Thursday, August 10, 2006

வாசுவும் வெடைக் கோழியும்

வாசு என் அத்தை பையன். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள் நாங்கள். ஊரில் எந்த கோழியைக் காணவில்லையென்றாலும் எங்கள் இருவரையும்தான் ஊரார் தேடுவார்கள். ஊரில் பண்ணாத அட்டூழியங்களே கிடையாது. எங்க மாமா "டேய், நீ உருப்பட மாட்டே, உருப்பட்டா என் பேரை மாத்திக்கிறேன்" என சபதமே போட்டார் 10 வருடத்துக்கு முன்பு. "ஏன்டா, அவர்தான் அப்படி சொல்லிருக்காருல்ல, நாம அதை மாத்திக் காட்டுவோம்டா" என சொன்னதுக்கு "இல்லைடா மாப்பிள்ள, இதுல ஒண்ணாவது அவர் சொல்படி நடக்கலாம்ன்னு இருக்கேன். நான் உருப்பட்டு, 50 வயசுல பழனிசாமி அப்படிங்கற அவர் பேர எல்லோரும் பன்னிசாமின்னு கூப்பிட்டா நல்லா இருக்காது" என்று ஊரோடு தங்கி விட்டவன். நான் எங்க அம்மாவின் அழுகைக்கும், அப்பாவின் பெல்ட்டுக்கும் பயந்து எஞ்சினியரிங் படிக்க சேர்ந்தேன் (எல்லாம் எங்கப்பாவோட வட்டிப் பணம்தான், நான் வாங்கின மார்க்குக்கு டுட்டோரியல் காலேஜில்கூட சேர்க்க மாட்டார்கள் என காலேஜ் ப்ரின்சிபால் முன்பாகவே திட்டிக் கொண்டே பணத்தை டேபிள் மேல் கொட்டி சேர்த்தார்).

அப்படி இப்படி செமெஸ்டருக்கு ஒரு அரியர் என வாங்கி காலேஜ் முடிக்கும் போது ஆச்சாராமாய், சுத்த பத்தமாய் ஒரு கப்பும் இல்லாமல் வந்ததுக்கு எங்க பண்ணையத்தில் வேலையில் இருந்த எல்லொருக்கும் கறி சோறு சமைச்சு போட்டு எங்க ஆத்தா கொண்டாடினார்கள். அப்படியே கொஞ்ச நாள் நானும் வாசுவுமாய் சேர்ந்து வயக்காடு, வீடுன்னு திரும்ப பழையபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தோம். சனி எங்க அப்பாவின் பார்ட்னர் மகள் ரூபத்தில் வந்தது. "ஏன்டா, சாரதா எல்லாம் மெட்ராஸில பத்தாயிரம் சம்பளம் வாங்கறாளாம். நீ என்னடான்னன தினமும் நாட்டுக் கோழி ஒன்னை உறிச்சு முழுங்கிட்டு இருக்க" என திட்டியதில் உண்மையிலேயே கோபம் வந்து மெட்ராஸ் வந்து, இப்போ அமெரிக்கா வந்து 5 வருடம் ஆகிறது. சாரதா இப்போது 2 குழந்தைக்கு அம்மாவாம். எங்க அம்மா அவங்க வீட்டு பொங்கலுக்கு போனப்ப சாரதாவின் சித்தி என நினைச்சு சாரதாவிடம் பேசியதையும் பின் உண்மை தெரிந்து மானம் போனதையும் சொன்ன பொழுது உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

எது எப்படியோ வாரம் ஒரு முறை வாசுவிடம் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும். ஊரில் கடைசியாக அடை வைத்த கவுத்துக்காரர் கோழியிலிருந்து அம்மணி ஆயா கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டது வரை சகலமும் சொல்லுவான். ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் அவனுக்கு போன் செய்தால்

வாசு: மாப்பிள, ஒரு நிமிஷம் இரு வண்டியை எடுத்துட்டு வெளிய வந்தர்றேன்.

நான்: டேய், வண்டி ஓட்டிடே பேசப் போறியா, எங்காவாது போயி ஏத்திடப் போற..

