Sunday, September 10, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

இரவு மணி 8. பஸ்ஸிலிருந்து இறங்கி 10 நிமிடம் வீட்டுக்கு நடக்க வேண்டும். வழக்கம் போல் விளக்குக் கம்பம் விளக்கில்லாமல் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. போன வாரம் பெய்த மழையில் ரோடு எது குழி எது என தெரியாமால் எல்லா இடமும் குழியாக இருந்தது. என்னிடமிருப்பதோ நம்பரெல்லாம் அழிந்து போன ஒரு பழைய நோக்கியா 1108, அதிலிருக்கும் வெளிச்சத்தை வைத்து சமாளித்துக் கொண்டே போய் விடலாம். "ஏன்டா, அந்த போனைத்தான் தூக்கி போட்டுட்டு வேற வாங்குறது? இன்னும் அதை கட்டிட்டு அழுதுட்டு இருக்கே..." என யாராவது திட்டினால் "இதை வாங்கி அவ ஒரு தடவை பேசினா... நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன்" என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.

இருட்டாய் வேறு இருக்கிறது, துணைக்கு யாராவது வந்தால் பேசிட்டே போயிடலாம். இல்லை, யாராவது வந்தால் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? என கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். என்னைத் தவிர ரோட்டில் வேறு யாரும் இல்லை. யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான். நான் எப்போ மிஸ்ஸுடு கால் விட்டாலும் பொறுப்பாய் போன் பண்ணும் சீனிக்கு போன் பண்ணினேன். ஒன்னு, ரெண்டு என எண்ணி மூனாவது ரிங்கில் கட் பண்ணினேன். ஒரு வண்டி மெயின் ரோடில் இருந்து நான் இருந்த ரோட்டுக்கு திரும்பியதை பார்த்ததும் நான் இன்னும் 2 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என என் உள்ளுணர்வு சொல்லியது.

நான் கையை ஆட்டி அந்த வண்டியை நிறுத்துவதற்க்கும் சீனியின் கால் வருவதற்க்கும் சரியாய் இருந்தது. "சீனி, ஒரு முக்கியாமானவங்க வந்திருக்காங்க, நானே உனக்கு அப்புறம் போன் பண்ணரேன்" என போனை கட் செய்தேன். நிமிர்ந்து பார்த்தால் வண்டியில் 2 பேர் உக்கார்ந்திருந்தார்கள். அடடா, கால் பண்ணின சீனியையும் கட் பண்ணியாச்சு, இனி வேற யாரையாவதுதான் கூப்பிட வேண்டும் என நடக்க ஆரம்பித்ததும் "சார், மலர் ஹாஸ்பிடல் எப்படி போகணும்?" என வண்டியிலிருந்தவன் கேட்டான். "அதுக்கு மெயின் ரோட்டில் போகணும், 10 கிலோ மீட்டர் வரும்" என பேச்சை முடித்தேன்.

"இல்லைங்க, பிரெண்டுக்கு அடிபட்டிருக்குங்க. இதுல போனா சீக்கிரம் போகலாம்ன்னு சொன்னாங்க ,அதான் வந்தோம்..." என பரிதாபமாக சொன்னான். நான் இந்த ஏரியாவிலதான் ரொம்ப நாளா இருக்கேன், அப்படியெல்லாம் ஒரு வழியும் கிடையாது. பையன் தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்துட்டானா, இல்லை..." என நான் எனக்கே உண்டான ஆர்வக் கோளாறில் இழுத்த போது "அவன் கூட யாரும் இல்லைங்க, நாங்க போய் சேர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் பிடிக்கும். என் போன்ல பேலன்ஸ் இல்லை,பக்கத்துலையும் ஒரு பூத் இல்லை, உங்க போனை குடுத்தீங்கன்னா ஒரே ஒரு கால் பண்ணிட்டு குடுத்திடுவேன்" என பின்னால் இருந்தவன் கேட்டான்.

"ஆபத்துக்கு உதாவாதவன் எல்லாம் மனுஷனே இல்லை, இந்தாங்க போன்" என பின்னாலிருந்தவனிடம் குடுத்தேன். "டேய், வண்டியை ஓரமா நிறுத்து. பேசிட்டு அப்புறம் போலாம்" என பின்னாலிருந்தவன் சொன்னவுடன் ஒரு யு டர்ன் எடுத்து மெயின் ரோட்டைப் பார்த்து வண்டியை நிறுத்துவது மாதிரி நிறுத்தி வண்டியை விரட்டி சிட்டாய் பறந்தான். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் அவர்கள் மெயின் ரோட்டிற்க்கு அருகில் இருந்தார்கள். என் போன், பேலன்ஸ் 200 ரூபாய் என் கண் முன்னே காணாமல் போய் கொண்டிருந்தது. மெயின் ரோட்டின் விளக்கு வெளிச்சத்தை தொட்டவுடன் வண்டி திரும்பவும் என்னைப் பார்த்து திரும்பியது.

எனக்கு தெளிவாக தெரிந்தது மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகப் போவது நான்தான் என்று. 10 காசுக்கு தேறாத போனுக்கு எங்களை இவ்வளவு பொய் சொல்ல வெச்சுட்டியேன்னு பைக் பார்ட்டிகள் வந்து மிதிக்கப் போறாங்கன்னு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். என் உள்ளுணர்வு சொல்லியபடி 2வது நிமிடத்தில் வீட்டிலிருந்தேன்.

7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

நீ தேறுவது கஷ்டம்தான்...

said...

கலக்கிட்டீங்க உதய்...

said...

நகைச்சுவை கலந்த த்ரில்(?) கதை.
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் !!

***

"..நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன் என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்", "..யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப
பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான்" - போன்றவை ரசித்த வரிகள் !

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
இங்கே பாருங்கள்
!!

said...

gud one!

said...

சூசூசூப்ப்ப்ப்ப்பபபரரரபுபு :-)

said...

sooperb yar

said...

ஹா ஹா... சூப்பர் கதை. ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...