டர் மக்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும், கட்டாயம் அங்க ஒடும் என சொல்லி முடித்தார். பேசறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அவங்கவங்க மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருந்தப்போ என்னைய பார்த்து "உங்களுக்கு படம் புடிச்சிருக்கா?" ந்னு கேட்டார்.

நான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ என் மூளையில் ஒரு ஃபிளாஷ்... அப்போ நான் A சென்டரா??? என மனசுக்குள் நினைத்தது வாயிலும் வந்துருச்சு. பசங்க எல்லோரும் சிரிச்ச சிரிப்புக்கு புது நண்பருக்கு அர்த்தம் புரியலை. பாஸ், சந்துல அவன் ஊரை சிட்டின்னு சொல்லிக்கிறான். பாவம், அவந்தான் என்ன பண்ணுவான், இப்படியாவாது அவன் ஊரை சிட்டின்னு மாத்திக்கட்டும்ன்னாங்க... மனசுக்குள்ள மட்டும் சொல்லிருந்தா போன பதிவோட டைட்டிலை மனசுக்குள்ள சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாம நம்ம சொந்த ஊரு ரொம்ப மாறிடுச்சுன்னா நாம அன்னியப்பட்டு போயிடுவம்ல... எப்பவும் நாம் நினைக்கறதா நடக்குது????

மூணு நாளைக்கு லீவு... அடுத்ததும் பயணக் கட்டுரைதான்... லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன். மத்த நாலையும் ஏற்கனவே பார்த்தச்சு, இது ஒன்னுதான் பாக்கி...