வாசு: நீ வேற, இந்த மாதிரி ரோட்டுல வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருந்தாதானே கொஞ்சம் மரியாதையா இருக்கும். உன்னோட கதையெல்லாம் படிச்சேன்டா, ரொம்ப நல்லா எழுதறே, எங்கூட சுத்துனதுக்கு அப்புறமும் நீ எப்படிடா உருப்பட்ட???

நான்:(என் அப்பாவின் பெல்ட் கண் முன் வந்து விட்டுப் போனது) அதெல்லாம் தலையெழுத்து. ஆமா, நீ எங்க போயி அதைப் படிச்ச? உண்மையிலேயெ நல்லா இருந்துதாடா? இங்க அவனவன் என்னை கல்லால் அடிக்காத குறையா திட்டிட்டு இருக்கான்.

வாசு: உங்க வீட்டுல கம்ப்யூட்டர்ல ஒன்னும் தெரிய மாட்டேங்குதுன்னு மாமா வந்து பாக்க சொன்னாரா, அப்பத்தான் அத்தை உன் கதை புக்குல வந்ததை காட்டினங்க.

நான்: உனக்கு டிராக்டர், கிணத்து மோட்டார்தான்டா ரிப்பேர் பண்ணத் தெரியும். கம்ப்யூட்டர்ல என்னத்தடா நோண்டுன?

வாசு:இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. உங்க குடும்பத்துக்கே குசும்பு அதிகம்டா, பிளக்கை சொருகணும் வாடான்னு கூப்பிட்டா வரமட்டேன்னு சொல்லிட்டு உங்க அப்பாதான் கம்ப்யூட்டர் ரிப்பேர்னு வரச் சொல்லி கூப்பிட்டார். சரி சரி, உன்னையை எல்லொரும் கதை எழுதுனதுக்கு நோண்டி நொங்கெடுக்கறாங்கன்னு சொன்னையில்ல, நான் ஒரு கதை சொல்லறேன். அதைப் போடு உன்னை ஓஹோன்னு சொல்லுவாங்க.

நான்: நீ கதை வைச்சிருக்கியா? அது எப்பேர்பட்ட கதையா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். நீ ஊர்க்கதை மட்டும் சொல்லு அது போதும்.

வாசு: நீ போடாட்டி பரவாயில்லை. நான் சொல்லறேன் சும்மாவாச்சும் கேளு. ஒரு ஊர்ல வாசுன்னு ஒரு பையன்...

நான்: டேய், நிறுத்து. எதுக்கு உன் பேர்ல கதை சொல்லற?

வாசு: நீ மட்டும் உம்பேர்லயே கதை எழுதிக்கற. இந்த கதைக்கு நாந்தான் ஆசிரியர். நீ என் பேரைத்தான் கதாநாயகன் பேரா போடணும்.அந்த ஊர்ல வளர்மதின்னு ஒரு பொண்ணு.

நான்: உன்னை எங்கே பார்த்தாலும் காலிலிருக்கும் செருப்பை கையில் எடுத்து ஆட்டிக் காண்பிப்பாளே, அவ பேர் மாதிரி இருக்கு!!!

வாசு: ஆமாண்டா, இது எங்க கதைதான். எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அன்டர்ஸ்டேண்டிங்ல போயிட்டு இருக்கு. எப்படியாவது இதை மட்டும் நீ புத்தகத்துல போட்டுட்டன்னு வைச்சுக்க, இதைக் காட்டி அப்படி இப்படின்னு பேசி கூட்டிட்டி ஓடிருவேன்.

நான்: பெரியவங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்டா. கூட்டிட்டு ஓடரங்கற, உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா???

வாசு: உன் காதை நான் காலா நெனச்சுக்கறேன். தயவு செஞ்சு இந்த கதையை மட்டும் போட்டுடு. எனக்கு 35 வயசுலதான் கல்யாணம் ஆகும்ம்னு ஒரு நாசமா போன ஜோசியகாரன் வேற சொல்லிட்டு போயிட்டான்.

நான்: மங்களம் உண்டாகட்டும்.

வாசு: பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்ற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.

~தொடரும்.

16 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

>>> பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்லற <<<<

:-)))))

வாசுக்கு வாழ்த்துக்கள்.. ;-)

said...

//நான்: மங்களம் உண்டாகட்டும்.

வாசு: பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்லற.//

டாப் க்ளாஸ்யா இது.. :)

said...

ha ha ha sirichhikitte padichen
seekiram continue pannunga

said...

super rouse da... kalakkure..

reading ur blogs make me feel like getting back to blogging again...

good going da...

Vasu, ALL THE BEST :)

said...

//வாசு: பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்லற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.
//

:p

said...

:-) சீக்கிரமே விவாக ப்ராப்த்தி ரஸ்து!

said...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!!!

You too Mathi... நீங்க எல்லாம் இங்க வருவீங்கன்னு நான் நினைச்சுகூடப் பார்த்ததில்லை.

said...

ராசா, யாத்திரீகன், மதி... ஏங்க நான் எழுதுனதிலயே அந்த ஒரு வரிதான் புடிச்சுதா? :-(

said...

ஏங்க வரக்கூடாதா? :) இன்னிக்குத்தான் பின்னூட்டம் விட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.

கதை (நிஜம்?) இயல்பாக இருந்தது. முடிச்ச விதம் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டது. அதனாலயும் கைவசம் அப்ப தமிழில் தட்டச்சும் வசதி இல்லாததாலும் ஒரு ஸ்மைலி போட்டுட்டுப் போயிட்டேன்.

அடுத்த பாகத்தைச் சீக்கிரம் போட்டிருங்க.

said...

//இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. உங்க குடும்பத்துக்கே குசும்பு அதிகம்டா, பிளக்கை சொருகணும் வாடான்னு கூப்பிட்டா வரமட்டேன்னு சொல்லிட்டு உங்க அப்பாதான் கம்ப்யூட்டர் ரிப்பேர்னு வரச் சொல்லி கூப்பிட்டார்.//
//நீ மட்டும் உம்பேர்லயே கதை எழுதிக்கற. இந்த கதைக்கு நாந்தான் ஆசிரியர். நீ என் பேரைத்தான் கதாநாயகன் பேரா போடணும்.அந்த ஊர்ல வளர்மதின்னு ஒரு பொண்ணு//
//உன்னை எங்கே பார்த்தாலும் காலிலிருக்கும் செருப்பை கையில் எடுத்து ஆட்டிக் காண்பிப்பாளே, அவள் பேர் மாதிரி இருக்கு.
//

அருமையா எழுதியிருக்கீங்க உதய்...
அடுத்த பாகத்தை ஆவலோட எதிர்பார்க்கிறேன்

said...

மதுரா, நீங்க கற்பூரம்ங்க... எப்படிங்க இப்படியெல்லாம்??? இது வரைக்கும் வந்தது எல்லாமே கதைதாங்க. நிஜம் எழுதர அளவுக்கு தைரியம் இல்லைங்க....

said...

//ஏங்க வரக்கூடாதா? :) //

அய்யோ மதி, வாங்க வாங்க... அடுத்த பாகம் வந்துட்டே இருக்கு..

said...

//அருமையா எழுதியிருக்கீங்க உதய்...
அடுத்த பாகத்தை ஆவலோட எதிர்பார்க்கிறேன் //

வெட்டி, ரொம்ப நன்றிங்க. வந்துட்டே இருக்குங்க, அடுத்த பாகம்.

said...

//:-) சீக்கிரமே விவாக ப்ராப்த்தி ரஸ்து! //

யாருக்கு ராகவவன்? எனக்கா, இல்லை வாசுவுக்கா???

said...

புது டெம்ப்ளேட்டு,புது படம்,புது ஊர்...கலக்கறே வாசு..

மன்னிக்கவும்..கலக்கறே உதய்...

said...

வணக்கம் உதய். எதேச்ச்சையாக உங்க கதையை படிக்க நேர்ந்தது. இந்த கதையைதான்.

//பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்ற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.//

கதை நல்லாதான் இன்தெரெஸ்தீங்-ஆ போகிட்டு இருந்தது. ஆனாலும், இந்த வரிதான் சூப்பர்.. இதை படித்து ஒரு பத்து நிமிஷமா இடைவிடாது படிச்சுட்டு, இப்போது கமெண்ட்ஸ் போடுகிறேன். நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.